செய்திக் குறிப்புகள்

உணர்வுப்பூர்வமான பாடல் தொகுப்பு உயிரிணையே – விவரம்

திரையிசைப் பாடல்களுக்கு இணையாக தனியிசைப் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெறுகிற காலம் இது.பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தனியிசைப்பாடல்களுக்கு நடுவே உணர்வுப்பூர்வமான சமூக அக்கறை கொண்ட பாடல்களும் வருகின்றன.

அந்த வரிசையில்,டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் கிளாடி ஜெராடு தயாரிப்பில்,உறவுகள் என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம் தயாராகியிருக்கிறது.டென்மார்க்கை சேர்ந்த கிளாடி ஜெராடு தயாரிக்க, பழம்பெரும் இசையமைப்பாளர் சுதர்சனம் மகன் சதா சுதர்சனம் இசையமைத்திருக்கும் இந்தப் பாடல் தொகுப்பின் வெளியீட்டு விழா மே 25 அன்று சென்னையில் நடந்தது.

இந்நிகழ்வில்,கங்கை அமரன் இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன்,தவசீலிதன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்…

விழாவில்,இத்தொகுப்பில் ஒருபாடல் பாடியிருக்கும் கங்கை அமரன் பேசியதாவது…

தயாரிப்பாளர் கிளாடி ஜெராடு அவர்களின் நல்ல எண்ணம் தான் இப்பாடல் தொகுப்பு.அருமையான சமூக உறவுகளை ஏஐ தொழில்நுட்பத்துடன் நடிகர்களை நடிக்க வைத்து ஒரு கதையினைக் கொடுத்துள்ளார்.எங்கள் அண்ணா இசைஞானியின் வாசிப்பில்தான் நாங்கள் பல பேர் வளர்ந்திருக்கோம்.எங்கள் குழந்தைகளை அண்ணனிடம்தான் சாரீரம் கற்றுக் கொள்ள அனுப்புவோம்.அப்படிப்பட்ட குருக்களுடன் வளர்ந்த பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது.இந்தக் காலத்துக்குக் குழந்தைகளுக்கு கிடைத்துள்ளதா?இல்லையா? என்பது தெரியவில்லை.

முன்பெல்லாம் ஒரு பாடலை தொடரலையாகப் பாடுவோம்.இப்பொழுது ஒவ்வொரு வரியாகப் பாடுகின்றோம்.ஏஐயில் பீட் (feed) பண்ணி பாடுகின்றோம்.அதற்கு நாம் எப்படி நம்மை பெருமைப்படுத்திக் கொள்ள முடியும்?.உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஏஐ தொழில்நுட்பம் நம்மைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.அதை நம்பி நாம் வேலை செய்தோமானால் பிற்காலத்தில் மூளை வேலை செய்யாது.ஒரு தீம் ஐ ஏஐயில் கொடுத்துவிட்டால்,அதுவே பாட்டெழுதிவிடுகிறது. இதில் எப்படி நம்ம பேரைப் போட்டுக் கொள்வது? எதற்குச் சொல்கிறேன் என்றால் வருங்காலக் குழந்தைகள் சுயமாகச் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்,எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.வருங்காலக் குழந்தைகள் தன்னிடம் இருக்கின்ற சுயரூபங்களை வெளியில் கொண்டு வரவேண்டும் என்பது என் மனமார்ந்த ஆசை.

என் அண்ணன் பற்றி அவ்வப்போது சில தவறான செய்தி பரப்பப்படுகிறது.அவர் இன்னாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்.இவர் அவருடன் இல்லை என குடும்பம் குறித்துத் தவறாகப் பேசுகிறார்கள். அண்ணன் இளையராஜாவுடன் மூத்தமகன் கார்த்திக் ராஜா இருக்கிறார்.இளையமகன் யுவன் துபாயில் இருக்கிறார்.அண்ணன் சிம்பொனி,கச்சேரி,சினிமா என பிசியாக இருக்கிறார்.அவரைப் பற்றி தவறான கருத்துகளைப் பரப்பாதீர்கள்.அப்படிப் பரப்பிய ஒருவரை நான் தொடர்பு கொண்டு பேசினேன்.அவரும் மன்னிப்பு கேட்டார்.

50 வருட வாழ்க்கையை இசைத்துறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்களை நேசித்து அழைத்துச் செல்லுங்கள்.கனவோ நினைவோ இசையே எங்கள் மூச்சு.அனைவருக்கும் நன்றி

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts