செய்திக் குறிப்புகள்

சிம்பு அவர்களுக்கு நன்றி – நெகிழ்ந்த சந்தானம்

சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் தில்லுக்கு துட்டு 2 படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (பிப்ரவரி 2,2019) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட சந்தானம் பேசியதாவது…..

நீண்ட நாள் கழித்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள் இடைவிடாமல் சிரித்தார்கள். அதை நேரடியாகப் பார்த்தோம்.

அதுபோல, இப்படமும் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கலந்து பேசி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். நான் இந்தளவுக்கு வளர்வதற்கு எனக்கு முதுகெலும்பாக இருப்பது மாறன், ஆனந்த், குணா, சுந்தர், சேது மற்றும் ஜான்சன் ஆகியோர்கள் தான்.

‘லொள்ளு சபா’ தொலைக்காட்சி நிகழ்ச்சி வித்தியாசமானது என்று பெயர் வாங்கியது போல், இப்படத்திலும் வித்தியாசமான நகைச்சுவையாக இருக்க புது முயற்சி எடுத்திருக்கிறோம்.

ஷ்ரதா சிவதாஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தின் இரண்டாவது பாதி கேரளா பின்னணியில் இருப்பதால் கேரளா பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரைத் தேர்ந்தெடுத்தோம்.’

மொட்டை’ ராஜேந்திரன்,விஜய் டிவி ராமர், விபின், சிவசங்கர் மாஸ்டர், விஜய் டிவி தனசேகர், சி.எம்.கார்த்திக், ஊர்வசி, இயக்குநர் மாரிமுத்து, ஜெயப்ரகாஷ், பிரஷாந்த், இன்னும் பலரும் பணியாற்றியிருக்கிறார்கள். கேமரா மேன் தீபக் நன்றாக பணியாற்றியிருக்கிறார்.

பேய்ப் படத்திற்கு காட்சிகள் தான் முக்கியம். அது தரமாக இல்லையென்றால் பொம்மைப் படம் போல இருக்கும். அதற்காக கூடுதலாக உழைத்திருக்கிறார்.அதேபோல், காதல் பாடலை நன்றாக அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

ஷபீர் நன்றாக இசையமைத்திருக்கிறார்.இரண்டு பாடல்களுக்கும் சாண்டி தான் நடனம் அமைத்திருக்கிறார். கலை இயக்குநர் மோகன், சண்டை பயிற்சி தினேஷ்.

நடிகராக இருப்பதை விட தயாரிப்பாளராக இருப்பது தான் கஷ்டம்.
பலரும் ஆர்யா திருமணத்தைப் பற்றித் தான் கேட்கிறார்கள். அதை அவரிடமே கேட்டுச் சொல்கிறேன்.

வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏற்கனவே 3 படங்கள் முடிந்த நிலையில் இருக்கிறது. வெளியாவதற்கு தாமதம் ஆகிறது.

நான் இயக்குநரானால் ஆர்யாவை வைத்துத் தான் படம் எடுப்பேன். சிம்புவிற்கென்று கதை எழுதி இயக்க வேண்டும். எந்தப் படம் எடுத்தாலும் நல்ல படமாக இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

என்னை ‘லொள்ளு சபா’வில் அறிமுகப்படுத்திய பாலாஜி அண்ணன், சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்பு அவர்களுக்கு நன்றி. என்னைக் கதாநாயகனாக்கிய ரசிகர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

என் ரசிகர்கள் நீங்க தான் என்னுடைய முன்மாதிரி என்று கூறும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்திரா சௌந்தராஜன் இப்படத்தின் கதைக்கு உறுதுணையாக இருந்தார். மையக் கதையை அவர் தான் எழுதியிருக்கிறார். எனக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts