January 22, 2026
செய்திக் குறிப்புகள்

ஜோதிகா தயாரிப்பில் சூர்யா நடிக்கும் புதியபடம் தொடங்கியது – விவரம்

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது நடிகர் சூர்யா மற்றும் பிரபல இயக்குநர் ஜித்து மாதவன் இணையும் முதல் திரைப்படம் ஆகும்.

இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, நஸ்ரியா நசீம் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்திய வெற்றிகள் மூலம் கவனம் ஈர்த்த இளம் நடிகர் நஸ்லென் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஜான் விஜய், ஆனந்த் ராஜ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு இசை சுஷின் ஷியாம், ஒளிப்பதிவு வினீத் உண்ணி பாலோட்,படத்தொகுப்பு அஜ்மல் சாபு,கலை இயக்கம் அஸ்வினி காலே, சண்டைப்பயிற்சி சேத்தன் டி சௌசா

இந்தக் கூட்டணி குறித்த தகவல்கள் வெளியானது முதலே, இரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு பெருமளவில் இருந்து வந்தது. நேற்று நடைபெற்ற பூஜை நிகழ்வில் படத்தின் நாயகி நஸ்ரியா நசீம், மலையாளத் திரையுலகின் இளம் நட்சத்திரம் நஸ்லென், நடிகர் ஆனந்த்ராஜ், இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ழகரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் சிறப்பு விருந்தினர்களாக
நடிகர் கார்த்தி,ராஜசேகர் பாண்டியன் (2டி என்டர்டெயின்மென்ட்), எஸ்.ஆர். பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர். பிரபு (ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்) உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இப்படம் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் கூறியதாவது….

புதிய திரைத்துறை, புதிய ஆரம்பம், அதுவும் சூர்யா சார் போன்ற ஒரு பெரும் நட்சத்திரத்துடன் இணைவது எனக்குக் கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது.புதிதாக ஒன்றை முயற்சிக்கிறோம்.நாங்கள் கொடுக்கவிருக்கும் இந்தப் புதுமையை இரசிகர்கள் ஏற்றுக்கொண்டு இரசிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

பூஜை முடிந்த கையோடு, படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பும் சென்னையில் தொடங்கியுள்ளது.படப்பிடிப்பு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் தயாரிப்பு குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தயாரிப்புத் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பு மூலம், இப்படத்தைத் தயாரிப்பது ழகரம் ஸ்டுடியோஸ் என்கிற புதிய நிறுவனம் என்பதும் அதன் சார்பில் ஜோதிகா தயாரிக்கிறார் என்று அறிவித்திருப்பதும் கவனம் ஈர்த்திருக்கிறது.

Related Posts