அழகான காதலைக் கொண்ட அன்பில் அவன் – அசோக்செல்வன் உறுதி
ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக்செல்வன், பிரீத்தி முகுந்தன்,சபுமோன்,அப்துல்சமத்,கதிர்பாலு, மஹா டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுத,கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே செல்வா மேற்கொள்ள, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.கருணா மூர்த்தி- அசோக்செல்வன் – அபிநயா செல்வம்- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுவரும் தருணத்தில் இதன் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் ஆகஸ்ட் 12 அன்று நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம்- கவிதா பாண்டியன்,நடிகர் அசோக்செல்வன்,நடிகை ப்ரீத்தி முகுந்தன்,இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில தயாரிப்பாளர் அபிநயா செல்வம் பேசுகையில்…..
ஓ மை கடவுளே படத்திற்குப் பிறகு நல்லதொரு கதைக்காக பொறுமையுடன் காத்திருந்தோம்.இயக்குநர் விக்னேஷ்ராஜா இந்தக்கதையை எங்களிடம் சொன்னதும் எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது.அசோக்செல்வனும் எங்களுக்கு முழு நம்பிக்கையும்,ஒத்துழைப்பும் அளித்தார்.
இந்தப்படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து செப்டம்பரில் வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்.இன்றுமுதல் இப்படத்தினை அனைத்துதரப்பு இரசிகர்களிடமும் சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்தும் பணிகளை முன்னெடுத்து இருக்கிறோம்.
‘ஓ மை கடவுளே’ படத்திற்குப் பிறகு எங்களுடைய தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது திரைப்படம் இது. இதனை அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைத்து நல்லதொரு படைப்பாக இரசிகர்களிடம் சமர்ப்பிக்கிறோம்.அனைவரும் ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அசோக் செல்வனுக்கு ‘போர் தொழில்’,’ப்ளூ ஸ்டார்’ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தது.ஆனால் அதையெல்லாம் தவிர்த்து ‘அன்பில் அவன்’ படத்தை மட்டும் தேர்ந்தெடுத்து முழுஅர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்கினார்.இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் பேசுகையில்…..,
என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை இயக்கும் வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கும்,நடிகர் அசோக்செல்வனுக்கும் நன்றி.
அன்பில் அவன் – கனவைப் பற்றி பேசும் திரைப்படம். அதிலும் பெண்களின் கனவு -அதற்கான துரத்தல்- அதற்கான மெனக்கடல்- போராட்டம்- சவால்கள்- ஆகியவற்றை பற்றி உணர்வுபூர்வமாகவும்,காதலுடனும் பேசுகிறது.
அழகான விஷுவல்ஸ்- அசோக் செல்வன் & பிரீத்தி முகுந்தன் என இரண்டு ஃபிரெஷ்ஷான ஸ்கிரீன் ஃபேர்- திறமை மிகுந்த தொழில்நுட்ப குழுவினர்- இந்த ஆண்டின் சிறந்த மியூசிக் ஆல்பமாக இந்தபடத்தின் பாடல்கள் வரும் அளவிற்கு அற்புதமான இசை – இரசிகர்கள் விரும்பும் வகையிலான திரையரங்க அனுபவம்- என பல அம்சங்கள் இந்த படத்தில் இருக்கிறது.இவை அனைத்தும் இரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.
இந்தப்படம் பெண்களுக்கும்,பெண்மணிகளுக்கும் பிடிக்கும்.ஏனெனில் அவர்களின் கனவு பற்றி பேசுகிறது. இந்தப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒவ்வொரு பெண்களும் தனக்கான பாய்பிரண்ட்- ஹஸ்பண்ட் – இப்படித்தான் இருக்கவேண்டும் என சொல்வார்கள் என நான் நம்புகிறேன் என்றார்.
நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில்……
‘அன்பில் அவன்’ என் இதயத்திற்கு நெருக்கமான படைப்பு.இந்தபடத்திற்காக நான் நீண்டநாட்களாக காத்திருக்கிறேன்.இந்த கதாபாத்திரத்திற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.
இந்தப்படம் திருமணம் ஆகாத பெண்களுக்கும்… திருமணமான பெண்களுக்கும்…பிடிக்கும்.இந்தப்படத்தில் என்னுடன் நடித்த சக நடிகரான அசோக்செல்வனுக்கு நன்றி. சக நடிகைக்கு அதிக அளவில் திரைபங்களிப்பை அளித்து, இப்படத்தை உருவாக்கியதற்காக அவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் அசோக் செல்வன் பேசுகையில்…..
என்னுடைய நடிப்பில் ஒரு படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு நீண்டநாட்கள் ஆகிவிட்டது.’ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் வெளியாகி இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது.
சினிமா குடும்பத்தின் முன்னோர்களான பாரதிராஜா மற்றும் கே.பாக்யராஜ் அவர்களுக்கு நன்றி.
சில நேரங்களில் சில திரைப்படங்களில் பணியாற்றும்போது அது வெளிவருவதற்காக சிறிது காலம் எடுத்துக்கொள்ளும்.அதை நாம் அனுமதிக்கத்தான் வேண்டும்.
ஒவ்வொரு படமும் ஏதேனும் ஒருவகையில் புதிதாக இருக்கவேண்டும் என நினைப்பவன் நான்.அதற்காக ஒரு முயற்சி எடுக்கவேண்டும் என்று உழைப்பவன் நான்.
இயக்குநர் விக்னேஷ்ராஜா எழுதிய கதை.தற்போது சினிமா மாறிவிட்டதாக நான் கருதுகிறேன்.கதையை விட அந்த கதையை சொல்லும் ஸ்டைல்தான் அதாவது ஸ்கிரீன்பிளேதான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதுவும் அந்த கதை- திரைக்கதை – திரையரங்கத்தில் பார்க்கும்போது இரசிகர்களுக்கு என்ன அனுபவத்தை வழங்கும் என்பதில் மாற்றம் ஏற்பட்டதாக எனக்குள் உணர்ந்தேன்.
இந்தப்படத்தை பொறுத்தவரை கதையாகப் பார்த்தால் இதற்குமுன் இதேபோல் நிறையகதை வெளியாகி இருக்கிறது.ஆனால் அதன் ஸ்க்ரீன் பிளே… அது வழங்கக்கூடிய திரையரங்க அனுபவம்… நிச்சயம் புதிதாக இரசிக்கக் கூடியதாக இருக்கும் என முழு நம்பிக்கையுடன் சொல்கிறேன்.
இந்தப்படத்தில் இரசிகர்கள் இரசிக்ககூடிய தியேட்டரிக்கல் மொமென்ட்ஸ் நிறைய உண்டு.அதிலும் குறிப்பாக பெண்கள் இரசிக்கக்கூடிய நிறைய மொமென்ட்ஸ் இந்தபடத்தில் இருக்கிறது.
இது பெண்களை… அவர்கள் படும் கஷ்டங்களை மட்டும் பேசவில்லை.இதில் ஏராளமான மாஸ் மொமென்ட்ஸ் இருக்கிறது.அதிலும் இந்தபடத்திற்கு ஒரு பெண் தயாரிப்பாளர் பக்கபலமாக இருந்து தயாரிக்கும் போது..அதன் வலிமை இன்னும் அதிகமாக இருக்கும்.
நான் உறுதியாக சொல்கிறேன் ‘அன்பில் அவன்’ திரைப்படம் நின்று பேசும்.
அன்பில் அவன் – காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான் என்பதுதான் இப்படத்தின் ஒன்லைன்.
காதல் – புத்திசாலியை முட்டாளாக்கும். சாதாரணமானவனை சாதனையாளராக்கும்.இதை பிரதிபலிக்கும் வகையில்தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள்,நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தபடம்- அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் அழகான காதல்கதை.
இந்தப்படத்தை இதுவரை பார்த்தவர்கள் அனைவரும் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பை பாராட்டினார்கள்.படம் வெளியான பிறகு இரசிகர்களின் பாராட்டும் அவர்களுக்கு கிடைக்கும்.
இந்தபடைப்பு கோவிந்த் வசந்தாவின் கான்ஸர்ட். ’96 ‘படத்திற்கு இணையாக இப்படத்தின் இசையும் பேசப்படும்
இவ்வாறு அவர் பேசினார்.











