December 11, 2025
சினிமா செய்திகள்

விஷால் 33 படப்பெயர் அறிவிப்பு – இது மாநாடு 2?

விஷால் இப்போது புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்திருக்கிறார். விஷாலின் 31 ஆவது படமான இதை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே தயாரித்திருக்கிறது. இப்படம் சனவரி 26,2022 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார். விஷாலின் 32 ஆவது படமான அதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவற்றிற்கடுத்து விஷால் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 16,2021 மாலை ஆறு மணிக்கு வெளியானது .

விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தை இயக்கவிருப்பது ஆதிக்ரவிச்சந்திரன். தயாரிக்கவிருப்பது எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத்.

பெரும்பொருட்செலவில் பேன் இந்தியா எனப்படும் பன்மொழிப்படமாக இது உருவாகவிருக்கிறது என்று விஷால் சொல்லியிருந்தார்.

இந்தத் திரைப்படத்திற்கு ‘விஷால் 33’ என்று தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2022 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் பெயரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.அதன்படி, இந்தப் படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடித்திருந்த ‘பாட்ஷா’ திரைப்படத்தில் மார்க் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரகுவரன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘ கடவுளே எல்லா நல்ல கதையையும் என்கிட்டவே அனுப்புறீயே’ என்றும் ‘இந்தக் கதையை மாநாடு-2 என்றே சொல்லலாம் அந்த அளவுக்குத் திரைக்கதை உள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts