செய்திக் குறிப்புகள்

29 படத்தில் இணைந்தது ஏன்? – லோகேஷ்கனகராஜ் வெளிப்படை

மேயாதமான்,ஆடை,குலுகுலு ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ’29’ திரைப்படத்தில் விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம்- கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

2026 மே மாதம் எட்டாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் இடம் பிடித்திருக்கும் நான்கு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தினை இரசிகர்களுக்கு பிரத்யேகமாக அறிமுகப்படுத்தும் வகையில் ‘வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29 ‘ எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஏப்ரல் 29 அன்று நடைபெற்றது.

இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பி.எஸ்.வினோத் ராஜ்,கார்த்திக் யோகி,பிராங்க்ளின் ஜோசப்,அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா,சினிஷ்,ராஜசேகர் பாண்டியன்,மகேஷ் ராஜ் பஸ்லியான்,நடிகர் ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் மகேந்திரன் பேசுகையில்…

எனக்கு இது ஒரு முக்கியமான மேடை.எனக்கு 29 வயது நடக்கும்போதுதான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்தார்.அன்றுதான் என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.அதன்பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தேன்.மீண்டும் ரத்னகுமார் என்னை அழைத்து ’29’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார்.இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ரத்னகுமார் அண்ணாவிற்கு நன்றி.
நான் சோர்வாக இருக்கும் தருணத்தில் யாராவது என்னைக் கைதூக்கி விடவேண்டும் என நினைப்பேன்.பொதுவாக எல்லோருக்கும் எல்லாரும் இருப்பார்கள்.ஆனால் நான் 35 ஆண்டு காலமாக ஓடிக்கொண்டே இருக்கிறேன்.சிலர் வருவார்கள்.செல்வார்கள்.கையைப் பிடித்து அழைத்துச் செல்வார்கள்.சிலர் அழைத்துச் சென்று விட்டுவிடுவார்கள்.அது மிகவும் கடினமானதாக இருக்கும்.‌
நான் ஷான் ரோல்டனின் இசையில் நடிக்கவேண்டும் என்று நீண்டநாட்களாக ஆசைப்பட்டிருக்கிறேன்.அது இந்தப்படத்தில் நிறைவேறி இருக்கிறது.அதற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கும் நன்றி.
நான் நடிக்கும்போது பல தருணங்களில் எனக்கு தயக்கமாகவும் இருக்கும்.பயமாகவும் இருக்கும்.நாம் ஒருவகையில் நம்பிக்கையுடன் நடிப்போம்.அதை எதிரில் இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாமல் இருக்கும்.ஆனால் நான் என்னுடன் நடித்த சகநடிகரான விதுவை படத்தின் முதல்நாளிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அவருடைய நடிப்பைப் பார்க்கும்போதும் அவருடன் இணைந்து நடிக்கும்போதும் எனக்கு எந்தத் தயக்கமும்,பயமும் இருந்ததில்லை.எனக்கு மிகவும் பிடித்த சகநடிகர்.
நான் சிறியவயதில் இருந்து நிறைய நடிகர்களுடன் நடித்திருக்கிறேன்.அவர்களிடம் நான் என்னென்ன தகுதிகளைப் பார்த்தேனோ…! அவை எல்லாம் விதுவிடமும் இருக்கிறது.ஒரு கதாபாத்திரத்திற்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கி வேலை செய்கிறார். இதற்காக அவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.‌
கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்திலும் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பிலும் நடிப்பதற்கு ஆவலாக உள்ளேன். அவர்களிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்திருக்கிறேன் என்றார்.

நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில்….

இங்கு திரையிடப்பட்ட குட்டி கிளிம்ப்ஸை பார்த்திருப்பீர்கள்.இதில் சத்யாவையும்,விஜியையும் பார்த்திருப்பீர்கள்.இந்தப்படத்தில் என்னுடைய கேரக்டர் பெயர் விஜி.இது ஒரு லவ்ஸ்டோரி.29 வயதில் உள்ள சத்யா.21 வயதான பெண் விஜி.இந்தவயது இடைவெளியை தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்.ஏனெனில் 21 வயதான விஜி கேரக்டருக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் இருக்கிறது.‌அடுத்து என்ன செய்யவேண்டும்? என்பதில் கவனமாக உள்ள பெண்.அவளுடைய வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் உள்ளது. ஆனால் சத்யாவிற்கு எந்த ஒரு நோக்கமும் இல்லை.அவருக்கு விஜி மட்டும்தான் அவருடைய வாழ்க்கையின் ஒரே நோக்கம்.
நம்முடைய வாழ்க்கையில் யாரேனும் ஒருவர் வந்து மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.அதேபோல் சத்யாவின் வாழ்க்கையில் விஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கிறேன்.
கண்டிப்பாக இந்த லவ்ஸ்டோரியை பார்க்கும்போது இரசிகர்கள் எளிதாக தங்களை தொடர்புபடுத்திக் கொள்வார்கள்.இந்தப்படம் சத்யா மற்றும் விஜியின் அழகான வாழ்க்கைப் பயணம்.இந்த குட்டி கிளிம்ப்ஸ். வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29 ஐ குறிக்கிறது.இன்னும் இதுபோல் நிறைய உள்ளது.விரைவில் டீசர்,ட்ரெய்லர் ஆகியவை வெளியாகவுள்ளது.
எனக்கு எப்போதும் இதைப்போல் அசலான உண்மையான இயற்கையான அடுத்த வீட்டுப்பெண் போன்று தோன்றும் கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என விரும்புவேன்.கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும்…அதை திரையில் வெளிப்படுத்துவது கடினம்.இது போன்றதொரு சவாலான கதாபாத்திரம் எனக்குக் கிடைத்ததற்கு மகிழ்ச்சி.
இந்தக் கதை 2010 ஆம் ஆண்டின் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கிறது.அந்தக்காதல் அப்பாவித்தனமாகவும் இயல்பாகவும் நேர்மையானதாகவும் இருக்கும்.அதை நாங்கள் உணர்ந்தோம்.அதனை படத்தைப் பார்க்கும்போது இரசிகர்களாகிய நீங்களும் உணர்வீர்கள்.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளாகட்டும் வசனங்களாகட்டும் எல்லாமே நன்றாக இருக்கும்.இரசிகர்களை உணர்வுபூர்வமாக ஈர்க்கும்.இதுபோன்றதொரு அழகான விஜி எனும் கேரக்டருக்காக என்னைத் தேர்வு செய்து வாய்ப்பளித்த இயக்குநர் ரத்னகுமாருக்கு நன்றி.இந்தக்கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் எனக்குச் சில சந்தேகங்கள் இருந்தாலும் என் மீது நம்பிக்கை வைத்து உற்சாகம் அளித்த இயக்குநருக்கு நன்றி என்றார்.

நடிகர் விது பேசுகையில்….

இந்தமேடை எனக்கு மிகவும் ஸ்பெஷலான மற்றும் தனித்துவமான மேடை.13 வருடங்களுக்கு முன் கார்த்திகேயனைச் சந்தித்து அவரிடம் விவாதித்த ஒரு விசயம் இது.எட்டு,ஒன்பது வருடங்களுக்கு முன் சினிமாவிற்கு வந்தேன்.அப்போது பேசிய விசயங்கள் இப்போது நடந்திருக்கிறது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப்படத்தில் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்றினோம்.அதனால் படப்பிடிப்பு நிறைவடைந்தபோது உண்மையில் உணர்வுபூர்வமாக கண்ணீர் சிந்தினோம்.
இந்தக்கதையில் சத்யாவாக நான் நடிக்கமுடியும் என்று என்னை நம்பி வாய்ப்பளித்த இயக்குநர் ரத்னா அண்ணாவிற்கு நன்றி. ரத்னாவிடம் ஒரு பேரன்பு இருக்கிறது.இந்தப்படத்தின் மூலம் அவரின் பேரன்பு உங்கள் அனைவரையும் வசப்படுத்தும்.அவர் சொன்ன – சொல்லும் விசயம் அனைவரையும் சென்றடையும்.இந்தப்படம் மிகவும் உயிர்ப்புள்ள படைப்பு.உங்கள் அனைவருக்கும் இந்தப்படம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இந்தப்படத்திற்கு ஷான்ரோல்டனின் இசை அற்புதமான மாயாஜாலத்தை நிகழ்த்தி இருக்கிறது.அவருடைய பாடல்களும் பின்னணி இசையும் இந்தப்படத்திற்கு ஜீவன்.நான் ஒருபடத்தில் முதல்முதலாக ஹீரோவாக நடிக்கும்போது இப்படி ஒரு இசை அமைந்ததை ஆண்டவனின் ஆசியாகவே பார்க்கிறேன்.
இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளரான மாதேஷ் மாணிக்கத்திடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன்.அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கு ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.
ப்ரீத்தி அஸ்ராணி இல்லாமல் இந்தப்படத்தின் பணிகள் நடைபெற்றிருக்காது.அவர் அந்த விஜி கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் பொருந்தி இருந்தார்.அவரைத் தவிர வேறு யாராலும் அந்தக் கதாபாத்திரத்திற்கு கற்பனை செய்து பார்க்கமுடியாது.’29’ திரைப்படம் மே 8‌ ஆம் தேதி வெளியாகிறது.அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில்….

இந்தப்படத்தின் நோக்கம் என்ன? இந்தப்படத்தை உருவாக்கி இருப்பதன் பின்னணி என்ன? என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
நான் நிறைய லவ் படங்களில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.இதனை மாற்றவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தபோது இயக்குநர் ரத்னகுமார் என்னைச் சந்தித்தார்.ஏதாவது வித்தியாசமானதாக தனித்துவமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.அவர் கதை சொன்னார் நான் இதுவரை கேட்ட கதைகளிலேயே என்னை அதிகம் பாதித்த கதை இது.நான் நிறைய லவ் படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.இருந்தாலும் இந்தப்படத்தின் கதை எனக்குள் வறண்டு போயிருந்த காதல் உணர்வை மீட்டது.அதனால் அவருக்கு முதலில் ஒரு நன்றி.
29 திரைப்படம் முழுவதும் ரத்னகுமாரின் உலகம்.இந்தப்படத்தில் ஒரு பங்காக இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
படப்பிடிப்பின் முதல்நாள் நான் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றிருந்தேன்.அங்கு நடிகர் விது வேறுமாதிரியாக இருந்தார்.நடிகர் குரு சோமசுந்தரம் நிறையபடங்களில் அவர் நடித்திருப்பார்.ஆனால் அவர்தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது உடனடியாக தெரியாது.அந்தஅளவிற்கு அவர் கதாபாத்திரத்துடன் பொருந்தி இருப்பார்.அதேபோல் விதுவும் அன்று படப்பிடிப்புதளத்தில் இருந்தார். அழகான தோற்றம்.இந்தப்படத்தின் கதை அவர் மீதுதான் பயணிக்கிறது.
ப்ரீத்திஅஸ்ராணி இந்தப்படத்திற்கு ஒரு பில்லர் போல் இருக்கிறார்.பொதுவாக என்னுடைய ஒவ்வொரு படத்திலும் பெண்களுக்கான குரல் (வுமன் வாய்ஸ்) தானாக அமையும்.இதில் அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார். இது எனக்கு பின்னணி இசை அமைக்க உதவியாக இருந்தது.
இப்போதைய ட்ரெண்டிங்கில் காதல் படங்கள் என்றால் ‘டேட்டிங்.. என அவுட் லேயர்லேயே படங்கள் இருக்கிறது. ஆனால் காதலைப் பற்றி சற்று ஆழமாகச் சிந்திக்கும் கதைகள் இல்லை.அந்த அளவிற்கு காதலில் ஆழமாகச் செல்வதற்கு பலரால் முடியவில்லை.நவீன வாழ்க்கை அதற்கு இடம் தருவதில்லை.கவிதை போன்ற காதல் இன்றைய ஃபாஸ்ட்டான லைஃப்பில் எத்தனை பேருக்குக் கிடைக்கும் என்று தெரியாது.
காதல் என்பது ஆன்மா சம்பந்தப்பட்ட உணர்வு என்பதைதான் இந்தப்படம் எனக்குக் கற்றுக்கொடுத்தது.
நான் மிகவும் பிராக்டிக்கலான மனிதர்.பொதுவாக திரைப்படத்தில் கிளைமாக்ஸ் பிறகு காதல் இருக்குமா? என்று கேள்வி‌ எழுப்புபவன்.ஏனெனில் காதல் என்றால் பாடல்..கவிதை..என்று எனக்குள் ஒரு எண்ணம் இருக்கிறது.
திரும்பத் திரும்ப ஏன் காதல் பாடல்கள் வந்துகொண்டே இருக்கிறது என எண்ணும்போது..காதல் என்பது ஆத்மாவை தேடுவது போன்றது என்பதை உணர்ந்தேன்.அதேபோல் 29 திரைப்படம் காதல் என்பது ஒரு உரையாடல்.அதிலும் நேர்மையான உரையாடல் என்பதைப் பற்றிப் பேசுவதால்..இந்தப்படத்தைப் பற்றி நான் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன்.
இந்தப்படத்தைப் பற்றிச் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால்…தமிழ்நாட்டினுடைய காதல்படங்கள் மற்ற ஊர் காதல்படங்கள் போல் கிடையாது.நான் அரசியல் ரீதியாகச் சொல்லவில்லை.காதலை எதார்த்தமாகக் கையாள்வது.‌கவிதையாகக் கையாள்வது. நிலவைப் பற்றிப் பேசினாலும் நம்மஊரில் நம்மமொழியில் பேசினாலும் சொன்னாலும் அது புதிதுதான்.நிலவு ஒன்றுதான்.ஆனால் அதைப்பற்றி பேசுவது புதிதாக இருக்கும்.தமிழ்நாட்டினுடைய காதல்படங்களின் தனித்துவமான வரிசையில் 29 நிச்சயமாக இடம் பெறும்.இதை இரசிகர்களே மே 8 ஆம் தேதி அன்று திரையில் பார்த்துத் தெரிந்து கொள்வார்கள்.இந்தப்படத்தின் வெற்றிவிழாவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில்….

இந்தப்படம் ஒருவரது சுயஅடையாளத்தைப் பற்றிப் பேசுகிறது.அதற்குப் பொருத்தமான ஆள் என்னைத்தவிர இந்தச்சூழலில் வேறு யாரும் இருக்கமுடியாது.
என்னை இப்போது மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்றால்…லோகேஷ் கனகராஜ் அவருடைய நண்பர் ரத்னகுமாருக்காக இப்படத்தைத் தயாரிக்கிறார் என்றனர்.கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விதுவிற்காக இப்படத்தைத் தயாரிக்கிறார் என்றனர்.அப்படி என்றால் நான் என்ன செய்கிறேன்? என்று யோசித்தால்..இதற்கு கார்த்திக் சுப்புராஜூம் லோகேஷ் கனகராஜும்தான் பதில் சொல்லமுடியும். அப்போதுதான் நான் யார்? என்பதை இந்த உலகத்திற்குச் சொல்லமுடியும்.
இந்தப்படத்திற்கு நான்தான் தயாரிப்பாளர் என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வதைப்போல் சொல்லவேண்டும் போலிருக்கிறது. இதனால் இது ஒருவரது சுயஅடையாளத்தைப் பற்றிய விசயங்களுக்குள் எளிதாகச் சென்றுவிடுகிறது.இதனை நான் சந்தோசமாகத்தான் சொல்கிறேனே தவிர வருத்தப்பட்டுச் சொல்லவில்லை.
நான் -கார்த்திக் சுப்புராஜ்- லோகேஷ் கனகராஜ் -ஆகியோர் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருந்து..154 கோடி ரூபாய் பட்ஜெட் வரை பலபடங்களில் பணியாற்றிருக்கிறேன்.ஆனால் இங்குள்ளவர்கள் என்னைத் தயாரிப்பாளராகப் பார்த்ததே இல்லை.பார்க்கப் போவதுமில்லை.இந்தநிலையில் நான் இருக்கும்போது..இயக்குநர் ரத்னகுமார் சுயஅடையாளத்தைப் பற்றி கேள்வியை எழுப்பி,ஒரு படத்தை எங்களிடம் சமர்ப்பிக்கிறார்.‌இந்தக்கதையைக் கேட்டபிறகு இதைவிட அழகாக சுயஅடையாளத்தைப் பற்றியும் காதலைப் பற்றியும் யாராலும் சொல்லிவிட முடியாது.அதனால் இந்தப்படத்துடன் நான் உணர்வுபூர்வமாக தொடர்புகொண்டேன்.
நேற்று கூட மதன்கௌரி உடனான ஒரு சந்திப்பின்போது கிரிக்கெட் வீரர் டோனிக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.அதைக் கேட்டபிறகு டோனிக்கே அந்த நிலைமை என்றால்…நாம் எல்லாம் யார்..? என நினைத்துக் கொண்டேன்.
நாங்கள் இதுவரை 18 படங்களைத் தயாரித்திருக்கிறோம்.இதில் எங்களுடைய பார்ட்னர்களுடன் இணைந்து என்ன மாதிரியான சினிமாவை தயாரிக்கவேண்டும் என்பது குறித்து விவாதிக்கிறோம்.ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் இருந்து எந்த மாதிரியான படங்கள் வெளியாகும் என்ற கேள்வி எழும்போது..ஒருபக்கம் கமர்சியலும் இருக்கும்.மறுபக்கம் சொல்லவேண்டிய கதைகளும் இருக்கும். நாங்கள் மற்றவர்கள் எளிதில் யூகிக்காத வகையிலான படங்களை தயாரிக்கிறோம்.அத்துடன் புதுப்புது இளம் திறமைசாலிகளை கண்டறிந்து வாய்ப்புகளும் வழங்குகிறோம்.அத்துடன் எங்களுடைய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ என்ற பிராண்டுதான் முக்கியம் என்பதையும் உணர்ந்து இருக்கிறோம்.
லோகேஷ் கனகராஜுக்கு சத்தியமாக இதுவரை இப்படத்தின் கதை தெரியாது.அவர் இதுவரை நம்பிக்கையின் பேரில் மட்டுமே தொடர்ந்து முதலீடு செய்து வந்திருக்கிறார்.எங்கள் மீது அத்தகைய நம்பிக்கையை வைத்ததற்காக லோகேஷ் கனகராஜிற்கு இந்ததருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
லோகேஷ் கனகராஜ்- கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இரண்டு இயக்குநர்கள் இணைகிறார்கள் என்றால்…அந்தப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு நிச்சயமாக இருக்கும்.அதற்கு சரியான பதிலை அளிப்பதுபோல் இந்த 29 படம் இருக்கும்.இந்தப்படத்தை இயக்கிய ரத்னகுமாருக்கு நன்றி.‌
விது என்னுடைய தம்பி.இந்த தம்பிக்காக அண்ணன் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.இதுதான் உண்மை.இதை நான் பெருமிதமாக சொல்கிறேன்.திறமை இருந்தால் நாங்கள் நிச்சயம் வாய்ப்பை வழங்குவோம்.விதுவிற்கு திறமை இருக்கிறது.ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கும்போது அந்தப்படத்தின் முக்கிய கேரக்டரான ஷட்டாணி கேரக்டருக்கு விதுதான் பொருத்தமாக இருப்பார் என்று கார்த்திக் சுப்புராஜ் தீர்மானித்தார்.அந்த வாய்ப்பை ஏற்று விது தன் திறமையை வெளிப்படுத்தினார்.அதன்பிறகு ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக மைக்கேல் கேரக்டரில் தோன்றி தன் திறமையை மீண்டும் நிரூபித்தார் விது.இந்தப்படத்தில் சத்யாவாக அவர் நடித்திருக்கிறார் தொடர்ந்து எங்கள் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களில் அவர் நடிக்க உள்ளார்.இந்த வருடம் முடிவதற்குள் அவர் கைவசம் மூன்று படங்கள் இருக்கும்.அவை எல்லாம் இரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நான் நம்புகிறேன்.
இந்தப்படத்திற்குப் பிறகு நடிகை ப்ரீத்தி அஸ்ராணியை தமிழக மக்கள் அனைவரும் தங்களுடைய விஜியாக பார்ப்பார்கள்.
இந்தப்படத்தில் சத்யாவுக்கும் விஜிக்கும் இடையேயான லவ் ஸோல்ஃபுல்லாக இருக்கும்.
செவன் ஜி ரெயின்போ காலனி…விண்ணைத்தாண்டி வருவாயா…அலைபாயுதே…போன்ற படங்களை இரசித்த இரசிகன் நான்.என்னைப்போல் பல இரசிகர்கள் இருக்கிறார்கள்.அந்தவரிசையில் 29 நிச்சயமாக இடம்பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக இருக்கிறது.
இந்தப்படத்திற்கு ஷான்ரோல்டனின் ஸோல் ஃபுல் மியூசிக் ரொம்ப பிளஸ்.
இந்தப்படத்திற்காகப் பணியாற்றிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சோனி மியூசிக் நிறுவனத்திற்கும் வெளிநாட்டு உரிமையை பெற்ற ஏ பி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் தமிழகம் முழுவதும் வெளியிடும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி.
ஏப்ரல் 30 ஆம் தேதி தனுஷ் படம் வெளியாகிறது.மே 14-ஆம் தேதி சூர்யா சாரின் படம் வெளியாகிறது.இரண்டுபடத்திற்கும் நடுவில் அழகான சூப்பரான காதல்கதையாக 29 எனும் படமும் வெளியாகிறது அனைத்துப் படங்களையும் திரையரங்குகளுக்குச் சென்று பார்க்கவேண்டும்.‌
நடிகர் ரியோராஜுடன் விரைவில் ஒரு படத்தில் இணைகிறோம்.அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

தயாரிப்பாளர் -இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில்….

ஸ்டோன்பெஞ்ச் நிறுவனத்தைத் தொடங்கும்போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஆந்தாலஜி பாணியில் ஒரு படத்தை உருவாக்கினோம்.‌ரத்னகுமார் இயக்கிய’மது’எனும் குறும்படமும் இடம் பிடித்தது.அந்தக் குறும்படத்தைப் பார்க்கும்போதே ரத்னகுமாரின் எழுத்தும் இயக்கமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அப்போதே அவரிடம் ஏதாவது திரைப்படத்திற்கான கதை இருக்கிறதா? என்று கேட்டோம்.அப்போதுதான் நாங்கள் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கலாம் என்று தீர்மானித்திருந்தோம்.அப்போது ரத்னாவிடம் கதையை கேட்போம் என்று சொன்னேன்.அவரும் இரண்டு,மூன்று ஐடியாக்களை சொன்னார்.ஆனால் நான்தான் ‘மது’ எனும் குறும்படத்தையே முழுநீளக் காதல் திரைப்படமாக மாற்றித்தர முடியுமா? என்று கேட்டேன்.அதுதான் மேயாதமான்.அதுதான் எங்களது முதல் திரைப்படம். மேயாதமான் எங்களது முதல்படம் என்பதில் எங்களுக்குப் பெருமை.
என்னைப் பொறுத்தவரை ரத்னகுமார் நல்ல எழுத்தாளர்.அவருக்குள் பயங்கரமான ஹியூமர் இருக்கிறது.அவரிடம் சாதாரணமாக பேசினாலே சிரித்துக்கொண்டே இருப்போம்.ஜாலியாக இருக்கும்.ஒரு விசயத்தை அவர் பார்க்கும்விதமே வேறுவகையாக இருக்கும். அதை அவர் சொல்லும்போது காமெடியாக இருக்கும்.
மேயாதமான் படத்தில் காமெடி இருந்தாலும் அதற்குள் ஒரு அழுத்தமான லவ்வும் இருக்கும்.அந்தப்படத்தின் பணிகள் முடிந்ததும் இப்படத்தின் கதையைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினோம்.‌அதன்பிறகு அவர் இது வேண்டாம் என்று வேறொரு கதையை எழுதத் தொடங்கினார்.
என்னைப் பொறுத்தவரை ஒரு லவ்ஸ்டோரி என்றால் அதில் யார் ஃபெர்பார்ம் செய்கிறார்கள் என்பதைதான் நான் பார்ப்பேன்.ஏனெனில் ஸ்ட்ராங்கான ரைட்டிங் இருக்கும்போது..ஆர்டிஸ்ட் நன்றாக இருந்தால் அது வெற்றி பெறும்.
இந்தப்படத்திற்கு முதலில் நட்சத்திர நடிகர்களை வைத்து தயாரிக்கலாம் என்று திட்டமிட்ட போது..ரத்னகுமார்தான் புதுமுகம்தான் பொருத்தமாக இருக்கும் என்றார்.அதன்பிறகு என்னுடைய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்த விதுவை அவர் ஆடிசன் செய்துதான் வாய்ப்பளித்தார்.
நாம் நிறைய காதல் படங்களைப் பார்க்கிறோம் ஆனால் ஒரு சிலபடங்கள்தான் எவர்கிரீனாக நினைவில் நிற்கும்.எனக்கு செல்வராகவன் சாரின் படங்கள் மிகவும் பிடிக்கும்.அதிலும் 7 ஜி ரெயின்போ காலனி என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் ஆன படம்.அந்த லவ் எத்தனை வருஷம் ஆனாலும் நம்மால் மறக்கமுடியாது.
அதேபோல் கௌதம்மேனன் காதல்கதைகளை அவருடைய ஸ்டைலிஷ் ஆன மேக்கிங்கில் சொல்வார்.
அதேபோன்று வித்தியாசமான தனித்துவமான காதல்கதைதான் ரத்னகுமாரின் 29.
லோகேஷ் கனகராஜை போல் ரத்னகுமாரும் லவ்விற்காக ஒரு யுனிவர்ஸை உருவாக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இப்படத்திற்காக லேட்டஸ்டாக வெளியான ‘பொல்லாத ஆசைகள்..’ என்ற பாடலை ஷான்ரோல்டன் பாடியிருக்கிறார்.அவரது குரல் நன்றாக இருக்கும்.அந்தப்பாடலை படத்தின் இறுதியிலாவது வைக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப்படத்திற்கு என்னமாதிரியான ட்ரெய்லரை வெளியிடலாம் என விவாதித்துக் கொண்டிருந்தபோது..எங்களுக்கு பெரிய குழப்பம் இருந்தது இரசிகர்களை திரையரங்கத்திற்கு வரவைக்கும் வகையில் ட்ரெய்லர் இருக்க வேண்டுமா?…படம் எதைப்பற்றிப் பேசுகிறது என்பதைச் சொல்லும் வகையில் ட்ரெய்லர் இருக்கவேண்டுமா? என்ற வகையில் எங்களுடைய விவாதம் சென்று கொண்டிருந்தது.‌
அப்போது இயக்குநர் ரத்னகுமார் இந்த 29 எனும் படம் சத்யா எனும் இளைஞனின் 29 வயது வாழ்க்கையில் நடைபெற்ற பத்து அத்தியாயங்கள்தான் கதை என்பதால்…அதிலிருந்து ஒரு அத்தியாயத்தை நாம் வெளியிடலாமா..! என கேட்டார்.அவருடைய இந்த ஐடியா எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌
இந்தப்படம் என்ன மாதிரியான படம்…இந்தப்படத்தின் கதாபாத்திரங்கள் யார்…படம் எதைப்பற்றிப் பேசுகிறது…காதல் என்றால் என்ன…ஆகிய எல்லாவற்றையும் இணைத்துச் சொல்வதுபோல் இந்தக்காட்சி இருந்தது.இந்தக்காட்சியில் ரத்னகுமாரின் ரைட்டிங்கும் ஃபிலிம்மேக்கிங்கும் நன்றாக இருந்தது.அதுவும் ஒரு சிங்கிள்ஷாட்டில் இருந்தது.‌
எங்களுடைய ஆந்தாலஜி படத்தில் எப்படி ரத்னகுமாரின் மது குறும்படம் இருந்ததோ..அதேபோல் லோகேஷ் கனகராஜ் களம் எனும் குறும்படமும் இருந்தது.ரத்னகுமாரும் லோகேஷ் கனகராஜும் நண்பர்கள்.லோகேசும் நானும் இணைந்து ஒரு படம் தயாரிப்பது மகிழ்ச்சிதான்.
நான் தயாரிப்பில் கிரியேட்டிவ் பகுதியைத்தான் கவனிக்கிறேன்.மற்ற அனைத்து விசயங்களையும் கார்த்திகேயன் சந்தானம்தான் கவனித்துக் கொள்கிறார்.எங்கள் நிறுவனத்தின் எல்லாப்படத்தையும் சாத்தியமாக்கியது கார்த்திகேயன் சந்தானம்தான்.இந்த 29 திரைப்படத்தையும் பொறுப்பேற்றுக்கொண்டு நிறைவேற்றிக் காட்டியது கார்த்திகேயன் சந்தானம்தான்.அவர்தான் லோகேஷ் கனகராஜ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.‌
இப்போது ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் என்பதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.இரண்டு பெரிய திரைப்படங்களுக்கு நடுவில் நாங்கள் வெளியிடுகிறோம்.இந்த 29 திரைப்படத்தை அனைவரும் பார்த்து இரசித்துக் கொண்டாடும் வகையில்தான் உருவாக்கி இருக்கிறோம் என்றார்.

இயக்குநர் ரத்னகுமார் பேசுகையில்….

மேயாதமான் படத்தினை முடித்தபிறகு ஒருநாள் வீட்டில் இருந்தபோது இரவுநேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது பேஸ்புக்கில் ‘வாட்ஸ் இன் மைண்ட்’ என்றுதான் ஒரு விசயத்தை போஸ்ட் செய்தேன்.என் ரூமில் மழையின் சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது.ஒரு குடையில் ஒரு பையனும் பெண்ணும் நின்று கொண்டிருக்கிறார்கள்.மழை பெய்து கொண்டிருக்கிறது.அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்..என்ற ரீதியில் ஒரு உரையாடலை எழுதி,போஸ்ட் செய்தேன்.மறுநாள் அதற்கு ஏகப்பட்ட லைக்ஸ்.. கமெண்ட்ஸ்..வந்திருந்தது.அதில்’அந்த இரண்டு கேரக்டர் அதற்குப்பிறகு என்ன செய்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்’ என்று சிலர் பதிவிட்டனர்.அப்போது அந்த கேரக்டருக்கு நான் பெயர்கூட வைக்கவில்லை.ஏனென்றால் அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களை நினைத்துக் கொள்வார்கள் என்று விட்டுவிட்டேன்.
சரி என்று மற்றொரு நாள் அவர்கள் அடுத்ததாக எங்கே சந்தித்து இருப்பார்கள்? என்று ஒரு இடத்தைத் தேர்வு செய்தேன்.அதுதான் இப்போது நீங்கள் இங்கு பார்த்த கிளிம்ப்ஸ்.
இதைத்தான் நான் இரண்டாவது முறையாக எழுதி பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன்.எனக்குள் தோன்றியதை பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன்.
அப்போது ஒரு நண்பர் எனக்கு போன் செய்து எதுக்கு இப்போது நீ ஃபேஸ்புக்கில் இப்படி போஸ்ட் ஏன் போடுகிறாய்? இதற்குள் ஒரு நல்லகதை இருக்கிறது.இரண்டு கேரக்டர்ஸ் ஒரு சிறிய குட்டி ஸ்பேஸ்க்குள் கனெக்ட் பண்ண முடிகிறது.இதனை ஒரு படமாக உருவாக்கலாம். நீ உருவாக்கவில்லை என்றால்…வேறு யாரேனும் இதனை படமாக உருவாக்கி விடுவார்கள்.தயவுசெய்து அதனை டெலீட் செய்து விடு ‘ என்றார்.
இதேதான் நான் என்னுடைய மது குறும்படத்தை யூடிபில் போஸ்ட் செய்தபோதும் நடந்தது.அந்த மது மேயாதமான் படமாக ஆனதை போல்..பேஸ்புக்கில் போஸ்ட் போட்ட விசயங்கள் தற்போது 29 எனும் படமாக உங்களிடம் வந்திருக்கிறது.
நான் கதை எழுத உட்கார்ந்த இப்போது என் மனதிற்குள் தோன்றிய இரண்டு கற்பனை கதாபாத்திரங்களின் பயணம்தான் இந்தப்படம்.
கார்த்திகேயன் சந்தானம் இல்லாமல் இந்தப்படம் இல்லை.‌அவர்தான் இந்தக்கதையை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில்தான் நீ உருவாக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
லோகேஷ் எனக்கு வேறு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார்.அவரே ஒரு கதையைக் கொடுத்து அதைப் படமாக உருவாக்கு என்றார்.‌கார்த்திக் சுப்புராஜ் நான் ஒரு ஆக்சன் ஓரியண்டட் கதையைக் கொடுக்கிறேன் அதை நீ டைரக்ட் செய் என்றார்.ஆனால் இவர்களுக்கு மத்தியில் கார்த்திக் சந்தானம்தான் நீ 29 படத்தை இயக்கு.இதுதான் நீ என்று எனக்குச் சுட்டிக்காட்டினார்.
அடையாளத்தை நாம் வாங்கமுடியாது அதுவாக அமைவதுதான்.நான் யார்? என்ற கேள்வி எனக்குள் வரும்போதுதான் நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேஸ்புக்கில் போட்ட போஸ்ட்தான் ஒரு கதையாக உருவாகி நான் யாரு என்று கேட்டால் தெரியவில்லை என்று சொல்லும் அளவிற்கு நோக்கமே இல்லாத ஒரு 29 வயது பையன்.அவருடைய வாழ்க்கையில் 20 களில் இருக்கும் ஒரு பெண் வருகிறாள்.அந்தப்பெண்ணும் அவனும் இணைந்து பயணிக்கும்போது தான் யார்? என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.இது ஒரு படமாக தயாரானது.
எனக்கு 29 வயதில்தான் நிறைய விசயங்கள் நடந்ததால்..இப்படத்தின் டைட்டில் 29 என்பதாக இருக்கவேண்டும் என தீர்மானித்தேன்.
29 எனும் டைட்டிலை புரியவைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது.இது டோர் நம்பரா…பஸ் நம்பரா…ஏதேனும் ஒரு நாளா…அதெல்லாம் இல்லை.இது வயது எனக் குறிப்பிடுவதற்கு ஒரு போராட்டமே நடந்தது.‌
நீங்கள் பார்த்த கிளிம்ப்ஸ்..சத்யாவின் வாழ்க்கையில் உள்ள பத்து அத்தியாயங்களில் இரண்டாவது அத்தியாயம்.இது உங்களுக்குப் பிடித்திருக்கிறது…உங்களை உங்களுடன் எளிதில் தொடர்பு கொள்கிறது என்றால்…. தாராளமாக மீதி இருக்கும் அத்தியாயங்களும் உங்களுக்குப் பிடிக்கும்.நீங்கள் இந்தப்படத்தை இரசித்துப் பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
இந்தப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில்….

இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்புவிருந்தினர்களுக்கும் நன்றி.இவர்கள் அனைவருக்கும் மிகக் குறுகியகால அவகாசத்தில்தான் அழைப்பு விடுத்தேன்.அனைவரும் தங்களது பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு இங்கு இந்தப்படத்திற்கு ஆதரவு அளிக்க வருகை தந்திருக்கிறார்கள்.
29 எனும் இந்தப்படம் ஜீ ஸ்குவாட் நிறுவனமும்,ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் திரைப்படம்.என்னுடைய தயாரிப்பில் இது முதல்படம்.இதற்கு முன் ‘ஃபைட் கிளப்’ எனும் ஒரு படமும்,’மைக்கேல்’ எனும் ஒரு படத்தையும் வழங்கி இருக்கிறேன் அதுவும் நண்பர்களுக்காகத்தான் வழங்கினேன்.
இந்தப்படத்தைத் தயாரிப்பதற்கு முழு முதல்காரணம் என் நண்பர் ரத்னகுமார்தான்.ரத்னகுமார் ஒரு எழுத்தாளரைக் கடந்து ஒரு நண்பரைக் கடந்து நீண்டநாட்களாகவே சக போட்டியாளராக இருந்திருக்கிறார்.‌
2013 ஆம் ஆண்டில் முதல்படத்தை இயக்குவதற்காக அலைந்து கொண்டிருந்தபோது..இங்கு இப்போது இருக்கும் எல்லா இயக்குநர்களும் ஒன்றாகதான் சுற்றிக் கொண்டிருந்தோம்.அப்போது நானும், ரத்னகுமாரும் குறும்படத்தை இயக்கிவிட்டு தெருத்தெருவாக சுற்றிக் கொண்டிருந்தோம்.2012 ஆம் ஆண்டில் பீட்சா படம் வெளியானது.அந்தப்படம் எங்களுடைய கனவுகளுக்கெல்லாம் மிகப்பெரிய கதவை திறந்து வைத்தது.எனக்கு மட்டுமல்ல இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய இயக்குநர்களுக்கு எல்லாம் அது மிகப்பெரிய கதவை திறந்து வைத்தது.
அதன்பிறகு கார்த்திக் சுப்புராஜ் பெஞ்ச் டாக்கீஸ் எனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.அப்போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு ஆந்தாலஜி படத்தை உருவாக்கினார்.அந்த அவியல் எனும் ஆந்தாலாஜி படத்தில் என்னுடைய களம் எனும் குறும்படமும் இருந்தது.கார்த்திக் சுப்புராஜ் ரத்னகுமாரை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை.என்னையும் தொழில்நுட்ப ரீதியாக அவியல் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.
அப்போதிலிருந்து தற்போதுவரை அனைவரும் நண்பர்களாகத்தான் இருக்கிறோம்.ஆனால் தற்போது ரத்னா இயக்க ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து நானும் ஒரு தயாரிப்பாளராக பொறுப்பேற்று இருக்கிறேன்.இந்த ஒரு இடத்தை வழங்கியதற்காக மக்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியதற்குக் காரணமே இதுதான்.நாம் வளரும்போது நம்முடன் இருந்தவர்களையும் வளர்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினேன்.இதற்கும் இன்ஸ்பிரேஷன் கமல்சார்தான்.சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில்தான் முதலீடு செய்யவேண்டும் என்பதை அவர்தான் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்.அவரிடமிருந்துதான் இந்தப்பாடத்தை நாங்களும் கற்றுக்கொண்டோம்.
இந்தப்படம் மட்டுமல்ல எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து உருவாகும் படங்களும் படங்கள் அனைத்தும் புது புது இளம் திறமைசாலிகளை அறிமுகப்படுத்துவதற்காகத்தான்.இதற்கு 29 திரைப்படம் சிறந்த தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்.என்னுடைய படங்களுக்குக் கொடுத்த ஆதரவைப் போல் என்னுடைய தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கும் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நான் இதுவரை இந்தப்படத்தைப் பார்க்கவும் இல்லை.கதையைக் கேட்கவும் இல்லை.எல்லாம் ரத்னகுமார் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான்.அவர்மீது வைத்திருக்கும் குருட்டு நம்பிக்கையால் அவர் பொறுப்புணர்வுடன் படத்தை இயக்கியிருப்பார்.இந்தப்படத்தை மே எட்டாம் தேதி இரசிகர்களுடன் திரையரங்கில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.
படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
மே எட்டாம் தேதி 29 வெளியாகிறது.அதற்கு முன் வெளியாகும் ‘கர’ திரைப்படத்திற்கும்,அதற்குப்பின் வெளியாகும் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts