சினிமா செய்திகள்

எஸ்பிபி அஞ்சலி – கடும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் அஜீத்

ஆகஸ்ட் 5 ஆம் தேதி லேசான கொரோனா தொற்று என்று மருத்துவமனையில் சேர்ந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். நலம் பெற்று திரும்புவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த வேளையில் ஐம்பத்தியிரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டெம்பர் 24 மதியம் 1.04 மணிக்கு மறைந்தார்.

அவர் மறைவுக்கு இந்தியாவின் குடியரசுத்தலைவர், பிரதமர், தமிழக முதல்வர் உட்பட பல மாநில முதல்வர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே அவருக்காகக் கண்ணீர் சிந்தியது. உலகப் புகழ் பெற்ற
சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட மட்டைப்பந்து வீரர்கள் அவருக்கு இரங்கல் குறிப்பு வெளீயிட்டனர்.

தமிழ்த்திரையுலகைப் பொறுத்தவரை, கமல்ஹாசன், ரஜினிகாந்த், விக்ரம்,சூர்யா, கார்த்தி, விஷால்,சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், ஆர்யா உள்ளிட்ட கதாநாயகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

நடிகர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தொழிலாளர்கள் அமைப்பு உள்ளிட்டு எல்லா அமைப்புகளும் இரங்கல் தெரிவித்தன.

இந்நிலையில் தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் ஆகியோர் மட்டும் எவ்வித இரங்கல் குறிப்பும் வெளியிடாமல் இருந்தனர்.இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிக் கதாநாயகர்கள் எல்லாம் இரங்கல் தெரிவித்திருக்கும்போது இவர்கள் மட்டும் எதுவும் சொல்லவில்லையே? என்கிற எண்ணம் எல்லோருக்குள்ளும் இருந்தது.

இந்நிலையில் இன்று எஸ்பிபியின் இறுதிநிகழ்வுகள் நடக்கும்போது யாரும் எதிரபாரா விதமாக விஜய் நேரில் வந்தார். எஸ்.பி.சரணை அரவணைத்து ஆறுதல் சொன்ன அவர் எஸ்பிபியின் கால்தொட்டு வணங்கி
அஞ்சலி செலுத்தினார்.

இதனால் அவருக்குப் பல திசைகளிலிருந்தும் பாராட்டுகள் வருகின்றன.

விஜய் இறுதிநிகழ்வுக்கு வந்து சென்றதால்,திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதைத் தாண்டி எஸ்பிபியின் குடும்பத்துடனும் பழகியிருந்த அஜீத் வரவில்லை என்பதும் குறைந்தபட்சம் இரங்கல் குறிப்பு கூட வெளியிடவில்லை என்பது பெரிய சர்ச்சையாகிவிட்டது.

சமூகவலைதளங்களில் அவர் பற்றிய விமர்சனங்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் சந்தித்துக் கொண்டால் இதுகுறித்துக் கவலையோடு பகிர்ந்து கொள்வதும் நடந்துவருகிறது.

இந்நிலையில், எஸ்.பி.பியின் வீட்டுக்கு வந்து எஸ்.பி.சரண் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்துத் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள வரவிருக்கிறாராம் அஜீத்.

விரைவில் அவர் எஸ்பிபியின் இல்லத்துக்கு வருவதோடு தாமரைப்பாக்கம் சென்று அஞ்சலி செலுத்துவார் என்றும் சொல்லப்படுகிறது.

அதுதான் சரி.

Related Posts