வேட்டையனோடு வெளியாகும் ஜீவா படம் – விவரம்
அறிமுக இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பிளாக்’. இப்படத்தில் ஜீவாவுக்கு இணையராக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் (Potential studios) நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.
இப்படத்தின் முதல்பார்வை மற்றும் முன்னோட்டம் ஆகியன வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.
இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே முதன்மையாகக் கொண்டு, ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவமாக இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்கப்படும். அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும். இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். அப்படிப்பட்ட கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது பிளாக் திரைப்படம். பிளாக் படம் த்ரில்லர் படமாக இருப்பதால் இரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் குறித்து படத்தின் இயக்குநர் கே.ஜி.பாலசுப்பிரமணி கூறியதாவது…
ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம்தான் படம்.இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம். த்ரில்லர் கதையைக் கொண்ட இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை ‘பிளாக்’ என்று சொல்லலாம். யாரும் எளிதில் புரிந்து கொள்ளாத அளவுக்கு நமது கறுப்புப் பக்கத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதையும் ‘பிளாக்’ என்று சொல்லலாம்.இதுதான் இந்தப் படத்தின் கதை
இவ்வாறு இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி கூறினார்.
பொட்டன்சியல் ஸ்டுயோஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை சுப்பையா சண்முகம் பெற்றுள்ளார்.அவர் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்றிருக்கிறார் என்பது மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னே வெளியில் சொல்லாத இரண்டு தகவல்கள் இருக்கின்றன.
ஒன்று, இப்படத்திற்காக அவர் கொடுத்திருக்கும் விலை சுமார் ஐந்து கோடி என்று சொல்லப்படுவது.
இரண்டாவது இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அக்டோபர் பத்து என்பது.
ஆம்,ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் வெளியாகும் அதேநாளில் இப்படமும் வெளியாகவிருக்கிறது.வேட்டையன் படத்துக்குப் போக மீதி உள்ள திரையரங்குகள் கிடைத்தாலே போதுமானது என்கிற எண்ணத்தில் வேட்டையன் வெளியாகும் நாளிலேயே இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இது தவறான முடிவு.வேட்டையன் வெளியாகும் நாளில் இப்படம் வெளியானால் இது கவனிக்கப்படாமலே போய்விடக் கூடிய ஆபத்து இருக்கிறது என்று இதை விமர்சனம் செய்கிறார்கள்.
அதேநேரம், படம் நன்றாக இருந்தால் போதும் எந்தப்படமாக இருந்தாலும் கவனமும் பெறும் வசூலும் பெறும் அதனால் இந்தப்படமும் கவனிக்கப்படும் என்று சொல்வோரும் உண்டு.
இந்த விவாதத்துக்கான விடை அக்டோபர் பத்து அன்று தெரிந்து விடும்.











