திட்டமிட்டு தமிழைப் புறக்கணிக்கும் மணிரத்னம் – பொன்னியின் செல்வன் சர்ச்சை
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தி முதல்பிரதி அடிப்படையில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது.
இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், கலை இயக்குநராக தோட்டா தரணி, படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
2019 டிசம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. 2020 சனவரி 2 ஆம் தேதி இப்படத்தின் பெயர் வ்டிவமைப்பை வெளியிட்டனர்.
அதன்பின் இன்று (ஜூலை 19,2021) இன்னொரு வடிவமைப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது முதல் பாகத்துக்கானது என்றும் 2022 ஆம் ஆண்டு படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.
தமிழின் பெருமை என்று சொல்லப்படுகிற புதினங்களில் ஒன்றான கல்கி எழுதிய பொன்னியின் செல்வனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது இந்தப்படம்.
தமிழ் மன்னர்களீன் வீரத்தைப் பறைசாற்றும் கதை கொண்டது இந்தப்படம். ஆனால், படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட முதல் வடிவமைப்பிலும் இப்போது வெளியிட்டுள்ள இரண்டாவது வடிவமைப்பிலும் மருந்துக்குக் கூட தமிழ் இல்லை.
இதனால், மணிரத்னம் திட்டமிட்டே தமிழைப் புறக்கணிக்கிறார் என்கிற விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.