விஜய்சேதுபதி படத்துக்கு மோகன்ராஜா வந்தது எப்படி?
விஜய்சேதுபதி நடித்துவரும் மியூசிக்கல் த்ரில்லர் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’. மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தை வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஏற்கெனவே இயக்குநர் மகிழ்திருமேனி ஒப்பந்தமானார். இந்நிலையில் மீண்டும் ஒரு இயக்குநர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா.
மோகன்ராஜா இந்தப் படத்தில் எப்படி ஒப்பந்தமானார் என்று விசாரித்தால், ஜெயம்ரவி நடித்து பெரிய வெற்றி பெற்ற ‘பேராண்மை’ படத்துக்கு இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். இப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான், யாதும் ஊரே யாவரும் கேளீர் பட இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகந்த்.
ஜெயம்ரவி உடனான நட்பு தான் மோகன்ராஜாவை இந்தப் படத்துக்குள் கொண்டு வந்ததாம். தவிர, இந்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டதும் ஜெயம்ரவி என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், மோகன்ராஜாவின் எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி படத்தில் துணை நடிகராக வந்துபோவார் விஜய்சேதுபதி.