சினிமா செய்திகள்

பிகில் பார்க்கச் சென்றபோது நேர்ந்த கசப்புகள் – குமுறும் இயக்குநர்

திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கஸாலி, தன் நண்பர்களுடன் பிகில் படம் பார்க்கப் போன இடத்தில் நடந்த கசப்புகளைப் பதிவு செய்துள்ளார்.வெகுமக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அப்பதிவு….

இன்று(25.10.2019) வேளச்சேரி கிராண்ட் ஸ்கொயர் மால் ‘பிவிஆர்’ தியேட்டரில் பிகில் படம் பார்க்கச் சென்றிருந்தோம். 10 பேர்.

பிகில் படம் ஏறக்குறைய மூன்று மணி நேரம். முதல் நாள் கூட்டம் வரும் என்ற முன்னெச்சரிக்கையால் அரை மணி நேரத்திற்கு முன்பே காரை பார்க் செய்தேன்.

படத்தின் ஆரம்பம் மற்றும் கிடைக்கும் சந்தர்ப்பத்திலெல்லாம் விளம்பரம் என்று கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆனது.
படம் முடிந்து வெளியே வர நான்கு மணி நேரத்தைக் கடந்து விட்டது.

பார்க்கிங்குக்காக வயிற்றெரிச்சலோடு வாரி இறைத்த பணம் ரூ. 200/-

சாதா பாப்கார்ன் ரூ. 120/- வெளியே ரூ. 30/-

காரமெல் இனிப்பு தடவிய பாப்கார்ன் ரூ. 260/- வெளியே ரூ. 50/-

உருளைக்கிழங்கு பிரெஞ்ச ஃபிரை ரூ. 160/- வெளியே ரூ. 35/-

சிலவற்றை வாங்கியே ஆக வேண்டிய கட்டாயம். சபித்தபடியே திண்பண்டங்கள் வாங்கப்பட்டன.

வழக்கம்போல் இளைஞர்களின் டயலாக்கைக் கவனித்தேன்.
அரங்கத்துக்குள் மெல்லிய குரல்களில் வந்த கமெண்ட்கள்: “கொள்ளை விலை. எதுவும் வாங்க வேண்டாம்.”

ஒரு பள்ளி செல்லும் சிறுமி தன் அப்பாவிடம் கேட்டபோது அவர் சொன்னது ஹைலைட்: “இந்தத் தியேட்டரில விற்கிறது எல்லாம் டூப்ளிகேட். வாங்கித் தின்னா வயித்தை வலிக்கும்”

கேண்டீனில் கியூவில் நின்றவர்களில் சிலர் விலையைக் கேட்டும், போர்டைப் பார்த்துப் படித்தும் விரக்தியில் திட்டியபடியே வாங்கினர்.

ஒருவர் ஆற்றாமையில் “இப்படிக் கொள்ளையடிச்சு சொத்து சேர்த்து வச்சா வம்சம் வௌங்குமா? விலை வைக்கிறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா?” என்று புலம்பினார்.

ஃப்ரீ வாட்டர் என்று எழுதப்பட்ட தண்ணீர் மெசின் வைக்கப்பட்டிருந்த இடம் கழிவரை வாசல்!

அந்த மால் உரிமையாளரின் குழந்தைகளோ அல்லது தியேட்டர் நடத்துபவர்களின் வாரிசுகளோ மூக்கைப் பிடித்தபடி அந்தத் தண்ணீரைக் குடிக்குமா?

பணம் கொடுத்துப் படம் பார்க்க வரும் பொது மக்கள் என்ன அவ்வளவு கேவலமா?

மூத்திர நாத்தத்தில் தண்ணீர் குடிக்க வேண்டுமென்பது தலையெழுத்தா?

என்ன மாதிரியான அலட்சிய மனநிலை இது? இவர்கள் என்ன மாதிரியான டிசைன்?

என்ன தீர்வு?

டிக்கெட் எடுத்தால் 3 மணி நேரத்திற்கு ரூ. 40/- மட்டுமே பார்க்கிங்குக்கு வாங்க வேண்டும்.

கண்டிப்பாகப் பொருட்களின் விலைகளை மக்கள் வயிற்றெரிச்சல் படாமல் வாங்குமளவு நிர்ணயம் செய்தாக வேண்டும்.

மக்கள் தியேட்டர்களுக்குத் தேடி வர வேண்டுமானால் அவர்களின் பையில் கையை விட்டுக் கொள்ளையடிக்கவோ அல்லது மூத்திரச் சந்தில் தண்ணீர் இயந்திரம் அவர்கள் காரித் துப்பமாறு வைக்கவோ கூடாது.

நல்ல படம் எடுத்தால் மட்டும் போதாது. அதை ஔிபரப்பும் தியேட்டர்கள் நல்லவைகளாக, நடத்துபவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்.

இன்று நான் கேட்ட முணுமுணுப்பு பெரிதாக வெடிக்க யுகம் தேவையில்லை.

இந்த விசயங்களை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வது திரைப்படத் தொழிலுக்கு நல்லது.
அலட்சியம் என்பது பெரு நோய். அரித்து விடும்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

திரைத்துறையினர் அவசியம் கவனிக்க வேண்டிய சிக்கல் இது.

Related Posts