செய்திக் குறிப்புகள்

கவனம் ஈர்க்கும் முதல்பார்வை – சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி

நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தயாரிக்க முன்னுரிமை கொடுக்கும்
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது, தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கும் தங்களது புதிய திரைப்படமான ‘கொட்டுக்காளி’-யை அறிவித்துள்ளது.

இப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘கூழாங்கல்’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இயக்குநரான பி.எஸ். வினோத்ராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறும்போது, ​​

“ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த மண்ணின் கூறுகளை அதன் தன்மை மாறாது படமாக்கித் தந்து அது சர்வதேச அளவில அங்கீகாரம் பெறுவது திரைப்படத்துறையின் விலைமதிப்பற்ற தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க ‘டைகர் அவார்ட்’ வென்று, ‘கூழாங்கல்’ திரைப்படத்தின் மூலம் நம் தமிழ்த் திரையுலகைப் பெருமைப்படுத்திய இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ் ஒரு ஜெம் என்று சொல்வேன்.

எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்தப் படத்தில் பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும், அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

இணைத் தயாரிப்பாளர் கலை அரசு கூறும்போது, ​​“’கூழாங்கல்’ படத்தில் இயக்குநர் வினோத்ராஜின் பணி எங்களுக்குப் பிடித்திருந்தது. இப்போது, அவருடைய இயக்கத்தில் அடுத்த படத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், சூரி மற்றும் அன்னா பென் போன்ற திறமையான கலைஞர்கள் இந்தப் படத்தில் இணைந்திருப்பது எங்களை உற்சாகப்படுத்துகிறது. SK புரொடக்ஷன்ஸ் எப்போதும் நல்ல படங்களைக் கொடுக்கவே ஆர்வம் காட்டி வருகிறது. அந்த ஆர்வத்திற்குத் தீனி போடும் வகையிலான நல்லதொரு திரைப்படமாக இது இருக்கும்”என்றார்.

இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கூறும்போது, ​​

“திரைப்படத்துறையில் அனுபவம் மிக்கவர்களுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சூரி மற்றும் அன்னா பென் போன்ற மிகவும் திறமையான நடிகர்களுடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது”

இவ்வாறு அவர் கூறினார்.

இப்படத்தின் முதல்பார்வை இன்று வெளியிடப்பட்டது. பார்த்தோர் திரும்பத் திரும்பப் பார்க்கும் வண்ணம் அமைந்துள்ளது.

Related Posts