திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு – ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தினர் (ஃபெப்சி) ஒப்பந்தம் போடுவார்கள். அதை எல்லாத் தயாரிப்பாளர்களும் கடைபிடிக்கவேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக ஊதிய உயர்வு சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் அதிருப்தியாக இருந்தனர்.
இப்போது அந்தப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாம்.
அதன்படி, திரைப்படத் தொழிலாளர்களுக்கு இப்போது வாங்கும் சம்பளத்தைவிட முப்பது முதல் நாற்பது விழுக்காடு வரை ஊதிய உயர்வு தர தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாம்.
இந்த ஒப்பந்தம் தமிழ்நாடு அரசின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகவிருக்கிறதாம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் எனும் சிறப்பைக் கொண்டிருக்கும் மார்ச் 1 ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வருகிறது என்று திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருக்கிறார்.










