சினிமா செய்திகள்

முழுநீள ஆக்‌ஷன் ஹீரோவாகிறார் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இப்போது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்துக்கு அடுத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது.

ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும்
அப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார் என்றும், இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஹாரிஸ்ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்படவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

இந்தப்படம் ஒரு முழுநீள ஆக்‌ஷன் படமாக உருவாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பத்தாண்டுகளாக நடித்துக் கொண்டிருந்தாலும் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து சந்தைமதிப்பில் பெரிதும் உயர்ந்திருந்தாலும் ஆக்‌ஷன் ஹீரோ எனும் அந்தஸ்து சிவகார்த்திகேயனுக்கு இன்றுவரை கிடைக்கவில்லை.

அந்தக் குறையைப் போக்கும் வண்ணம், ராஜ்குமார் பெரியசாமி கதையை உருவாக்கியிருக்கிறாராம்.இந்தக்கதையில் தொடக்கத்திலிருந்தே சண்டைக்கார நாயகனாக சிவகார்த்திகேயன் இருப்பாராம்.இதுவரை சிவகார்த்திகேயன் சண்டை போட்டால் நம்பமாட்டார்கள் என்பதை உடைக்கும் விதமாக இந்தப்படம் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

விஜய்க்கு துப்பாக்கி படம் அமைந்தது போல் சிவகார்த்திகேயனுக்கு இந்தப்படம் இருக்கும் என்று நம்பிக்கையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

வரட்டும் பார்க்கலாம்.

Related Posts