சினிமா செய்திகள்

சிம்பு படத்தைத் தயாரிக்கப் போட்டியிடும் 3 பெரியநிறுவனங்கள் – புதிய தகவல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.அப்படம் இவ்வாண்டு தீபாவளியையொட்டி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்,அரசன் படத்திற்குப் பிறகு சிம்பு நடிக்கும் பட வேலைகள் தொடங்கியுள்ளன.

அந்தப்படத்தை,’டியூட்’ படத்தை இயக்கிய கீர்த்தீஸ்வரன் இயக்கவிருக்கிறார்.இப்படத்தை தெலுங்குப்பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் என்று சொல்லப்பட்டது.

இதற்காக அலுவலகம் திறந்து முன்தயாரிப்புப் பணிகள் நடந்துவந்தன.

இந்தப்படத்தில் கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்கள் தேர்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.அனைவரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தப்படத்தின் நடிகர் நடிகையர் பட்டியல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம்,இப்படம் தொடங்குமுன்பே இதில் மாற்றம் நடக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இப்படத்தைத் தயாரிக்க முன்வந்து அலுவலகம் அமைப்பது உட்பட பல செலவுகளைச் செய்துகொண்டிருக்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்.

இப்போது,இன்னொரு தெலுங்குப்பட நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்,இப்படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறதாம்.இதுவரை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் செய்த செலவுகளைக் கொடுத்துவிடுகிறோம் படத்தை எங்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறதாம்.

இந்த விசயம் தெரிந்ததும்,ஏஜிஎஸ் நிறுவனமும் இந்தப்போட்டியில் குதித்திருக்கிறதாம்.ஏற்கெனவே சிம்பு படத்தைத் தயாரிப்பதாக இருந்தது.அது சில காரணங்களால் தள்ளிப்போயிருக்கிறது.எனவே இந்தப்படத்தை எங்களிடம் கொடுங்கள் என்று அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறதாம்.

இயக்குநர் கீர்த்திஸ்வரனுடான ஒப்பந்தம் காரணமாக சித்தாரா நிறுவனமும் சிம்பு உடனான ஒப்பந்தம் காரணமாக ஏஜிஎஸ் நிறுவனமும் இந்தப்படத்தைத் தயாரிக்க ஆர்வம் காட்டுகின்றன என்று சொல்கிறார்கள்.

இப்போது,இயக்குநர் கீர்த்திஸ்வரன் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் குழம்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்த விசயமறிந்த சிம்பு, இயக்குநர் என்ன முடிவெடுத்தாலும் எனக்குச் சம்மதம்,அவர் எந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.

கீர்த்தீஸ்வரன் இயக்கம் சிம்பு நாயகன் என்பதோடு இந்தப்படத்தில் இணையவிருக்கும் நட்சத்திரப்பட்டியல் மற்றும் இதன் கதை ஆகியன காரணமாக இந்தப்படம் நிச்சய வெற்றிப்படம் இதை நாம் கைப்பற்றிவிட வேண்டும் என ஒன்றுக்கு மூன்று நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன.

மூன்றுமே பெரிய நிறுவனங்கள் என்பதால் எதைத் தேர்ந்தெடுப்பது? எவற்றைத் தவிர்ப்பது? என்கிற முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறாராம் இயக்குநர் கீர்த்தீஸ்வரன்.

Related Posts