சப்தம் படத்தில் ஒலியில் பேய் – வியக்க வைக்கும் ஈரம் அறிவழகன்
ஈரம் படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “சப்தம்”.
காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக, ஒலியை மையமாக வைத்து, இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் ஆதி நாயகனாக நடிக்க லக்ஷ்மிமேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி ஆகியோர் மிக முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்.
7ஜி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் 7ஜி சிவா தயாரித்திருக்கும் இப்படம் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா பிப்ரவரி 19 அன்று சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்….
ஓளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் பேசியதாவது……
இயக்குநர் அறிவழகன் சாருடைய ஈரம் திரைப்படத்தில் நான் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினேன். அதன் பிறகுதான் நான் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிய ஆரம்பித்தேன். எனது முதல் படமான “மகாமுனி” திரைப்படத்தைப் பார்த்து, அறிவழகன் சார் என்னை இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக மாற்றினார். அதற்கு அவருக்கு நன்றிகள். இந்தத் திரைப்படம் எனது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிக முக்கியமான படம்.இது போல ஒரு படம் மீண்டும் அமைவது கடினம். இந்தப் படத்திற்காக குழுவாக இணைந்து கடினமான உழைப்பை வழங்கியுள்ளோம்.இந்தப் படத்தில் ஹீரோ சார் முதல், படக்குழுவினர் அனைவரும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். இந்த குழுவோடு பயணித்தது மிக்க மகிழ்ச்சி என்றார்.
படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் பேசியதாவது….
இந்த மேடையில் நான் நிற்கக் காரணம், 15 வருடம் முன் ஈரம் படத்தின் டிரெய்லரை எடிட் செய்ய,இயக்குநர் அறிவழகன் தந்த வாய்ப்பு தான். அதன் பிறகு வல்லினம் அதிலிருந்து, வாழ்க்கை இங்கு வரை என்னைக் கொண்டு வந்துள்ளது. இப்போது சப்தம், இப்படத்தைப் பொறுத்தவரை ஹோம்கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடுவது போலத் தான். கிரியேட்டிவாக வேலை பார்க்க முழு சுதந்திரம் இருந்தது. சின்னச் சின்ன விசயங்கள் இதில் நிறைய சேர்த்திருக்கிறார் அறிவழகன்.சவுண்டுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்துள்ளோம், கண்டிப்பாக இரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஹீரோ ஆதி எனக்கு நண்பர், அவரிடம் என்ன வேண்டுமானாலும் பேச முடியும், இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகக் கடினமாக உழைத்துள்ளனர். இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் என்றார்.
ஒலி வடிவமைப்பாளர் உதயகுமார் பேசியதாவது….
அறிவழகனின் ஈரம் தவிர அனைத்துப் படத்திலும் வேலை பார்த்துள்ளேன், ஈரம் வேலை பார்க்கவில்லை என்ற வருத்தம் இருந்தது, அது இந்தப் படத்தில் நீங்கி விட்டது. பொதுவாக இயக்குநர்கள் கதை சொல்லும் போது, சவுண்டுக்கு என்றே இரண்டு காட்சிகள் வைத்திருக்கிறேன் என்று சொல்வார்கள், ஆனால் இந்தப்படம் முழுவதுமே சவுண்டை வைத்துத் தான். எங்களுக்கு இந்த மாதிரி படம் கிடைப்பது அரிது. எனக்கு இப்படம் கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. என் குருநாதர் தீபன் சக்கரவர்த்தி சார், ஊமை விழிகள் படங்கள் எல்லாம் செய்தவர், இந்தப்படம் ஊமை விழிகள் படம் போன்ற உணர்வைத் தரும். இந்த டிரெண்டில் அந்தப்படம் வந்தால் எப்படி இருக்குமோ? அது மாதிரி இருக்கும். தமிழில் ஒரு சில இயக்குநர்கள் தான் டெக்னிகலாக படம் செய்வார்கள், அதில் அறிவழகன் மிக முக்கியமானவர். தொழில் நுட்பக் கலைஞர்கள் சவுண்டுக்கு முக்கியத்துவம் தந்து, பெரும் ஒத்துழைப்பு தந்தனர். தமனின் இசை மிகப்பெரிய பலமாக இருக்கும். ஆதி மிக அற்புதமாக நடித்துள்ளனர். இந்தப்படம் இரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்றார்.
இயக்குநர் அறிவழகன் பேசியதாவது….
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, என்னுடைய படம் தியேட்டருக்கு வருகிறது. ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து புதுமை செய்தது போல், இப்படத்தில் சவுண்ட் வைத்துச் செய்யலாம் என்ற போது, நிறைய சவால்கள் இருந்தது.ஈரம் படம் இப்போது வரை டெக்னிகலாக பாராட்டப்படும் படம்.தண்ணீரில் ஹாரர் எனும் போது, அந்த ஆவியின் உருவத்தைக் காட்டுவது, மிக எளிதாக இருந்தது. ஆனால் சவுண்டை வைத்து பேயைக் காட்டுவது எப்படி என, கதை எழுதும் போதே சவாலாக இருந்தது. சவுண்டில் தியேட்டரில் டால்ஃபி சவுண்ட் புரமோ வருமல்லவா, அந்த குவாலிட்டியை திரையில் கொண்டு வரத் திட்டமிட்டோம். 7ஜி ஃபிலிம்ஸ் நிறுவனம் 7ஜி சிவா இப்படத்திற்கு மிக உறுதுணையாக இருந்தார், இந்தப்படத்தின் பட்ஜெட் பெரிதான போது, இந்தப்படத்தின் டெக்னிகல்களை புரிந்து கொண்டு, இப்படத்திற்கு முழு ஆதரவாக நின்றார். அவர்கள் ஏற்கனவே டிஸ்டிரிபூசனில் இருந்ததால் படத்தினை பற்றிய முழு புரிதல் அவரிடம் இருந்தது. படம் கேட்கும் அனைத்துச் செலவுகளையும் செய்யுங்கள் என்றார். அவரால் தான் இந்தப்படம் இந்த அளவு தரத்துடன் வந்துள்ளது அவருக்கு என் நன்றி. மேலும் என் தொழில் நுட்பக் கலைஞர்களும் மிக உதவியாக இருந்தார்கள். ஆடியோகிராஃபர் உதயகுமார் என்னுடன் பல காலமாக வேலை பார்த்து வருகிறார். எடிட்டர் சாபு, ஒளிப்பதிவாளர் அருண், இசையமைப்பாளர் தமன் எல்லோரும் இணைந்து இந்தப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். மற்ற ஹாரர் படத்திலிருந்து இந்தப்படத்தில் என்ன வித்தியாசம்? ஹாரரில் பல ஜானர்கள் இருக்கிறது எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஈரம் படம் உங்களை ஒரு அனுபவத்திற்குள் கொண்டு சென்றது போல, இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தில் புளூ டோன் வைக்கலாம் என்றார், அது மிக வித்தியாசமாக இருக்கும். சாபு ஜோசப் அவரும் இப்படத்தில் நிறைய புதுமைகள் செய்துள்ளார். படத்தில் என் வியூ தவிர அவரோட வியூ எப்படி இருக்கிறது எனப் பார்ப்பேன், அதில் அவர் கடினமாக உழைத்துள்ளார். அவருக்கு நன்றி. விவேகா என் எல்லாப்படங்களிலும் வேலை பார்த்துள்ளார், இந்தப்படத்திலும் பாடல்கள் நன்றாக இருக்கும். ஆர்ட் டைரக்டர் மனோஜ் மிக வித்தியாசமான செட்டை அமைத்துத் தந்தார். சவுண்ட் உதயகுமார் சார், பல விசயங்கள் புதுமை செய்துள்ளார். அவர் நிறைய பெரிய படங்கள் செய்து வருகிறார். இந்தப்படத்தில் எங்கே சவுண்ட் வேண்டும், எங்கு வேண்டாம் என நிறைய விவாதித்தோம். அதை மிகக் கச்சிதமாக செய்துள்ளார். ரொம்ப நாட்களாக ஆதி சாரும் நானும் வேலை செய்ய, பேசி வந்தோம், இந்தப்படத்தை கதை சொன்னவுடன் செய்யலாம் என்றார், அவர் தயாரிப்பில் ஃபர்ஸ்ட் காப்பியில் இப்படத்தைச் செய்துள்ளேன், தமனை நிறையத் தொந்தரவு செய்துள்ளேன், ஆனால் அதை எல்லாம் கடந்து, அவர் பின்னணி இசை வரும் போது பிரமிப்பாக இருந்தது. நாம் நினைத்த கதையை ஒருவர் நம்பி உள்ளே வர வேண்டும், அது தான் எனக்கு கம்ஃபடபிள், ஆதி என்னை நம்பி உள்ளே வந்தார். இந்தப்படம் மிகவும் வித்தியாசமான ஹாரர் அனுபவமாக இருக்கும். என் நேர்மை தான் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது என நம்புகிறேன், இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி என்றார்.
நடிகர் ஆதி பேசியதாவது….
இந்த மேடை மிக முக்கியமானது. “சப்தம்” என் நண்பர்களிடம் இந்தப்படம் பற்றி சொல்லும் போது ஏன் ஹாரர் எனக் கேட்பார்கள், ஹாரர் என்றாலே கொஞ்சம் கீழாக பார்க்கும் பார்வை இருக்கிறது, அப்போ ஈரமும் ஹாரர் தானே என்பேன், ஈரம் சூப்பராக இருக்கும் என்று பாராட்டுவார்கள். அது ஹாரரில் வித்தியாசமாக இருக்கும் என்று பாராட்டுவார்கள், அது தான் அறிவழகன் சார், அவர் இயக்கத்தில் ஈரம் மாதிரி இன்னொரு படம் கிடைக்குமா? என நினைத்துள்ளேன், அதை மீண்டும் அறிவழகன் எனக்குத் தந்துள்ளார். இந்தப்படத்தில் பாராநார்மல் இன்வஸ்டிகேட்டராக நடித்துள்ளேன்,இது முழுக்க முழுக்க இந்த டீமின் படம், அவர்கள் உழைப்பு தான் முழுப்படமும். ஹாலிவுட் படம் மாதிரி என அடிக்கடி சொல்வோம் ஆனால் இங்கு நம்ம சினிமாவை ஹாலிவுட்டை தாண்டிய தரத்தில் உருவாக்கியிருக்கும் படம் தான் சப்தம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.











