கதிரேசன் ராதாகிருஷ்ணன் கைதாவார்களா? – தயாரிப்பாளர்கள் சங்க பரபரப்பு
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர்களாக கதிரேசன்,ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் இருக்கிறார்கள்.இவர்கள் இருவர் மீதும் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு அதனடிப்படையில் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மீது முதல்தகவல் அறிக்கை பதியப்பட்டது இதுவே முதல்முறை என்று சொல்லப்படுவதாலும் இதனடிப்படையில் கதிரேசன்,ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் கைது செய்யப்படலாம் என்று பரவும் தகவலாலும் அச்சங்கத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
முரளி இராமசாமி தலைமையிலான நிர்வாகம் இருந்தபோது சங்கத்தின் பெண் உறுப்பினர் ராஜேஸ்வரி,சங்க நிர்வாகிகள் பற்றி அவதூறு பேசினார் என்கிற குற்றச்சாட்டு சொல்லி தற்காலிக நீக்கம் நடந்திருக்கிறது.அதன்பின் அவர் பல சட்டப்போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.அதன்பின்,மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் சங்கத்தில் மீண்டும் சேர்த்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.அதையேற்று அவரும் மன்னிப்புக் கடிதம் கொடுத்திருக்கிறார்.அந்தக் கடிதத்தை வாங்கிக் கொண்டு பெண் என்றும் பாராமல் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தினார்கள் என்பது ராஜேஸ்வரியின் குற்றச்சாட்டு.
தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமின்றி,மன்னிப்புக் கடிதம் வாங்கிய சில நாட்களில்,அவரை சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கியிருப்பதாகச் சொல்லியிருக்கின்றனர்.அப்போதும் வாட்சப் குழுக்களில் என்னைத் தகாத வார்த்தைகளில் திட்டி பதிவிட வைத்தனர்.சக தயாரிப்பாளர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்ட பின்பும் இப்படிச் செய்த குற்றத்திற்காக அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மகளிர் ஆணையத்திலும்,ஆயிரம் விளக்கு காவல்நிலையத்திலும் புகார் அளித்திருக்கிறார் ராஜேஸ்வரி.
அதனடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிந்து முதல்தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
இதுகுறித்து புகாரளித்த ராஜேஸ்வரியிடம் பேசியபோது…
சங்கத்தில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதால் என்னை சங்கத்திலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக நிரந்தரமாக நீக்குவதாக்ச் சொல்லியிருக்கிறார்கள்.சங்க நலன் கருதி அனைவர் முன்னிலையிலும் நான் மன்னிப்பு கேட்டபின்பும் பல்வேறு முறைகளில் அவமானப்படுத்தப்பட்டேன்.எனக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவேன் என்கிறார்.
இதுகுறித்து செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது…
இது பழைய வழக்கு.ஆட்சி மாற்றம் நடந்திருப்பதால் இப்போது கையிலெடுத்திருக்கிறார்கள்.இதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றார்.
நீங்கள் ராஜேஸ்வரியை தகாத வார்த்தைகள் சொல்லித் திட்டியது ஏன்? என்றதற்கு, நான் அப்படி எதுவும் பேசவில்லை,சங்கத்தில் 232 பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள் அப்படி எல்லாம் பேசவில்லை என்கிறார்.
என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
– கார்த்திக்











