செய்திக் குறிப்புகள்

நெஞ்சுக்கு நீதி ஐம்பதாவதுநாள் கொண்டாட்டம் – தொகுப்பு

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தைச் சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக, இரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில், படக்குழு ஜூலை 10 ஆம் தேதியன்று படத்தின் 50 ஆவது நாளை பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடினர்.

முதலில் மேடையேறி நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் போனிகபூர் நடிகர் உதயநிதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைத் தயாரிப்பாளர்கள் எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜூன் துரை ஆகியோருக்கு தங்கச் சங்கிலி அணிவித்தார். இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு மோதிரம் அளித்தார். மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பரிசுகள் அளித்தார்.

இந்நிகழ்வினில்

தயாரிப்பாளர் போனிகபூர் பேசியதாவது…,

இந்தப் படத்தின் வெற்றியை உங்களுடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நெஞ்சுக்கு நீதி படக்குழுவுடன் பணிபுரிந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் நிறுவனத்தில் வலுவான கதைகள் நிறைந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழில் நிறையப் படங்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறேன். எங்கள் நிறுவனம் சார்பில் இப்பொழுது பல படங்கள் செய்துவருகிறோம். தொடர்ந்து இன்னும் பல நல்ல படங்களைக் கொடுக்க உள்ளோம். உதயநிதியுடன் இணைந்து அடுத்து ஒரு படம் உருவாக்க உள்ளோம். தமிழில் முக்கியமான நடிகர்களுடன் இணைந்து இயங்கிக் கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது என்றார்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசியதாவது..,

இந்தப் படம் சில மனிதர்களுக்கான, அறிவுரையைக் கூறும் படமாக அமைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எனது இரண்டாவது திரைப்படம், அதன் 50 ஆவது நாளில் இருப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தின் தலைப்பு எங்களுக்குக் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்கிறேன். என்னுடன் இதுவரை உடன் பயணித்து வரும் அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். படத்தை உருவாக்கப் பெரும் துணையாக இருந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், படத்தின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த நடிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமூக நீதிக்கான படத்தை நாங்கள் இணைந்து உருவாக்கியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் ஆரி பேசியதாவது..,

எனது திரைப்பயணத்தில் முதல் அங்கீகாரம் உதயநிதி அவர்களால் தான் கிடைத்தது. நெடுஞ்சாலை படத்தின் வெற்றி ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தால் சாத்தியமானது. இப்போது அவருடன் ஒரு நேர்மையான படத்திற்கான வெற்றிவிழாவில் இருப்பது மகிழ்ச்சி. முதல் முறையாக நான் நடித்த படத்திற்கான 50 ஆவது நாளில் இருக்கிறேன். இந்தப் படத்தில் பங்காற்றிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்தப் படத்தைப் பெரிய வெகுமதியாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் உதயநிதி அவர்களுக்கு நன்றி என்றார்.

ஷிவானி ராஜசேகர் கூறியதாவது..,

இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் உதயநிதி சார் ஆகியோருக்கு நன்றி. படம் வெளியாகி 50 நாட்கள் ஓடி, ஓடிடியிலும் வரவேற்பைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

நடிகை தான்யா ரவிசந்திரன் பேசியதாவது..,

இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த போனி கபூர், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர் உதயநிதி சார் அவர்களுக்கு நன்றி. இந்தப்படத்தின் வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது. எல்லோருக்கும் நன்றி என்றார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது..,

நானும், அருண்ராஜாவும் அடுத்து ஒரு படம் இணைந்து பணியாற்ற உள்ளோம். அருண் உடன் பணியாற்றுவது பெரிய அனுபவமாக இருக்கிறது. இந்தப்படத்தில் நடிப்பது முதலில் கஷ்டமாக இருந்தது. பின்னர் அருண் இந்தப்படத்திற்குக் கடின உழைப்பைக் கொடுத்தார். அது தான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்திற்காக பெரிய அர்ப்பணிப்பைக் கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் ராகுல் தான் இந்தப் படம் இந்தளவு வெற்றி பெற காரணம். நல்ல படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. எப்பொழுதும் நல்ல படத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்

இவ்வாரு அவர் பேசினார்.

விழாவில் படக்குழுவினருக்குப் பரிசுகளோடு சேர்த்து கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூலும் பரிசாகக் கொடுக்கப்பட்டது.

Related Posts