ஹிட் லிஸ்ட் கண்டிப்பா ஹிட் – திரண்டு வாழ்த்திய திரையுலகம்

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் சூரியகதிர், கார்த்திகேயன் ஆகியோர் இயக்கத்தில் இயக்குநர் விக்ரமன் மகன் விஜய்கனிஷ்கா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஹிட் லிஸ்ட்’.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அதே 13 அன்று நடைபெற்றது.
படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது.
படத்தின் முன்னோட்டம் மற்றும் இரண்டு பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன.
அதற்கடுத்ததாக சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள்தேசிங்குபெரியசாமி,பொன்ராம்,மித்ரன்.R.ஜவஹர்,கார்த்திக்சுப்புராஜ்,’சிறுத்தை’சிவா,பேரரசு,
கதிர்,சரண்,எழில்,இராஜகுமாரன்,சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின்,ஆர்.வி.உதயகுமார்,பி.வாசு, சந்தானபாரதி,பார்த்திபன், பாக்யராஜ், ரமேஷ் கண்ணா,நடிகர்கள் சரத்குமார், ஜீவா, ஜெயம் ரவி, ஜெயபிரகாஷ்,தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு,டி.சிவா, சுரேஷ் காமாட்சி, தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முதலில் படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ்.ரவிக்குமாரின் அழைப்பிற்கிணங்க படத்தின் இரண்டு இயக்குநர்களில் ஒருவரான சூர்யகதிரை இயக்குநர் பாக்யராஜ் அறிமுகம் செய்து வைத்தார். இன்னொரு இயக்குந்ர் கார்த்திகேயனை இயக்குனர் பி.வாசு அறிமுகம் செய்து வைத்தார்.
படத்தின் கதாநாயகனான விஜய் கனிஷ்காவை நடிகர் ஜெயம் ரவி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் படக்குழுவினர் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
நிகழ்வில் கே.எஸ்.ரவிக்குமார் அனைவரையும் வரவேற்று பேசும் பொழுது,
இந்தத்திரைப்படம் உருவாவதற்குக் காரணமான ரமேஷ் கிராண்ட் கிரியேஷன்ஸ் கார்த்திக், கமலக்கண்ணன், சீனிவாசன், விஜயகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து மரியாதை செய்கிறேன். எதார்த்தமாக வீட்டில் பேசும்போது விஜய் கனிஷ்கா கதாநாயகனாக நடிக்க விரும்புகிறார், நீங்களே உங்கள் தயாரிப்பில் அறிமுகம் செய்து வையுங்கள் என்று அவர்கள் கூறியது இன்று உண்மையாகியுள்ளது.
முதலாவதாக ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் அவர்களுக்கு,என் மீதும் இயக்குநர் விக்ரமன் சார் மீதும் அன்பு பாராட்டி, இந்தத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஒத்துக் கொண்டு நடித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கதைக்காகவும் கதாபாத்திரத்துகாகவும் ஒத்துக் கொண்டு கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் நடித்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட சித்தாரா அவர்களுக்கும் மிக்க நன்றி.துணைக் கதாப்பத்திரங்களில் நடித்த அனைவருக்கும் மிக்க நன்றி. என்னதான் என்னுடைய உதவி இயக்குநர்களையே இந்தத்திரைப்படத்தின் இயக்குநர்களாகப் பணிபுரிய வைத்தாலும் அவர்கள் திரைக்கதையைச் சிறப்பாக உருவாக்கினார்கள். அதேபோல் அவர்கள் எப்படிப் பணிபுரிகிறார்கள்? என்று சரத்குமார் மற்றும் கௌதம் இருவரிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.
இயக்குநர் தேசிங்கு பெரியசாமி பேசும்போது,
பல வித தடைகளுக்கு நடுவே உருவாகி இருக்கும் இப்படத்தின் தரம் டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. விஜய் கனிஷ்கா கதாநாயகனாக நடித்திருப்பதை விட, கதாபாத்திரத்திரமாக சரத்குமார், கௌதம் மேனன் போன்றோர் நடுவே சிறப்பாக நடித்திருக்கிறார்.கண்டிப்பாக இத்திரைப்படம் வெற்றியடையும் என்று வாழ்த்துக்கிறேன் என்றார்.
இயக்குநர் பேரரசு பேசியதாவது….,
இவ்விழாவை ஒரு குடும்ப விழாவாகவே பார்க்கிறேன். முன்னணி திரைப்பட நிறுவனங்களைப் போலவே சூப்பர்குட் ஃபிலிம்ஸ் போன்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் தலைசிறந்த இயக்குநர் விக்ரமன். அவருக்கு தனது குருபக்தியை காமிக்கும் விதமாக அவரது மகனை வைத்துப் படம் தயாரித்துள்ளார் கே.எஸ்ரவிக்குமார் அவர்கள். விக்ரமன் மற்றும் ரவிக்குமார் ஆகியோரின் அன்பிற்கு பாத்திரமாக இந்தப்படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். ஒரு வெற்றிகரமான கதாநாயகனாக வருவார் விஜய் கனிஷ்கா; மேலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்றார்.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசும்பொழுது,
இயக்குநர் விக்ரமன் அவர்கள் இயக்கிய திரைப்படங்களும் கே.எஸ்ரவிக்குமார் இயக்கிய திரைப்படங்களும் தயாரிப்பாளர்களுக்கு நல்ல வருவாய் ஈட்டி தந்தது. நீங்கள் இருவரும் செய்த சாதனைகள் விஜய் கனிஷ்காவுக்கும் வந்து சேரும் என்று நான் வாழ்த்துகிறேன் என்றார்.
நடிகர் ஜெயம் ரவி பேசும் பொழுது,
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் விக்ரமன் அவர்களின் அன்பிற்காகத்தான்,இங்கே இவ்வளவு இயக்குநர்கள் வந்துள்ளார்கள். இருவருமே இந்திய சினிமாவின் சிறந்த ஆளுமைகள். அவர்களின் பெயரை காப்பாற்றி இந்திய சினிமாவில் ஒருவராக விஜய்கனிஷ்கா வருவார் என்று நான் நம்புகிறேன். நான் அறிமுகம் ஆகும்போது எப்படி ஒரு ஆதரவு எனக்குக் கிடைத்ததோ, அதேபோல உங்களுக்கும் கிடைத்துள்ளது.அதேபோல உங்களை நான் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. இரட்டை இயக்குனர்களாக இருப்பதற்கு அவர்களையும் வாழ்த்துகிறேன். வெற்றிப்படம் என்பது இப்போதே தெரிகிறது இந்தப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.
நடிகர் ஜீவா பேசும் பொழுது,
கே.எஸ்ரவிக்குமார் மற்றும் விக்ரமன் இயக்கத்திலும் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். இது ஒரு குடும்ப விழா. நான் அறிமுகமாகும் போதும் என்னை வாழ்த்த இதேபோல அனைவரும் வந்திருந்தனர். ஆளும் என்னாலும் சிறந்த படங்களைத் தர முடிந்தது.இவர்களின் வாழ்த்து உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்தாக அமையும்.நீங்களும் மேன்மேலும் வளருவீர்கள் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
கார்த்திக் சுப்புராஜ் பேசும் பொழுது,
விஜய் கனிஷ்கா, இசையமைப்பாளர் சி.சத்யா மற்றும் இயக்குனர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல என்னுடைய இரண்டாவது திரைப்படம் ஜிகர்தண்டா வெளியாவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் விக்ரமன் சார் மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர்தாம். இந்த நேரத்தில் அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கே.பாக்யராஜ் பேசும் போது,
இது ஒரு இசை வெளியீட்டு விழாவாக அல்லாமல் நன்றி தெரிவிக்கும் விழா போல் உள்ளது.சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.இந்த மாதிரியான இயக்குனர்களை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவுக்கு சேவை செய்துள்ளார். திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. விஜய் கனிஷ்காவிற்கும் திரைப்படம் வெற்றியடையவும் வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசும்பொழுது,
தலைசிறந்த ஒரு அரசனின் பெயரை தன் மகனுக்கு சூட்டியுள்ளார்.விக்ரமன் அவர்களின் படத்தலைப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் கனிஷ்காவிற்கு இந்த அளவுக்கு ஆதரவு இருப்பது வரவேற்கத்தக்கது. விஜய் கனிஷ்காவிற்கும் இயக்குனர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத்திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.இரசிகர்கள் அனைவரும் திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டுகிறேன் என்றார்.
சரத்குமார் பேசும்பொழுது,
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் விக்ரமன் இருவரும் என் வாழ்வில் முக்கியமான நபர்கள் அவர்கள் எனக்கு மறக்க முடியாத தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். இவர்கள் சிறந்தவர்கள் அவர்கள் என்றும் வாழ்நாளில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான்.எவ்வளவோ பிரச்சினைகள் எனக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் வந்தாலும் அவர் ஒரு தங்கமான மனிதர். இது ஒரு குடும்ப விழா.விஜய் கனிஷ்கா மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் சி.சத்யா அவர்களும் சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்பொழுது,
இந்த மேடையே ஒரு பாசிட்டிவான மேடையாக இருந்தது.பாக்யராஜ், பார்த்திபன்,விக்ரமன்,ரவிக்குமார் ஆகியோரைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. விக்ரமன்,ரவிக்குமார் இருவருமே தயாரிப்பாளர்களின் இயக்குனர்கள் ஆவர். இந்தத்திரைப்படத்தில் அவர்கள் இணைந்திருப்பது நட்பு ரீதியானது. விஜய் கனிஷ்கா அவர்களின் நடிப்பு சிறப்பாக உள்ளது. அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இந்தப்படம் வெற்றியடைய பத்திரிக்கை நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறேன் என்றார்.
ஆர்.வி.உதயகுமார் பேசும் பொழுது,
நான் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் இயக்குநர் விக்ரமன் ஆகியோருடன் சமகாலத்தில் பயணித்து ஒன்றாகப் பழகியவர்கள். இயக்குநர்கள் சங்கம் சிறப்பாகச் செயல்பட விக்ரமன் அவர்களும் ஒரு காரணம். பலவித குடும்ப சூழலுக்கு நடுவே தன் மகனை சினிமாத்துறையில் சரியாக தடம் பதிக்க வைத்துள்ளார். ‘ஹிட் லிஸ்ட்’ என்ற இத்திரைப்படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டியது இரசிகர்களாகிய, உங்கள் கையில் உள்ளது என்றார்.
இயக்குநர் விக்ரமன் பேசும் பொழுது,
நான் பேச வேண்டியதை கே.எஸ்.ரவிக்குமார் அவர்களே பேசிவிட்டார். இந்தத்திரைப்படத்தை தயாரித்ததற்கு அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அப்பாவாக அல்லாமல், ஒரு இயக்குநராகச் சொல்கிறேன்; விஜய் கனிஷ்கா சிறப்பாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக வெற்றியடையும். அவர் மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்
இவ்வாறு அவர் பேசினார்.