சினிமா செய்திகள்

எஸ்.பி.சரண் இயக்கும் அதிகாரம் – தற்போதைய நிலை இதுதான்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமின் மகன் எஸ்.பி.சரண் திரைப்படத் தயாரிப்பாளர். பல படங்களைத் தயாரித்திருக்கும் அவர் இயக்குநராகியிருக்கிறார்.

இணையத் தொடர் ஒன்றை அவர் இயக்கிக்கொண்டிருக்கிறார்.இத்தொடருக்கு ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ்,படத்தொகுப்பு பிரவீன் கே.எல், இசை தீனா தேவராஜன், கலை இயக்குநர் ரெமியன், சண்டைப் பயிற்சி ஸ்டண்ட் செல்வா.

இந்தத் தொடரில் அதுல்யா ரவி, பிக்பாஸ் அபிராமி, ’வெள்ளைப்பூக்கள்’ தேவ், ஏ.எல்.அழகப்பன், இளவரசு, ஜான் விஜய், அரவிந்த் ஆகாஷ், வினோதினி வைத்யநாதன், ‘சூது கவ்வும்’ சிவகுமார், கஜராஜ், ராஜேஷ், வின், வினோ ஆகியோர் நடிக்கிறார்கள்.

‘அதிகாரம்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இத்தொடரின் படப்பிடிப்பு சனவரி மாதம் தொடங்கியது.

இந்தத் தொடர், சமகால அரசியலையும், அதன் போக்கையும் மிகத் தீவிரமாய் பேசவிருக்கிறதாம். அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு பக்கம் காய்களை நகர்த்திக் கொண்டிருக்க, அவர்களை வீழ்த்தி அதிகாரத்தை அடையத் துடிக்கும் சாதாரண இளைஞன் ஒருவனைப் பற்றிய கதை.

மொத்தம் பத்து பாகங்களாகத் தயாராகவிருக்கும் இத்தொடரின் படப்பிடிப்பை அறுபது நாட்களில் முடித்துவிடத் திட்டமிட்டிருந்தார்களாம். பத்துநாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரோனா குறுக்கே வந்துவிட்டது. அதனால் தடைபட்டிருக்கும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறதாம்.

Related Posts