சூர்யா படத்துக்கு வந்த திடீர் சிக்கல்
அண்மையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் சூரரைப் போற்று படத்தைத் திரையிடமாட்டோம் என்று முடிவெடுத்தார்கள். அந்தப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் இப்படம் குறித்து இப்போது கூட்டம் போட்டு முடிவெடுக்கக் காரணம் என்ன?
சனவரி மாதத்தில் சூரரைப் போற்று தமிழ்த் திரைப்படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்குப் போகவிருக்கிறது என்று சொன்னார்கள். அதுகுறித்து அப்படத்தைத் தயாரித்திருக்கும் 2டி நிறுவனம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில்….
தற்போது ‘சூரரைப் போற்று’ படக்குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம்.
அந்த வரிசையில் பொதுப்பிரிவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவேண்டும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர்? என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள்.
என்று சொல்லப்பட்டிருந்தது.
ஆனால், ஆஸ்கர் போட்டிக்கு வரும் பிராந்திய மொழிப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகியிருக்க வேண்டும் என்கிற விதி தளர்த்தப்படவில்லையாம்.
இதனால் சூரரைப்போற்று போட்டியில் பங்கேற்கவியலாத சூழல் ஏற்பட்டுள்ளதாம். அதனால் இப்போது படத்தைத் திரையரங்குகளில் வெளியிட்டு அதைக்காட்டி போட்டியில் பங்குபெறலாம் என முயன்றனராம்.
படக்குழுவின் இந்த முயற்சியைத் தொடர்ந்தே இப்படத்தைத் திரையிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்திருக்கிறார்களாம்.
அவர்களைச் சமாதானம் செய்து படத்தைத் திரையரங்குகளில் வெளீயிடும் முயற்சி தொடர்கிறதாம்.











