September 3, 2026
சினிமா செய்திகள்

ஜெயம்ரவியின் ப்ரோக்ளப் படத்தயாரிப்பாளர் மாற்றம்? – படபடப்பு தகவல்

2025 ஆகஸ்ட் 26 அன்று ரவிமோகன் ஸ்டுடியோஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் ஜெயம்ரவி.அந்நிறுவனம் சார்பாக கார்த்திக்யோகி இயக்கத்தில் அவர் நடிக்கும் ப்ரோகோட் எனும் படமும்,அவர் இயக்கத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ஆர்டினரி மேன் என்கிற படமும் அறிவிக்கப்பட்டது.

அவர் நடிக்கும் ப்ரோகோட் எனும் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று வழக்கு வந்ததும் அந்தப்பெயரை ப்ரோக்ளப் என்று மாற்றிவிட்டார்.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ப்ரோகிளப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு உடனடியாகத் தொடங்கியது.அதன்பின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்புகள் நடக்கும் என்றும் சொல்லப்பட்டது.ஆனால் நடக்கவில்லை.

ஏன்?

இந்தக்கேள்விக்கான விடை தேடிப்போனால் பெரிய கதை இருக்கிறது.

ப்ரோகிளப் படத்தை ரவிமோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு என்று அறிவிக்குமுன்னரே வேறொரு தயாரிப்பாளர் தயாரிப்பதாக இருந்ததாம்.ஜெயம்ரவிக்கு நெருக்கமான அந்தப் பெண் தயாரிப்பாளர் (ஜெயம்ரவியின் மாமியார் அல்ல) அப்படத்தில் நடிப்பதற்காக ஜெயம்ரவிக்கு சில கோடிகள் முன்பணமாகக் கொடுத்திருந்தாராம்.திட்டமிட்டபடி அந்தப்படம் தொடங்கப்படாமல் இருந்த காலத்தில்தான் ஜெயம்ரவி தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார்.

அதனால்,அந்தப்படத்தைத் தாமே தயாரித்துக்கொள்கிறேன் என்றும் அப்படத்துக்காக வாங்கிய முன்பணத்தைக் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்.அதை ஏற்ற அந்தப் பெண் தயாரிப்பாளரும் படத்தை விட்டுக்கொடுத்துவிட்டார்.

ஆனால்,சொன்னபடி அவருக்குப் பணத்தைத் திருப்பித்தரவில்லையாம்.பலமுறை கேட்டும் உரிய பதில் இல்லாததால்,அந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்புக்குப் பணம் கொடுத்த இணையநிறுவனத்துக்கு அந்தப்படம் என்னுடையது என்று கடிதம் எழுதிவிட்டாராம் பெண் தயாரிப்பாளர்.

இதனால்,இந்தச் சிக்கலைச் சரிசெய்துவிட்டு வந்தால்தான் அடுத்த கட்டமாகப் பணம் கொடுப்போம் என்று சொல்லிவிட்டதாம் அந்த நிறுவனம்.அந்நிறுவனம் பணம் தரும் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி.இதனாலேயே அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கமுடியாமல் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இப்போது என்ன நிலை?

இப்போதும் அந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்த பணம் இல்லை என்பதை அறிந்து இன்னொரு தெலுங்கு தயாரிப்பாளர்,அந்தப்படத்தைப் பொறுப்பெடுத்துத் தயாரிக்கிறேன் என்று முன்வந்திருக்கிறாராம்.

தன்னுடைய நிறுவனத்தின் தயாரிப்பு என்று அறிவிக்கப்பட்ட படமாக இருந்தாலும் தாழ்வில்லை,படம் நடக்கவேண்டுமானால் அவரிடம் படத்தைக் கொடுத்துவிடலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் ஜெயம்ரவி.

அந்தத் தயாரிப்பாளராவது பொருளாதாரத்தில் தெம்பாக இருக்கிறாரா? ஏற்கெனவே முன்பணம் கொடுத்த பெண் தயாரிப்பாளருக்குக் கொடுக்க வேண்டிய பணம் மற்றும் படப்பிடிப்புச் செலவுகளுக்கான பணத்தோடு வந்திருக்கிறாரா என்றால்? அதுவும் சந்தேகம்தான் என்பதுதான் இப்போதைய நிலை என்கிறார்கள் விவமறிந்தவர்கள்.

இதனால் ஜெயம்ரவி மிகவும் தடுமாறிக் கொண்டிருகிறார் என்கிறார்கள்.

Related Posts