சினிமா செய்திகள்

சிம்பு படத் தயாரிப்பாளர் பற்றிய சர்ச்சைக்கு விளக்கம்

கங்காரு, வந்தா மல, ஸ்கெட்ச் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் நாயகி ஸ்ரீபிரியங்கா, இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சமீபத்தில் ஒரு சினிமா பத்திரிகையில் என்னைப் பற்றி மிகத் தவறான தகவல்களுடன் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. என் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த வேலை அது என்பதை செய்தியை வெளியிட்ட பத்திரிகை மூலமே தெரிந்து கொண்டேன்.

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கி விடுகிறேன். நான் எந்தத் தயாரிப்பாளர் / இயக்குநர் / மேனேஜர் கட்டுப்பாட்டிலும் இல்லை. திரைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் சுதந்திரமான நடிகை நான்.

வந்தா மல, கோடை மழை, ஸ்கெட்ச், மிக மிக அவசரம், பிச்சுவாகத்தி உள்பட இதுவரை 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அடுத்து என் நடிப்பில் ஜெஸ்ஸி என்ற படம் வெளியாக உள்ளது.

இதுவரை என் நடிப்பையும் நடத்தையையும் யாரும் குறை சொன்னதில்லை. இனியும் அப்படித்தான் இருப்பேன். எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும், என் மனதுக்குப் பிடித்த, எந்த பிரச்சினையும் இல்லாத வாய்ப்புகளை மட்டும்தான் நான் ஒப்புக் கொண்டுள்ளேன். படத்தின் பட்ஜெட், ஹீரோ என எதற்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக் கொண்டதில்லை.

ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்… என்னைப் பற்றிய எந்த தகவல் வேண்டுமானாலும், இனி எனது பிஆர்ஓ ஷங்கரைத் தொடர்பு கொண்டு சரியான தகவலை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீபிரியங்காவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகச் சொல்லப்படுபவர் யார்?

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியின் கட்டுப்பாட்டுக்குள் அவர் இருப்பதாக வந்த செய்தியைத்தான் அவர் மறுத்திருக்கிறார்.

Related Posts