சொப்பன சுந்தரி – திரைப்பட விமர்சனம்
நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி
என்று வீரசிவாஜி படத்தில் பாடல் எழுதினார் அருண்ராஜாகாமராஜ். அவருடைய வரிகளுக்கு வடிவம் கொடுக்கிற மாதிரி சொப்பனசுந்தரி படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ்.
ஐஸ்வர்யா ராஜேஷ், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர் ஆகிய மூன்று பெண்களை முதன்மையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அம்மா தீபாசங்கர், அக்கா லட்சுமிபிரியா ஆகியோருடன் வசிக்கும் ஐஸ்வர்யாராஜேஷ், ஒரு நகைக்கடையில் வேலைபார்த்து வருகிறார்.
அங்கு 10 இலட்சம் மதிப்புள்ள ஒரு மகிழுந்து பரிசாகக் கிடைக்கிறது.அதனால் எல்லாச் சிக்கல்களும் சரியாகும் என்று ஐஸ்வர்யா நினைக்கிறார். ஆனால் அதன்பின் தான் எல்லாச் சிக்கல்களும் தொடங்குகின்றன.
அந்த மகிழுந்து ஒரு சிக்கலில் சிக்குகிறது. அதேநேரம்,அந்த மகிழுந்துக்கு ஐஸ்வர்யாராஜேஷின் அண்ணன் கருணாகரன் சொந்தம் கொண்டாடுகிறார்.இதனால் அந்த வண்டி காவல்நிலையத்தில் நிற்கவேண்டிய கட்டாயம்.
அங்கிருந்து அந்த வண்டியை யார் எடுத்தார்கள்? அந்த வண்டிக்குள் இருந்த பிணம் என்னவானது? என்பதற்கான விடைகளை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கும் படம்தான் சொப்பனசுந்தரி.
கலகலப்பு மற்றும் குடும்பப்பொறுப்பு ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்தி படத்துக்குப் பலம் சேர்க்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.சிரிக்க வைப்பது கஷ்டம் என்பார்கள் அது இயல்பாக ஐஸ்வர்யாராஜேஷுக்கு வருகிறது. சண்டைக்காட்சிகளிலும் கச்சிதமாகப் பொருந்தி உள்ளார்.
வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் லக்ஷ்மி பிரியா நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் வேடம் என்பதை உணர்ந்து பொறுப்பாக நடித்திருக்கிறார்.
சிரிக்க வைப்பதற்கென்றே தீபாசங்கர் இருக்கிறார். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, கருணாகரன்,ஷா ரா, சதீஷ் கிருஷ்ணன் ஆகியோரும் குறை வைக்கவில்லை.
பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன் ஆகிய இரண்டு பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.நகைச்சுவைக் கதைக்கு ஒளிப்பதிவிலும் பலம் சேர்க்கலாம். ஆனால் அதில் குறை வைத்திருக்கிறார்கள்.
அஜ்மலின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை கதைக்களத்துக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வோம் எனல்
என்ற குறள் போல் கள்ளத்தால் மட்டுமன்று எவ்வகையிலும் பிறன்பொருளை விரும்பக்கூடாது என்கிற கருத்தை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர். அவருடைய எண்ணத்தை ஈடேற்ற உதவியிருக்கிறார் ஐஸ்வர்யாராஜேஷ்.
– சுமன்











