என் மனதில் இருந்த வலியை நீக்கியது ஸ்டார் – கவின் வெளிப்படை

இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளனர்.
இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு மே 2 ஆம் தேதி நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின், இணை தயாரிப்பாளர் தீபக், இயக்குநர் இளன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், நாயகன் கவின், நடிகைகள் அதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன், நடிகர்கள் ‘ராஜா ராணி’ பாண்டியன், தீப்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் இளன் பேசுகையில்….
எனக்கு மிகவும் எமோஷனலான தருணம் இது. நம் எல்லோரிடத்திலும் கனவு ஒன்று இருக்கும். ஒரு வீடு வாங்க வேண்டும். ஒரு கார் வாங்க வேண்டும்.கடை ஒன்றைத் திறந்து வியாபாரம் செய்ய வேண்டும் என ஏதாவது ஒரு கனவு இருக்கும் தானே.அந்தக் கனவை நோக்கிப் பயணிக்கிற அனைவருமே ஸ்டார் தான். இதைத்தான் இந்தப் படம் சொல்கிறது. அந்தப் பயணத்தில் நாம் யாரையும் காயப்படுத்தி விடக் கூடாது. அன்புடன்.. அந்தக் கனவை விட்டுக் கொடுக்காமல்… பிடிவாதமான மனதுடன்.. அந்தப் பயணம் இருந்து கொண்டே இருக்கும் அல்லவா..! அதைத்தான் இந்தப் படம் பேசுகிறது.
1980 களில் ஒரு பையன்.அவனுக்கு 20 வயது இருக்கும். பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவுடன் மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார். எண்பது 90 ஆகிறது. 2000 ஆகிறது. 2010யும் கடக்கிறது. கடந்து போகிறது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் இந்தப் பயணம் தொடர்கிறது. இப்போது அவருக்கு 55 வயதாகிறது. இந்த வயதில் அவருக்கு ‘ராஜா ராணி’ எனும் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. பல வருடங்களாகத் தேக்கி வைத்திருந்த அவருடைய கனவு நனவாகிறது. திரையரங்கில் அவருடைய நடிப்பிற்கு இரசிகர்கள் கைதட்டுகிறார்கள். அவர்தான் என்னுடைய அப்பா ‘ராஜா ராணி’ பாண்டியன்.
இந்தப் படத்தை அவருக்காக அர்ப்பணிப்பதைத் தான் நான் விரும்புகிறேன். இந்தப் படத்திற்கு இன்ஸ்பிரேஷன்.. என்னுடைய அப்பா தான். அவருடைய இந்தப் பயணத்தில் ஏராளமான அனுபவங்களைச் சந்தித்திருப்பார். அவமானங்களை எதிர்கொண்டிருப்பார்.
ஒரு முறை என் அப்பா என்னிடம், ‘இந்த முகத்தை வைத்துக்கொண்டு எப்படி நடிக்க வந்தாய்?’ என ஒருவர் கேட்டுவிட்டதாக வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். அந்த நபர் கேட்ட அந்தக் கேள்விதான் என் அப்பாவிற்கு மிகப்பெரிய மோட்டிவேஷனாக இருந்திருக்கிறது. ஒருத்தர் முகத்துக்கு நேராக இப்படிக் கேட்டுவிட்டாரே..! என்ற ஒரே காரணத்திற்காக, எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற உறுதி அவர் மனதில் ஏற்பட்டு விட்டது. அந்த மனவுறுதியை விவரிப்பதுதான் இந்த ஸ்டார் திரைப்படம்.
ஒரு கனவை நாம் எப்போதும் தனியாக வென்று விட முடியாது. அதற்கு ஆதரவளிக்க நிறையப் பேர் தேவை. உதவி செய்வதற்கும் ஆட்கள் தேவை. அதைவிட மற்றவர்களின் ஆசியும் முக்கியம். இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் கவின், ‘காசு இல்ல சார்..!’ என டயலாக் பேசுவார். அது எங்க அப்பா வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவம். அதன் போது எங்க அம்மா தான் அவருக்கு ஆதரவாக இருந்து அவரையும் பார்த்துக் கொண்டார். எங்களையும் பார்த்துக் கொண்டார். எங்களைப் பொறுத்தவரை அவரும் ஒரு ஸ்டார் தான்.
அடிப்படையில் நம்மைச் சுற்றி ஏராளமான ஸ்டார்கள் இருக்கிறார்கள். இவர்களை நினைவுபடுத்தும் வகையில் தான் இந்தத் திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இதனால் இந்தத் திரைப்படத்திற்கு அனைவரும் அவர்கள் குடும்பத்தினருடனும், காதலருடனும், நண்பர்களுடனும், உறவுகளுடனும் வருகை தந்து இரசிக்கும் ஒரு அழகான படமாக ‘ஸ்டார்’ இருக்கும் என நான் நம்புகிறேன்.
தயாரிப்பாளர் சாகரிடம் இந்தக் கதையைச் சொல்லிவிட்டு இரண்டு நாட்களில் பதிலைச் சொல்லி விடுங்கள் என நிபந்தனை விதித்தேன். அவர் ஒரே நாளில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன் எனப் பதிலளித்தார். அந்தத் தருணத்தில் அவர் எடுத்த விரைவான முடிவு தான் இன்று வரை எனக்கு சாதகமாக இருக்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் அவர் எடுக்கும் வேகமான முடிவு இப்படத்தை நேர்த்தியாக உருவாக்குவதற்கும் உதவி இருக்கிறது.
அவர் மட்டுமல்லாமல் இந்தத் திரைப்படத்திற்காகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் தங்களது பணியை முழு அர்ப்பணிப்புடன் செய்து ஒத்துழைப்பு வழங்கினர். அனைவரும் தங்களின் மனமார்ந்த பங்களிப்பை இப்படத்திற்காக அளித்துள்ளனர். இதற்காக இந்தத் தருணத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படத்தை நான் ஒரு அழகான காதல் கதையாகத் தான் பார்க்கிறேன். லவ் என்றதும் ஒரு அப்பாவின் அன்பு… ஒரு அம்மாவின் அன்பு… ஒரு நண்பனின் அன்பு… ஒரு மனைவியின் அன்பு… ஒரு காதலியின் அன்பு… என ஏகப்பட்ட அன்பு இப்படத்தில் இருக்கிறது.
இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக யுவன் தற்போது துபாயில் இருக்கிறார். நான் என்ன கேட்டாலும் எனக்காக அவர் செய்வார். அவர் என்ன கேட்டாலும் அவருக்காக நான் செய்வேன். அந்த அளவிற்கு எங்களுக்குள் நட்பு இருக்கிறது. எனக்கு அவர் ஒரு சகோதரர்.. நலம் விரும்பி.. நண்பன்.. ஆன்மீக வழிகாட்டி.. இப்படி அவரைப் பற்றி பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இந்த உலகத்தில் எனக்குப் பிடித்தமானவர்களின் பட்டியலில் யுவன் முதலிடத்தில் இருக்கிறார். அவரைப் போல ஒருவரை என் வாழ்க்கையில் சந்தித்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன். அவர் எப்போதும் அன்பாகவும், இனிமையாகவும், எளிமையாகவும் பழகக்கூடியவர்.
இவரைத் தொடர்ந்து கவின். ஸ்டார் ஆகி இருக்கும் கவினை, ‘டாடா’ படத்திற்குப் பிறகு தான் அவரைச் சந்திக்கிறேன். இப்படத்தின் கதையை அவரிடம் சொல்லும் போது, முழுக் கதையும் கேட்டுவிட்டு… ‘இந்தக் கதையில் வரும் பல சம்பவங்கள் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது’ என்றார். படத்தின் கதை தான் கவினை நாயகனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. படப்பிடிப்புத் தளத்தில் கவின் நடிக்கும் போது எங்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார். ஒரு நடிகராக என்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தப் படக் குழுவினரையும் தன் நேர்த்தியான நடிப்பால் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருப்பார். இதற்குச் சாட்சி படத்தின் முன்னோட்டம். இதற்காக கவினுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் இரசிகர்களுக்கு சிறிய அளவிலான எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகள் இருக்கின்றன. அதை படம் பார்த்த இரசிகர்கள்.. மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அன்பாக வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் .
தயாரிப்பாளர் சாகர் பேசுகையில்…
இயக்குநர் இளன், ‘ஸ்டார்’ படத்தின் கதையைச் சொல்வதற்கு முன்பே அவருடன் தொடர்பில் இருந்தேன். அப்போது காணொளி மூலமாக ஒரு கதையை என்னிடம் சொல்லி இருக்கிறார். அவர் கதை சொல்லும் விதம்.. அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் பாணி.. இதெல்லாம் எனக்குப் பிடித்திருந்தது. இது தொடர்பாக எஸ்கியுடிவ் ப்ரொடியூசர் வினோத்திடம் இளனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனச் சொன்னேன்.
சிறிது நாள் கழித்து என்னைச் சந்தித்து ஸ்டார் திரைப்படத்தை உருவாக்கலாமா? எனக் கேட்டார். அவர் இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக விவரித்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யார் ஹீரோ? என கேட்டேன். அவர் கவின் என்று சொன்னார். அப்போது ‘டாடா’ படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்த தருணம். ‘டாடா’ படத்தைப் பார்க்கும் போதே தமிழ்த் திரையுலகத்திற்கு நம்பிக்கையான ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார் என மகிழ்ச்சி அடைந்தேன். இளனும் கவின்தான் நாயகன் என்று சொன்னவுடன் நான் படத்தைத் தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.
அவர் சொன்னது போல் எனக்கு இரண்டு நாள் தான் டைம் கொடுத்தார். அவருக்கு வேறு திசைகளில் இருந்து அழுத்தம் இருந்ததை உணர முடிந்தது. அப்போது இந்தப் படத்தின் கதை மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இளன்+ கவின் காம்பினேஷன் மீதும் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
அண்மையில் இந்தத் திரைப்படத்தை பார்த்தேன். கதையை உணர்வுப் பூர்வமாகச் சொல்லி இருக்கிறார். எல்லாப் பிரிவினரும் அன்பாக ஒன்றிணைந்து உருவாக்கிய படைப்பு இந்த ஸ்டார். இதற்காக அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பட தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ் பேசுகையில்….
லவ் டுடே படத்தின் முன்னோட்டத்தை ஒரு வாரத்தில் நிறைவு செய்து விட்டேன். ஆனால் இந்தப் படத்தின் முன்னோட்டத்திற்கு இருபது நாள் எடுத்துக் கொண்டேன். இளனின் திரைக்கதையை முழுவதுமாகப் படித்து விட்டேன். படத்தையும் பார்த்து விட்டேன். கவினின் அற்புதமான நடிப்பைப் பார்த்து வியந்து விட்டேன். இந்தக் கூட்டணியுடன் பணியாற்றும் போது எனக்கு பொறுப்புணர்வு அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். முன்னோட்டத்தைப் பத்து நாட்களில் முடித்து விட்டேன். இருந்தாலும் அதன் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இளனுக்கு போன் செய்து, ‘எனக்கு இன்னும் ஒரு ஐந்து அல்லது ஆறு நாட்கள் கொடுங்கள் எனக்கு முழுத் திருப்தி இல்லை’ என்று சொன்னேன். என் மேல் எனக்கு நம்பிக்கை இல்லாமல் போனதுக்குக் காரணம் இவர்கள்தான். அந்த அளவிற்கு படத்தின் கதை, திரைக்கதை, நடிப்பு என அனைத்து அம்சங்களும் நேர்த்தியாக இருந்தது.
படத்தின் முன்னோட்டத்தை நிறைவு செய்தவுடன் எனக்கு ஒரு விசயம் தோன்றியது. திறமையான சமையல் கலை நிபுணராக இருந்தாலும்.. நல்ல இன்கிரிடியன்ஸ் இருந்தால்தான் நல்ல உணவைத் தயாரிக்க முடியும். அதுபோல் இந்தப் படத்தின் முன்னோட்டம் பேசப்படுவதற்கு இவர்கள் வழங்கிய கன்டென்ட் தான் காரணம். இதற்காக இயக்குநர் இளன், நடிகர் கவின் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகை அதிதி பொஹங்கர் பேசுகையில்…
இயக்குநர் இளன் திறமையானவர். வசனத்தையும்… வசனத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதையும் .. அதனுடன் உணர்வுபூர்வமாக எப்படி நடிக்க வேண்டியதையும் தெளிவாகக் குறிப்பிடுவார். இந்தப் படத்தில் சுரபி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் மேடை நாடகத்திலிருந்து வந்திருக்கிறேன். ஒத்திகை முக்கியம் என்பதை நன்கறிவேன். படப்பிடிப்புத் தளத்தில் படக் குழுவினருடன் பழகிய தருணங்கள் மறக்க இயலாதவை. படக்குழுவினர் அனைவரும் நட்புடன் பழகினர். கவின் ஒரு சக நடிகராக இருந்தாலும்.. மிகத்திறமையானவர். மே பத்தாம் தேதி ஸ்டார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில்…
இன்று எனக்கு மிகவும் ஸ்பெஷலான நாள். நான் நடித்த முதல் திரைப்படம் வெளியாகிறது. ஓராண்டிற்கு முன் யாராவது என்னைச் சந்தித்து, ‘நீங்கள் தரமான படத்தில் முதன்மையான வேடத்தில் நடிப்பீர்கள்’ என்று சொன்னால் நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் அது இன்று சாத்தியமாகி இருக்கிறது. இதற்காக என்னுடைய பெற்றோருக்கும், வாய்ப்பு அளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ஸ்டார் பட குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படத்தின் நடித்தவுடன் எனக்கு ஓரளவு மன திருப்தி ஏற்பட்டிருக்கிறது. நான் இயக்குநர் இளனின் வழிகாட்டுதலின்படி தான் நடிகை ஆகியிருக்கிறேன். இந்தப் படம் வெளியான பிறகு கவினுக்கு இரசிகர்களின் கூட்டம் அதிகரிக்கும். அவர் பெரிய ஸ்டாராகி விடுவார்.
படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்லும் போதெல்லாம் படக்குழுவினரிடம் இருக்கும் பாசிட்டிவிட்டி… என்னை வியப்படையச் செய்தது. இதனால்தான் படங்களை உணர்வுப் பூர்வமாக உருவாக்க முடிகிறதோ..! என்றும் எண்ணி இருக்கிறேன். இந்தப் படத்திலும் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களும் தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பை வழங்கி இருக்கின்றனர். அதனால் இந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.
இயக்குநரின் தந்தையும், நடிகருமான ‘ராஜா ராணி’ பாண்டியன் பேசுகையில்….
என்னை திரைத்துறைக்கு கைபிடித்து அழைத்து வந்து ஸ்டில்ஸ் ரவிக்கு முதல் வணக்கம். இளன் – ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எண்ணற்றோன் கொல் எனும் சொல்’ எனும் வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப என்னை உயர்த்தி விட்டார். இளன் சிறிய வயதிலேயே பேன்சி டிரஸ் காம்பெடிஷனில் கலந்து கொள்வான். அதற்கு நான் அவனை அழைத்துக் கொண்டு செல்வேன். நடிகை நளினி இதைப் பார்த்து என்னிடம், ‘உன் ஆசை எல்லாம் உன் மகன் மூலமாக தீர்த்துக் கொள்கிறாயா? ‘ எனக் கிண்டலுடன் கேட்பார். அவன் வீரசிவாஜி வேடம் அடைந்திருந்த போது, தலை வலிக்கிறது என்றான். நான் அவருடைய கிரீடத்தை தாங்கிப் பிடிக்க.. உடனே, ‘மேடையில் நீங்கள் வந்து தாங்கிப் பிடிப்பீர்களா?’ எனக் கேட்டுவிட்டு கையை எடுத்து விடச் சொன்னார். அந்த அளவிற்கு அவனை நான் தயார்படுத்திருந்தேன். அவனும் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தான்.
நடிப்பைத் தொடர்ந்தாலும் கல்வி விசயத்தில் நான் உறுதி காட்டியதால் அவன் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் முடித்த பிறகு தான் என்னை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கினான்.
படிப்பை முடித்த பிறகு தான் இந்தத் துறையில் வரவேண்டும் என நிபந்தனை விதித்திருந்தேன். அதனையும் ஏற்றுக் கொண்டான். அத்துடன் பட்டதாரியான பிறகு வேலை தேடுவதற்கு நான்கு ஆண்டுகள் ஆகலாம். அதன் போது எனக்கு சோறு போடுவீர்களா? எனக் கேட்டார். போடுவோம் என்றேன். அது போல் நினைத்து எனக்கு இரண்டு ஆண்டுகள் சோறு போடுங்கள். நான் இயக்குநராகி காட்டுகிறேன் என்றார். ஆனால் ஒரே வருடத்தில் இயக்குநராகி விட்டார்.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால்.. பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பத்தை உணர்ந்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அந்த வகையில் நான் அவருக்கு வாய்ப்பு அளித்தேன் அதனை அவர் பயன்படுத்தி இயக்குநராகிவிட்டார். இதை மறுத்து என்னுடைய கருத்தை மட்டுமே திணித்துக் கொண்டிருந்தால்.. அவருடைய வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கும்.
எல்லோரும் சினிமாவை நோக்கி வருகிறார்கள். பலரும் தொழிலதிபராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சிலர் டாக்டராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதில் இலக்கை நோக்கி பயணிப்பவர் பலர். ஆனால் சென்றடைபவர் சிலர்தான். கடைசி வரை அந்த நோக்கத்தில் இருந்து விலகாமல் பயணிப்பவர்கள் தான் சென்றடைகிறார்கள்.
என்னுடைய மகன் இந்தத் துறையில் இயக்குநராக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி தான்.
நான் இன்று இந்த நிலைமையில் இருப்பதற்கும் ஸ்டில்ஸ் ரவியின் தொழில் பக்தி தான் காரணம். அவர் ஒவ்வொரு நிமிடமும் தொழிலில் அக்கறை காட்டுபவர். அவரிடம் உதவியாளராகப் பணியாற்றிய போதும் நடிக்க வேண்டும் என்று என்னுள் இருந்த ஆர்வத்தைக் கைவிடவில்லை. இதனால் அவரிடம் பலமுறை திட்டு வாங்கியிருக்கிறேன். பிறகு அவரைச் சமாதானப்படுத்தி அவரிடம் தொடர்ந்து பணியாற்றி இருக்கிறேன்.
‘ராஜா ராணி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும் பல நெருக்கடிகளை எதிர் கொண்டேன். ஆனால் நல்ல கதாபாத்திரம் என்பதால் அனைத்தையும் துறந்து விட்டு, அதில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். இந்தப் படத்தில் நடித்ததற்காக சம்பளத்தை வாங்கிய போது.. காசாளர் நம்பிக்கையுடன் நீங்கள் நல்லா வருவீர்கள.! என்று சொன்னார். இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில் நான் கலந்து கொண்டேன். அந்த விழாவில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த யூகி சேது தான், ‘பந்தா’ பாண்டியாக இருந்த என்னை என்னை ‘ராஜா ராணி’ பாண்டியன் என மாற்றினார். இதற்காக யூகி சேதுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருவர் செய்த உதவியை நன்றி மறக்காமல் காலம் முழுதும் நினைத்துக் கொண்டே இருந்தால் நாம் முன்னேறி விடுவோம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி என்றார்.
நடிகர் கவின் பேசுகையில்….
டாடாவிற்கு பிறகு ஸ்டார். இயக்குநர் இளன் கதை சொல்ல வரும்போது அவருடன் எதனையும் எடுத்துக் கொண்டு வரவில்லை. பொதுவாக கதை சொல்ல வரும் இயக்குநர்கள் தங்களது கைகளில் லேப்டாப்… ஒன்லைன் ஆர்டர்.. ஸ்கிரிப்ட் புக்.. என ஏதாவது ஒன்றைக் கையில் வைத்திருப்பார்கள். மூன்று மணி நேரம் பொறுமையாக.. விரிவாகக் கதையைச் சொன்னார். அவர் இதயத்தில் இருந்து கதையைச் சொல்கிறார் என்று கதையைக் கேட்டு முடிந்த பிறகு தான் தெரிந்தது. அவர் சொன்ன கதையில் ஜீவன் இயல்பாகவே இருந்தது. பெரிதாக எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்.
படத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை.. என்னைத் தேடி வந்து கதை சொன்ன பிறகு வைத்த நம்பிக்கை.. என அனைத்தையும் காப்பாற்றி இருக்கிறேன் என நினைக்கிறேன்.
படத்தின் இணை தயாரிப்பாளர் தீபக் வெளிநாட்டில் தான் இருப்பார். ஆனால் படப்பிடிப்புப் பணிகளை நேர்த்தியாக அங்கிருந்தே ஒருங்கிணைத்து விடுவார்.
இந்தப் படத்தின் கதையைக் கேட்டு முடித்தவுடன் மிகவும் பொறுமை தேவை என்பதை உணர்ந்தேன். படைப்பும் பெரிது. அதற்கான உழைப்பும் நேரமும் அதிகம். அனைவரும் இதனைப் புரிந்து கொண்டு பொறுமையாக இருந்து பணியாற்றியதற்காக இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் விக்ரம் பிரபுவுடன் இணைந்து ‘ஷத்ரியன்’ என்றொரு படத்தில் நடித்திருந்தேன். அந்தப் படத்தில் யுவன் இசையில் எனக்கொரு பாடல் காட்சியும் இருந்தது. அது படமாக்கப்பட்டது. பிறகு படத்தொகுப்பில் நீக்கப்பட்டது. நான் நடித்த முதல் படம். அதில் பாடல் காட்சி நீக்கப்பட்டதால்.. மனதில் வலி இருந்தது. யுவனை நேரில் சந்திக்கும் போது இதைப்பற்றி விவரித்தேன்.
பொதுவாக ஆறுதலுக்காகச் சொல்வார்கள் அல்லவா… ‘இன்று நடக்கவில்லை என்றால், நாளை இதைவிடப் பெரிதாக நடக்கும் என்று’… அதைப் பற்றிய தவறான புரிதல் எனக்குள் இருந்தது. ஆனால் அந்த வார்த்தைகள் எல்லாம் உண்மைதான் என்பது இப்படத்தில் தெரிந்து கொண்டேன். யுவன் சங்கர் ராஜா இசை என்றவுடன் என்னுடைய ஆசையும், கனவும் நிறைவேறிவிட்டது. இந்தப் படத்திற்காகவே யுவன் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார். அதை நீங்கள் முன்னோட்டத்திலேயே பார்த்து இரசித்திருக்கலாம். படம் பார்க்கும்போதும் அவருடைய உழைப்பு உங்களுக்குத் தெரிய வரும் என நினைக்கிறேன்.
எழில் அரசு தான் ஒளிப்பதிவு என்றவுடன்.. எனக்கு முழு நம்பிக்கை வந்து விட்டது. ஏனென்றால் ‘டாடா’ படத்திற்கு அவர்தான் ஒளிப்பதிவாளர்.
படத்தின் கதை யதார்த்தமாக இருக்கும். அதில் இடம்பெறும் சின்னச் சின்ன சண்டைக் காட்சிகளும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சண்டைப் பயிற்சி இயக்குநர் விக்கி மாஸ்டர் கடினமாக உழைத்திருக்கிறார்.
எனக்கு டான்ஸ் மாஸ்டர் என்றால் பயம் தான். எனக்கு நடிப்பின் மீது இருக்கும் நம்பிக்கை… நடனத்தின் மீது இல்லை. நிறைய ஒத்திகை பார்ப்பேன். இந்தப் படத்தில் மூன்று டான்ஸ் மாஸ்டர்களும் எனக்காகப் பொறுமையுடன் சொல்லிக் கொடுத்து நடனமாட வைத்தார்கள்.
லால் மற்றும் கீதா கைலாசம் இருவரும் நடித்திருக்கும் காட்சிகள் உயிரோட்டமாக இருக்கும். அதில் அவர்களின் அனுபவிக்க நடிப்பு மேலும் யதார்த்தமாகவும், அழகாகவும் இருக்கும். இது இரசிகர்களிடமும் சரியாக பிரதிபலிக்கும் என நம்புகிறேன்.
படத்தில் நடித்த சக நடிகைகளான பிரீத்தி மற்றும் அதிதிக்கும் நன்றி. உடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் நடித்த அனைவரும் திரையுலகத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
இரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. ஏனெனில் நல்ல கன்டென்ட் இருந்தால் அந்தப் படத்திற்கு நீங்கள் அபரிமிதமான ஆதரவைத் தருவீர்கள். இதற்கு ‘டாடா’ உட்பட பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
இவற்றையெல்லாம் கடந்து ஒரே ஒரு சிறிய விசயத்தை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ‘சினிமாவை வைத்து சினிமா எடுத்தால் ஒடாது’ எனப் பொதுவாகச் சொல்வார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என எனக்குத் தெரியவில்லை. படம் நன்றாக இருந்தால் ஓடும். ஓடியிருக்கிறது. ஆனால் இது போன்ற விசயம் எப்படி உருவாகிறது எனத் தெரியவில்லை. ஒருவேளை ஒட்டுமொத்த சதவீதத்தின் அடிப்படையில் சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன்.
இந்தப் படத்திற்கும் அது நடந்தது. தயாரிப்பாளர் சாகரிடம் கதை செல்வதற்கு முன் சிலர் இந்த விசயத்தைச் சொன்னார்கள். அதுவரைக்கும் நான் மிகவும் நம்பிக்கையாகத் தான் இருந்தேன். தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகரும் கதையைக் கேட்டு விட்டு .. இது போன்ற கருத்தைச் சொல்லி விடுவாரோ எனப் பயந்தேன்.ஆனால் இந்தப் படத்தைத் தயாரிக்க ஒரே நாளில் அவர் ஒப்புக்கொண்டவுடன் எனக்கு இருந்த பயம் விலகி, நம்பிக்கை அதிகரித்து விட்டது.கலையை கலையாகப் பார்க்கிற அதை மிகவும் நேசிக்கிற படக் குழு மீது தயாரிப்பாளர் நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை தான் இந்தப் படத்தை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது என நினைக்கிறேன். அந்த விசயங்களை எல்லாம் கடந்து இந்தப் படைப்பின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் வெற்றியைத் தரும் என நம்புகிறேன்.
இரசிகர்கள் மீதும் பெரும் நம்பிக்கை இருக்கிறது. தயாரிப்பாளர்களின் முதலீட்டிற்கும், இரசிகர்களின் முதலீட்டிற்கும் நியாயமாக உழைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குரு எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதற்காகவே ஒட்டுமொத்தப் படக் குழுவும் நம்பிக்கையுடன் பணியாற்றியிருக்கிறது.
இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல முறையில் ஓடி.. சினிமாவைப் பற்றி சினிமா எடுத்தால் ஓடும் என்கிற பட்டியலில் இந்தத் திரைப்படம் இடம் பெறும். இதை நான் ஆத்மார்த்தமாக நம்புகிறேன்
இவ்வாறு அவர் பேசினார்.