ஒன்றாக வந்த சிரஞ்சீவி பிரபாஸ் மகேஷ்பாபு – ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திரையரங்குகளில் நுழைவுச்சீட்டு விலையைக் குறைத்து அண்மையில் ஆணை பிறப்பித்திருந்தார். இது தெலுங்குத் திரையுலக வட்டாரத்தில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியது.
பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நுழைவுச்சீட்டு விலையைக் குறைத்ததற்காக மாநில அரசைக் கண்டித்தனர்.
இந்நிலையில், இந்தச் சிக்கல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர உயர்நீதிமன்றம், மாநில அரசுக்கு தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைத்து திரையரங்குகளில் கட்டண நிர்ணயம் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து அந்தக் குழு, ஆந்திராவில் திரைப்பட நுழைவுச்சீட்டு விலையை அதிகரிப்பதற்கான அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளது என ஒளிப்பதிவு துறை மந்திரி வேங்கடராமையா நேற்று தெரிவித்தார். மேலும், அவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடனான நேற்றைய சந்திப்பின் போது, குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச நுழைவுச்சீட்டு விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாகவும், திரையரங்க உரிமையாளர்கள் எதிர்கொண்டு வரும் சிரமங்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிலையில், இன்று தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் சிரஞ்சீவி, பிரபாஸ், மகேஷ் பாபு உள்ளிட்டோர் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்தனர். அவர்களுடன் முன்னணி இயக்குநர்களான ராஜமவுலி, கொரட்டல சிவா உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.இந்தச் சந்திப்பின் போது சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இவர்கள் அனைவரும் ஒன்றாக வந்த புகைப்படங்கள் வெளியாகி ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சனவரி 12 ஆம் தேதி அன்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நடிகர் சிரஞ்சீவி சந்தித்து, இந்த விவகாரம் தொடர்பாக அவருடன் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.