September 5, 2026
செய்திக் குறிப்புகள்

கட்டா குஸ்தி 2 ஐம்பதாவது நாள் கொண்டாட்டம் – விவரம்

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில்,இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தை,வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

முதல்பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் இந்தச் சாதனையைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் 50 ஆவது நாள் வெற்றிவிழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை செப்டம்பர் 3 அன்று நடத்தினர்.

இந்தநிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடகநண்பர்களை நேரில் சந்தித்து,திரைப்படத்திற்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர்.படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவைச் சேர்ந்தவர்களை கௌரவிக்கும்விதமாக அவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர்,‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் பயணம் மற்றும் அதன் வெற்றியைப் பற்றிய தங்களது அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் இயக்குநர் செல்லா அய்யாவு பேசுகையில்…

கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்குப் பூஜை போட்டு படப்பிடிப்பைத் தொடங்கினோம்.இன்று செப்டம்பர் 3-ஆம் தேதி,படம் வெளியாகி 50 நாட்கள் ஓடிய வெற்றியைக் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒருபடம் தொடங்கி,ஒரு ஆண்டுக்குள் வெளியாகி,50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடுவது பெரிய விசயம்.இந்த வெற்றியை வழங்கிய இரசிகர்களுக்கும்,படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.முன்பெல்லாம் 100, 175, 200 நாட்கள் ஓடிய படங்களின் விளம்பரங்களைப் பத்திரிகைகளில் பார்ப்பது வழக்கம்.காலப்போக்கில் திரையரங்கு வெளியீட்டு முறைகளும்,இரசிகர்கள் படம் பார்க்கும் தளங்களும் மாறிவிட்ட நிலையில்,‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்துள்ளது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது,
இந்த வெற்றியை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடி,அவர்களுக்கு சீல்டு வழங்குவது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம்.எனது உதவிஇயக்குநர் காலத்தில் ஒரு படத்தின் வெற்றிக்காக எனக்குக் கிடைத்த நினைவுப்பரிசை புகைப்படத்துடன் சேர்த்து வீட்டில் வைத்திருந்தேன்.பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக நான் உருவாக்கிய படம் 50 நாட்கள் ஓடி,மீண்டும் ஒரு வெற்றிக்கான நினைவுப்பரிசைப் பெறுவது தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது.இந்த சீல்டை எனது வீட்டிற்கு எடுத்துச்சென்று,அந்த பழைய நினைவுப்பரிசுக்கு அருகில் வைக்கப்போகிறேன். அதனால்தான் இந்த தருணம் எனக்கு மிகவும் சிறப்பானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் இருக்கிறது.
இந்தப்படத்தின் மீது ஆரம்பம் முதலே விஷ்ணுவிஷால் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார்.கதை எழுதுவதிலிருந்து நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்வது,படப்பிடிப்பு,தயாரிப்பு,வெளியீடு மற்றும் விளம்பரப்பணிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தீவிரமாகச் செயல்பட்டார்.ஒரு நடிகராக மட்டுமல்லாமல்,தயாரிப்பாளராகவும் இந்தப்படத்தை வெற்றிபெறச் செய்ய முழுமையான ஈடுபாட்டுடன் உழைத்தார்.இந்தப்படம் இன்று பெற்றுள்ள வெற்றியில் அவருடைய பங்கு மிக முக்கியமானது. அவருக்கு எனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அதேபோல்,‘கட்டா குஸ்தி’ ஒரு பிராண்டாக உருவாக முக்கியமான அடையாளமாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் பங்களிப்பும் மிகப்பெரியது.இப்படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் பேசுகையில்….

அனைவருக்கும் வணக்கம்.‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 50 ஆவது நாள் வெற்றிக் கொண்டாட்டத்தை இன்று சிறப்பாக நடத்துகிறோம்.இந்தப்படத்தில் பணியாற்றிய நடிகர்,நடிகைகள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.அவர்களைக் கௌரவிக்கும் வகையில் சீல்டு வழங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தநிகழ்வில் கலந்துகொண்டு கலைஞர்களுக்கு சீல்டுகளை வழங்குவதற்காக வந்துள்ள அருமை சகோதரர் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அதேபோல்,தொடர்ச்சியாக அமெரிக்கா மற்றும் கனடாவில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இன்று காலை சென்னை வந்த பத்மஸ்ரீ பிரபுதேவா அவர்கள்,ஓய்வெடுக்கக்கூட நேரமில்லாமல் இந்தவிழாவில் கலந்து கொண்டுள்ளார். எங்களது நட்பின் காரணமாக அவர் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது.
இந்தப்படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால்,இந்தப்படம் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மிகக் கடினமாக உழைத்தார்.தயாரிப்பிலிருந்து படத்தின் வெளியீடு மற்றும் விளம்பரப்பணிகள்வரை அனைத்திலும் அவரது பங்களிப்பு மிகப்பெரியது.இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் ஒரு வாரம் திரையரங்குகளில் ஓடினாலே வெற்றியாகக் கருதப்படும் சூழ்நிலை உள்ளது.ஆனால்,‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடிவருகிறது.முன்பெல்லாம் 100 நாள்,175 நாள்,200 நாள் என திரைப்படங்களின் வெற்றியைக் கொண்டாடுவார்கள்.தற்போது அதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு வாய்ப்பு குறைந்துவிட்ட நிலையில்,இந்த 50 ஆவது நாள் விழாவை நடத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த விஷ்ணுவிஷாலுக்கு எனது மனமார்ந்த நன்றி. முதல்பாகத்தை விட இரண்டாம்பாகம் இன்னும் சிறப்பாக அமையவேண்டும் என்று நான் விரும்பினேன்.அதேபோல் படம் இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமான இயக்குநர் செல்லா அய்யாவுக்கு எனது மனமார்ந்த நன்றி.படத்தின் தொடக்கத்திலேயே அவர் உருவாக்கிய புரோமோ பெரிய வரவேற்பைப் பெற்றது.அப்போதே இந்தப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது.வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பல திரைப்படங்களைத் தயாரித்து வருகிறோம்.அடுத்தடுத்த மாதங்களில் எங்களது புதியபடங்களும் வெளியாக உள்ளன.இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.படத்தின் கிளைமாக்ஸை சிறப்பாக்கியவர்,இந்த 50 ஆவது நாள் விழாவிலும் கலந்துகொண்டு கொண்டாட்டத்தை நிறைவு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தப்படத்தின் வெற்றியை உலகம் முழுவதும் கொண்டு சென்ற பத்திரிகை மற்றும் ஊடகநண்பர்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது.அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்றார்.

விஷ்ணு விஷால் பேசுகையில்…..

அனைவருக்கும் நன்றி.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.பல படங்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு, நமது‘கட்டா குஸ்தி 2’படத்திற்கு கிடைத்திருப்பது சந்தோசம்.இந்த வெற்றிக்கு உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றி.ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகவும் எனது நன்றியைத் தெரிவிப்பேன்.என்னைப் பொறுத்தவரை இரசிகர்கள்தான் ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமான சக்தி.அவர்களுக்குப் படம் பிடித்துவிட்டால் அதை எந்த உயரத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்பதற்கு ‘கட்டா குஸ்தி’ ஒரு சிறந்த உதாரணம்.படத்திற்கு ஆதரவளித்த ஊடகநண்பர்களுக்கும் நன்றி.படத்திற்கு மட்டுமல்லாமல்,எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும்,திரைப்பயணத்திலும் நீங்கள் தொடர்ந்து அளித்துவரும் ஆதரவுக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.இந்தவிழாவில் கலந்துகொண்ட ரம்யா கிருஷ்ணன் மேடத்திற்கும் எனது சிறப்பு நன்றி.15 நிமிட சிறப்புத்தோற்றம் என்று முதலில் அவரிடம் கூறினேன்.காட்சிகளை அனுப்பிப் படிக்கச் சொன்னபோதும்,என் மீதான அன்புக்காகவே அவர் இந்தக்கதாபாத்திரத்தில் நடித்தார்.அவரது கதாபாத்திரம் இரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப்படத்தின் உயிர்நாடியாக இருந்த ஜாராவை இரசிகர்கள் திரையரங்குகளில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.அவரும் இந்த வெற்றியின் முக்கியமான பகுதியாக இருக்கிறார்.இந்த வெற்றியைக் கொண்டாட அனைவரும் ஒன்றாக இருப்பது கூடுதல் மகிழ்ச்சி.ஐசரிகணேஷ் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி.இந்த வெற்றியை 50 ஆவது நாளில் கொண்டாடுவோம் என்று நான் அவரிடம் உறுதியளித்திருந்தேன்.தொடர்ந்து எங்களுக்கு அளித்துவரும் ஆதரவுக்கும்,ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்தி இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக எடுக்கும் முயற்சிக்கும் நன்றி.சினிமாவில் வெற்றி கிடைப்பது எளிதான விசயம் அல்ல.அது அரிதாகக் கிடைக்கும் ஒன்று.அப்படி ஒரு வெற்றி கிடைக்கும்போது அதை முழுமையாகக் கொண்டாட வேண்டும் என்பதே என் எண்ணம்.இந்த வெற்றியை மிகச்சிறப்பாகக் கொண்டாடும் ஐசரி சாருக்கு மீண்டும் நன்றி.இந்த நிகழ்வை சிறப்பிக்க வந்த ராஜ்மோகன் சாருக்கும் நன்றி.அதேபோல்,பிரபுதேவா சார் சிறுவயதில் இருந்தே எனது மனதின் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர்.‘சிக்கு புக்கு’ பாடலுக்கு நடனமாடி பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன்.ஒருகாலத்தில் நடனக்கலைஞராக வேண்டும் என்பதே எனது ஆசை.கால் காயம் காரணமாக அந்தப் பயணத்தைத் தொடர முடியவில்லை என்றாலும்,பிரபுதேவா சார் எனது சிறுவயது முன்னுதாரணமாக இருந்தார்.அவரது பாடல்களையும் நடனங்களையும் பின்பற்றி வளர்ந்தவன் நான்.இன்று அவர் இந்தவிழாவில் கலந்து கொண்டது மிகப்பெரிய மகிழ்ச்சி.
செல்லா எனக்கு எப்போதுமே மிகவும் ஸ்பெஷலான இயக்குநர்.எனது திரைப்பயணத்தில் ஒரு இயக்குநருடன் நீண்டபயணம் அமைந்தது என்றால் அது செல்லாவுடன்தான்.அவரது வளர்ச்சி மிகவும் இயல்பாகவும் அழகாகவும் அமைந்து வருகிறது.அவர் இன்னும் நீண்டகாலம் இதேபோன்று சிறப்பான வெற்றிகளைப் பெறவேண்டும் என்று விரும்புகிறேன்.குறிப்பாக குடும்பஇரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்துவரும் இதுபோன்ற படங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும்.இப்படிப்பட்ட இயக்குநர்கள் தற்போது மிகவும் குறைவாக இருக்கிறார்கள்.நல்ல குடும்பப்படங்களை தொடர்ந்து கொடுங்கள்.‘கட்டா குஸ்தி 3’ படத்தையும் விரைவில் உருவாக்கலாம்.வேல்ஸ் நிறுவனம் சார்பில் தொடர்ந்து கிடைத்துவரும் ஆதரவுக்கும் குஷ்மிதாவுக்கும் எனது நன்றி.இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி என்றார்.

தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ் பேசுகையில்….

அனைவருக்கும் வணக்கம்.இன்று ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் 50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.இந்தநிகழ்வில் எங்களது சிறப்புவிருந்தினராக மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அதேபோல்,சிறப்புவிருந்தினராக பத்மஸ்ரீ பிரபுதேவா சாரும் கலந்து கொண்டுள்ளார்.ஒரு படம் வெளியாகி முதல்வாரத்தில் இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவது ஒரு விசயம்.ஆனால்,அந்தப்படம் திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடுவது மிகவும் சிறப்பான விசயம்.திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து,ஜூலை 31 ஆம் தேதி ஓடிடியிலும் வெளியான இப்படம் இந்திய அளவில் டாப் 10 பட்டியலில் தொடர்ந்து டிரெண்டாகி வருவது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஒவ்வொருவரையும் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வை நடத்துகிறோம்.ஒரு வெற்றிப்படத்தின் 50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் வழங்கப்படும் இந்த விருது வெறும் நினைவுப்பரிசு மட்டுமல்ல.படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் பெருமையையும் அங்கீகாரத்தையும் அளிக்கும் ஒரு தருணமாகும்.வெற்றிவிழா நடைபெற்ற நாளிலேயே,படத்தில் பங்காற்றிய நடிகர்,நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று என் தந்தை முடிவு செய்திருந்தார்.அந்த எண்ணம் இன்று இந்தவிழாவின் மூலம் நிறைவேறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.உங்கள் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும்,கடின உழைப்பும் இந்தவெற்றியின் பின்னால் இருக்கிறது.இன்று வழங்கப்படும் இந்த அங்கீகாரம் உங்களுக்குப் பெருமையான தருணமாக அமையும் என்று நம்புகிறோம்.இது ஒரு வெற்றியின் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல்,இனிவரும் பல வெற்றிகளுக்கான அழகான தொடக்கமாகவும் அமையவேண்டும்.அனைவருக்கும் நன்றி,வணக்கம் என்றார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசுகையில்…..

அனைவருக்கும் வணக்கம்.ரொம்ப நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு வெற்றிவிழாவில் கலந்துகொள்கிறேன்.விஷ்ணு விஷால், செல்லா அய்யாவு மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்.முதல்பாகம் வெற்றிபெற்ற பிறகு,அதைவிடச் சிறப்பாக இரண்டாம்பாகத்தில் என்ன செய்யப்போகிறார்கள் என்ற ஆவல் எனக்கு இருந்தது.இந்தப்படம் சிறப்பாக அமையவேண்டும் என்றும்,அதில் நானும் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்றும் விரும்பினேன்.இன்று படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, படக்குழுவினர் அனைவருக்கும் நல்லபெயரைப் பெற்றுத் தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி.இந்தக் காலகட்டத்தில் ஒரு படம் 50 நாட்கள் ஓடுவது என்பது மிகவும் அரிதான விசயம்.
ஐசரிகணேஷ் சாருக்கு ஒரு மிடாஸ் டச் இருக்கிறது.அவர் தொடும் விசயங்கள் எல்லாம் வெற்றியாக மாறுகின்றன.அந்த அதிர்ஷ்டம் இந்தப்படத்திற்கும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி.இந்தப்படக்குழுவின் ஒருபகுதியாக இருந்ததை மிகவும் இரசித்தேன்.செல்லா அய்யாவுவின் எழுத்தில் இயல்பாகவே நகைச்சுவை கலந்த ஒரு தனித்தன்மை இருக்கும்.இந்தப்படத்தில் பணியாற்றியது மிகவும் ஜாலியான அனுபவமாக இருந்தது.படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு அளித்த இரசிகர்களுக்கும்,ஊடகநண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. ‘கட்டா குஸ்தி 3’ படத்திலும் விரைவில் சந்திப்போம் என்றார்.

நடிகர் பிரபுதேவா பேசுகையில்….

அனைவருக்கும் எனது வணக்கம்.அமைச்சர் அவர்களுக்கும்,என் அண்ணன் போன்ற ஐசரிகணேஷ் சாருக்கும்,விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாவு,குஷ்மிதா உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.வெளிநாட்டில் இருந்தபோது கணேஷ் சார் என்னை அழைத்து இந்தநிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கூறினார்.எந்தநேரமாக இருந்தாலும் அவரது அழைப்புக்காக வந்துவிடுவேன் என்று சொன்னேன்.அந்த அளவுக்கு எங்களுக்குள் ஒரு அண்ணன்-தம்பி போன்ற உறவு இருக்கிறது.விஷ்ணு விஷாலின் நலனில் அக்கறை கொண்டவர்களில் நானும் ஒருவன்.இந்தப்படத்திற்கு மட்டுமல்லாமல்,தனது ஒவ்வொரு படத்திற்கும் அவர் இதே உழைப்பையும், 200 சதவீத அர்ப்பணிப்பையும் கொடுத்து வருகிறார்.அவர் இன்னும் பெரிய உயரங்களை அடையவேண்டும் என்பது எனது விருப்பம்.அவரது மனைவி ஜ்வாலா கட்டாவின் மிகப்பெரிய இரசிகன் நான்.அவர் உலகத்தரம் வாய்ந்த பேட்மிண்டன் வீராங்கனை.
இன்றைய காலகட்டத்தில் ஒருபடத்தின் இரண்டாம்பாகத்தை உருவாக்கி,அதையும் வெற்றிப்படமாக மாற்றுவது மிகவும் கடினமான விசயம்.அந்த சவாலை இயக்குநர் செல்லா அய்யாவு சிறப்பாகச் செய்திருக்கிறார்.முதல்பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் வெற்றி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.ரம்யா கிருஷ்ணன் மேடம் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.படத்தில் நடித்த மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கும் எனது வாழ்த்துகள். ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவினர் அனைவரும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெறவேண்டும்.
குஷ்மிதாவை சிறுவயதில் இருந்தே பார்த்திருக்கிறேன்.இன்று அவர் நிறுவனத்தின் பொறுப்புகளை ஏற்று அடுத்த தலைமுறையாக வளர்ந்து வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.அவர் இந்த நிறுவனத்தை இன்னும் சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்பது எனது வாழ்த்து. நீண்டநாட்களுக்குப் பிறகு இதுபோன்ற வெற்றி விழாவிலும்,கலைஞர்களுக்கு சீல்டு வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.குறிப்பாக ஒரு முக்கியமான இடத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி,படத்தின் வெற்றியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது மிகவும் சிறப்பு.என்னை அழைத்த ஐசரிகணேஷ் சாருக்கு நன்றி.‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில்…..

அனைவருக்கும் மாலை வணக்கம்.தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல,இந்தியசினிமாவுக்கே ஒரு சகாப்தமானவர்,இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் கொண்டாடப்படும் பத்மஸ்ரீ பிரபுதேவா மாஸ்டர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி.அவருடன் பணியாற்றியபோது பல விசயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.படப்பிடிப்புத்தளத்தில் அவர் அமைதியாக இருப்பார்.ஆனால்,கேமரா முன்பு நின்றுவிட்டால் அந்தக் கதாபாத்திரமாகவே முழுமையாக மாறிவிடுவார்.இடைவேளையின்போது கூட செல்போனை பயன்படுத்தாமல்,புத்தகம் படிப்பது,செஸ் விளையாடுவது என தனது நேரத்தைப் பயன்படுத்துவார்.அவரது தொழில்முறை அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் அனைவருக்கும் ஒரு பாடமாகும்.வேல்ஸ் நிறுவனம் சார்பில் அவருக்கு வழங்கப்படும் இந்த கௌரவம், அவர்மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடாகும்.
எங்கள் தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் அண்ணன் ஒரு உண்மையான சினிமா காதலர்.அவருக்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும்.யாராவது உதவிகேட்டால் உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கும் பெரியமனம் கொண்டவர்.சினிமா மற்றும் கல்வித்துறை என இரண்டிலும் தொடர்ந்து பல சேவைகளை செய்துவருகிறார்.‘கட்டா குஸ்தி 2’50 நாட்களைக் கடந்து ஓடுவது இந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனை.இன்றைக்கு ஐந்து நாட்கள்,ஏன் ஒரு நாளில் ஐந்து காட்சிகள் வெற்றிகரமாக ஓடுவதே சவாலான சூழ்நிலையில்,50 நாட்கள் என்பது படக்குழுவுக்கு கிடைத்த பெரிய மணிமகுடம்.இப்படிப்பட்ட வெற்றிக்கு விஷ்ணுவிஷால் போன்ற கடினஉழைப்பாளியும்,படத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட நடிகரும் தேவை.தனது நடிப்புக்கு இணையாக சகநடிகர்,நடிகைகள் சிறப்பாக நடிக்கவேண்டும் என்பதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் அவரது மனதை நான் பாராட்டுகிறேன். படத்தின் ஒவ்வொரு விசயத்திலும்,குறிப்பாக விளம்பரப் பணிகளிலும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு அபாரமானது.
ஐஸ்வர்யா லட்சுமி இந்தப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.அவருடன் சிறுமி ஜாராவின் பங்களிப்பும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.இவ்வளவு திறமையான கலைஞர்கள் மத்தியில் அவர் காட்டிய தன்னம்பிக்கையும் நடிப்பும் பாராட்டுக்குரியது. படத்தில் நடித்த அனைத்துக்கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.அதேபோல்,திரையில் தெரியாத தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு மிக முக்கியமானது.இசையமைப்பாளர் ஷான்ரோல்டனின் இசை,மல்யுத்தக் காட்சிகளை சிறப்பாக உருவாக்கிய ஸ்டண்ட் குழு,அதை தத்ரூபமாகப் பதிவு செய்த ஒளிப்பதிவாளர்,சிறப்பாக வடிவமைத்த எடிட்டர் என ஒவ்வொருவரின் உழைப்பும் படத்தின் பலமாக அமைந்துள்ளது.அந்த அனைவரையும் மேடைக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று நினைத்து இந்தவிழாவை நடத்தும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் ஆகியோருக்கும் என் வாழ்த்துகள். என் அண்ணன் நம் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சியில் திரைத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளும் கோரிக்கைகளும் செயல்படுத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி என்றார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில்….

அனைவருக்கும் வணக்கம்.‘கட்டா குஸ்தி 2’ படத்தின் 50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் இந்த தருணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்தநிகழ்ச்சியை இவ்வளவு அழகாக அமைத்து,இந்த மகிழ்ச்சியான தருணத்தை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.விஷ்ணுவிஷால் எனக்கு ஒரு அற்புதமான சகநடிகர்.படம் வெளியான பிறகு,அவரை ஒரு தயாரிப்பாளராகவும் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.ஒரு நடிகராகவும்,தயாரிப்பாளராகவும் அவர்மீது வைத்திருக்கும் மரியாதை மேலும் அதிகரித்துள்ளது.இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி.இந்தநிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும்,சிறுவயதில் இருந்தே பாடல்கள் மூலம் பார்த்து இரசித்த பிரபுதேவா சாருக்கும் எனது நன்றி.நடனமாட வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது.நடனக்கலைஞர்களின் திறமையை எப்போதும் வியப்புடன் இரசிப்பேன்.இந்தவிழாவில் பிரபுதேவா சார் கலந்துகொண்டது மிகவும் சிறப்பானது.
செல்லா சார்,‘கட்டா குஸ்தி’ படத்தில் கீர்த்தி கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.நான் எத்தனை படங்களில் நடித்தாலும்,கீர்த்தி கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் வரவேற்பும்,அந்தக் கதாபாத்திரம் மூலம் மக்களிடம் நான் பெற்ற அன்பும் எப்போதும் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.நீங்கள் நான் பணியாற்றிய மிகவும் அன்பான இயக்குநர்களில் ஒருவர்.குஷ்மிதா,நீங்கள் எனக்கு ஒரு நல்ல ஆதரவாக இருந்திருக்கிறீர்கள்.தயாரிப்புத் தரப்பில் ஒரு பெண்ணாக எனக்கு நல்லநண்பராகவும் ஆதரவாகவும் நீங்கள் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.நீங்கள் சிறப்பான திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும்.நாம் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.இந்தப்படத்தின் வெற்றிக்காக 100 சதவீதம் உழைத்த எனது ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி.நீங்கள் அனைவரும் உங்கள் பணியை சிறப்பாகச் செய்ததால்தான் இன்று இந்த 50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் நாம் இருக்கிறோம்.
என்னை அழகாகத் திரையில் காட்டியவர்கள்,கீர்த்தி கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்கியவர்கள்,சண்டைக்காட்சிகளை அற்புதமாக அமைத்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.ரூச்சி,ஸ்ரவந்தி,பரத்,பாஸ்கர் சார்,என் அன்புக்குரிய ஜாரா மற்றும் மீனு மிஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என்றார்.
 
நடிகை மோக்ஷா பேசுகையில்…..

அனைவருக்கும் வணக்கம்.தமிழ்மக்களின் அன்புக்கும்,தொடர்ந்து அளித்துவரும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றி.உங்கள் அன்பும் ஆதரவும்தான்‘கட்டா குஸ்தி 2’ படத்தை இவ்வளவு பெரியவெற்றியாக மாற்றியுள்ளது.இனியும் இதேபோன்ற ஆதரவு எனக்குத் தேவை. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால்,இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் ஒருபகுதியாக நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.ஒரு சிறிய எதிர்பார்ப்புடன் வந்த எனக்கு,இன்று வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணுவிஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான படத்தில் இடம்பெற்றிருப்பது இன்னும் கனவு போலவே இருக்கிறது.இந்தவாய்ப்பை எனக்குக் கொடுத்த ஐசரிகணேஷ் சார்,விஷ்ணுவிஷால் சார் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றி.
‘மீனாட்சி’ கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்த இயக்குநர் செல்லா சாருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்தக் கதாபாத்திரம் மக்களிடம் எந்த அளவுக்கு சென்றடைந்துள்ளது என்பதைப் பார்க்கும்போது இன்னும் நம்பமுடியவில்லை.தற்போது என்னைப் பார்க்கும் பலரும்‘மீனாட்சி’என்றே அழைக்கிறார்கள்.தமிழ்இரசிகர்கள் மட்டுமல்லாமல்,ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு பிறமொழி இரசிகர்களும் அந்தக் கதாபாத்திரத்தை அடையாளப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.நான் உண்மையில் மீனாட்சிபோல நீண்டதலைமுடியுடன் இருப்பவள் அல்ல.நான் மோக்ஷா என்பதை மக்களுக்கு நம்பவைப்பதே இப்போது சற்று சவாலாக இருக்கிறது.அந்த அளவுக்கு அந்தக்கதாபாத்திரத்தை மக்கள் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், இயக்குநர் என்மீது வைத்த நம்பிக்கையே,‘மீனாட்சி’ கதாபாத்திரம் தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்கியுள்ளது.நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும்,நான் விரும்பும் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரான பிரபுதேவா சாருக்கும் நன்றி. வேல்ஸ் குடும்பம்,ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்,ஊடகநண்பர்கள் மற்றும் தமிழ்இரசிகர்கள் என அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும் என்றார்.

குழந்தை நட்சத்திரம் ஜாரா பேசுகையில்..,

இந்த சீல்டைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்தப்படத்தில் என்னைத் தேர்வு செய்த எனது பெற்றோர்,இயக்குநர், தயாரிப்பாளர்,விஷ்ணுவிஷால் சார் மற்றும் ஐஸ்வர்யாமேம் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி.படப்பிடிப்புத்தளத்தில் என்னை அன்பாகவும்,வசதியாகவும் உணரவைத்த எனது சகநடிகைகளான மோக்ஷா மேம்,ஐஸ்வர்யா மேம் மற்றும் ரித்தி மேம் ஆகியோருக்கும் நன்றி.இந்த வாய்ப்பையும் அன்பையும் அளித்த அனைவருக்கும் என் நன்றி என்றார்.

நடிகர் யோகிபாபு பேசுகையில்….

அனைவருக்கும் வணக்கம்.இயக்குநர் செல்லா அய்யாவுவுடன் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் இருந்து தொடர்ந்து பயணித்து வருகிறேன்.அந்தப்படத்தில் எனக்கு முழுநீளக் கதாபாத்திரம் கொடுத்தவர்,இந்தப்படத்தில் சிறியபகுதியாக இருந்தாலும் முக்கியமான ஒரு இடத்தில் என்னை பயன்படுத்தியிருக்கிறார்.‘கட்டா குஸ்தி’முதல் மற்றும் இரண்டாம்பாகத்துடன் முடிந்துவிடும் என்று நினைத்திருந்த நிலையில்,மூன்றாம்பாகத்திற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இறுதியில் அந்த வசனத்தை வைத்தது செல்லா சாரின் திட்டம்தான்.அதற்காக அவருக்கு எனது நன்றி.
50 ஆவது நாள் வெற்றியைக் கொண்டாடுவது தற்போது மிகவும் அரிதாகிவிட்டது.இந்தப்படத்திற்காக 50 ஆவது நாள் விழாவை நடத்தி, கலைஞர்களைக் கௌரவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இதேபோல் 100 ஆவது நாள் விழாவையும் கொண்டாடும் வாய்ப்பு கிடைக்கவேண்டும்.அனைத்து தயாரிப்பாளர்களும் தங்கள் வெற்றிப்படங்களுக்காக இதுபோன்ற விழாக்களை நடத்தி கலைஞர்களை அழைத்துக் கொண்டாடினால் மகிழ்ச்சியாக இருக்கும்.படப்பிடிப்பிலிருந்து நேரம் ஒதுக்கி இதுபோன்ற வெற்றி விழாக்களுக்கு வருவதும் எங்களுக்கு ஒரு மகிழ்ச்சிதான்.அமைச்சர் ராஜ் மோகன்,பிரபுதேவா மாஸ்டர்,ஐசரிகணேஷ் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts