தனுஷை மிரள வைத்த திரைக்கதை
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் வெப் சீரிஸ் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’.2011 ஆம் ஆண்டு இந்தத் தொடரின் முதல் பகுதி வெளியானது.
கடந்த 9 ஆண்டுகளில் 8 பகுதிகளாக வெளியாகி, தன்னுடைய பயணத்தைத் தற்போது முடித்துக் கொண்டுள்ளது.
தற்போது 8 ஆவது பகுதியின் முதல் பாகம், கடந்த மாதம் (ஏப்ரல்) 14 ஆம் தேதி ஒளிபரப்பானது. மொத்தம் 6 எபிஸோடுகள் கொண்ட இந்த சீஸன் மே 20 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
‘தகுதியான இயக்குநர்களைக் கொண்டு இந்த சீஸனை மறுபடியும் எடுக்க வேண்டும்’ என சுமார் 2 லட்சம் பேர் எச்பிஓ நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், எல்லாவற்றையும் மறக்கடிக்கும் வகையில் கடைசி எபிஸோட், ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ பற்றி ட்விட்டரில் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
நடிகர் தனுஷ் இதுபற்றிக் கூறியிருப்பதாவது….
‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீஸன் 8 தந்த, முக்கியமாக கடைசிப் பகுதி தந்த கலவையான உணர்ச்சிகளையும் தாண்டி, இவ்வளவு வருடங்கள் இந்தத் தொடரைப் பார்த்து இப்போது விடைபெறுவது கடினமாக இருக்கிறது. கண்டிப்பாக ஒரு சகாப்தத்தின் முடிவு. பொழுதுபோக்கிலும் திரைக்கதையிலும் புதிய (உயர்ந்த) தரத்தைக் கொண்டுவந்த குழுவுக்கு நன்றி.
இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.











