கடும் மனஅழுத்தம் தன் காரை உடைத்த இயக்குநர் – விவரம்
நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக்கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ள படம் தி டார்க் ஹெவன்.
‘ஐந்து கொலைகள் ஒரேவிதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை’என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை,பரபரப்பூட்டும் திருப்பங்களுடன் படமாகியுள்ளது.
அறிமுக நாயகன் தொலைக்காட்சி புகழ் சித்து,தர்ஷிகா, ரித்விகா,வேல ராமமூர்த்தி,நிழல்கள் ரவி,சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன்.
கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம் .எஸ்.ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம்
ஜூலை 17 இல் தமிழ்,ஆங்கிலம்,தெலுங்கு,ஹிந்திமொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா ஜூன் 27 அன்னு சென்னை கிரீன்பார்க் ஓட்டலில் நடைபெற்றது.
விழாவில் ட்ரெய்லர்,பாடல்கள் திரையிடப்பட்டன.
விழாவின் தொடக்கத்தில் ஷரண்,கோபால்,மனோஜ் என மூன்று தயாரிப்பாளர்கள் பேசினார்கள்.
தயாரிப்பாளர் மனோஜ் பேசும்போது,
இப்போது வரும் சிலபடங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ஓடுவதில்லை.சிலபடங்கள் ஓடிடியில் ஓடுகின்றன.எல்லா நல்லபடங்களும் ஓடுவதில்லை. இது ஒரு ஆபத்தான சூழ்நிலை இல்லையா? ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி பாதிக்கப்படக்கூடாது என்று சொல்வதுபோல் ஒரு நல்ல படம் ஓடாமல் இருக்கக்கூடாது.நல்லபடங்களை வரவேற்பதற்கு இரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் கொண்டுபோய் சேர்க்கவேண்டும்.நிறைய தரமற்ற படங்கள் வருகின்றன.ஆனால் ‘தி டார்க் ஹெவன்’ நிச்சயம் வெற்றி பெறக்கூடிய நம்பிக்கை கொண்ட படமாக இருக்கிறது.இன்று பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
உப்புமா படங்களால்,தரமற்ற படங்களால் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல,பலருக்கும் பாதிப்பு.திறமையான இயக்குநர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமல் இருக்கிறது.திரை உலகிற்குத் தயாரிப்பாளர் மிக முக்கியம்.இந்தப்படம் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய கிரைம் திரில்லராக இருக்கும்.அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.
இன்னொரு தயாரிப்பாளர் ஷரண் பேசும்போது,
நான் இந்தப்படத்தில் நடிப்பதற்காகத்தான் வந்தேன்.ஆனால் பாலாஜி இந்தப்படத்திற்காக உழைப்பதையும் போராடுவதையும் நேரில் பார்த்தேன். அவர் சிரமத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று தோன்றியது.எனவே தயாரிப்பில் இணைந்து கொண்டேன் என்றார்.
தயாரிப்பாளர் கோபால் பேசும்போது,
இந்தப்படம் தமிழ்சினிமாவில் சிறப்பான படம்.பாலாஜி தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநர்.அவர் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு எடுத்த படம் இது.சினிமாவில் அவருக்கான நல்ல இடம் கிடைக்கும்.இந்தப்படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் யாரும் சோடை போகமாட்டார்கள்.இந்தப்படம் நிச்சயம் வெற்றி பெறும்
என்றார்.
நடிகர் அருள் டி சங்கர் பேசும்போது,
இந்தப்படத்தில் நிறைய வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடந்தன.இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இயக்குநர் பாலாஜியுடன் எனக்கு இது நாலாவது படம்.அவர் இயக்கத்தில் இது இரண்டாவது படம்.சில காட்சிகளை ரீஷூட் செய்தார்.அவர் நினைத்தது சரியாக வரவேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்பார்.இந்தப்படத்தின் போது அவருக்கு தாங்கமுடியாத மனஅழுத்தம் இருந்தது. அந்த அழுத்தத்தில் அவர் காரை அடித்து அவரது காருக்கு சேதாரம் ஏற்பட்டது.ஆனால் அதை வெளியே மற்றவரிடம் காட்டாமல் படப்பிடிப்பில் பரபரப்பாக இருப்பார்.கிரிக்கெட் டீம் போல் அவரைச் சுற்றி எப்போதும் 11 பேர் கொண்ட ஒரு கூட்டம் இருக்கும்.
இந்தப்படத்தில் என்னுடன் நடித்தவர்கள் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
கேமராமேன் சிரிக்கவே மாட்டார் காரியத்தில் கண்ணாக இருப்பார்.
இந்தப்படப்பிடிப்பில் எனக்கு உதவியாளராக ஒரு வயதானவரை அமர்த்தியிருந்தார்கள்.அவர் செய்யும் காரியங்கள் வேடிக்கையாக இருக்கும்.அவை எல்லாமே சிரிப்பை வரவழைக்கும் என்றார்.
நடிகர் ஜெயக்குமார் பேசும்போது
நடந்துபோககூட முடியாத இடத்துக்கெல்லாம் எங்களை அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்தினார்.அதுதான் அவர்களின் தனித்தன்மையாக இருந்தது.
ஒவ்வொரு காட்சியையும் மூன்றுமுறை எடுப்பார். சரியானது வரும்வரை விடமாட்டார்.எதைப்பற்றியும் கவலைப்படாமல் எடுத்தார்.படப்பிடிப்பின்போது எப்போதும் அவருக்கு அவரது மனைவி பெரும் பக்கபலமாக இருந்தார் என்றார்.
நடிகர்,எழுத்தாளர் வேல ராமமூர்த்தி பேசும்போது,
இன்று இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள் காலமானது ஒரு பெரிய இழப்பு.கடந்த 11 ஆம் தேதி பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின்போது என் அருகில் இருந்தார்.இப்போது இல்லை.அந்தத் துயரத்தோடுதான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.
இந்தப்படத்தின் இயக்குநர் பாலாஜி ஒருநாள் திருநெல்வேலியில் இருந்து பேசுகிறேன் என்று பேசினார்.வழக்கமாக கதை சொல்லும் இயக்குநர்கள் சொல்வது போல்தான் இருந்தது.போனில் மிகவும் நம்பிக்கையுடன்தான் பேசினார்.நான் சற்று சந்தேகப்பட்டேன்.இந்தப்படம் எடுக்கமுடியாமல் தோற்றுவிட்டால் நான் அமெரிக்கா சென்றுவிடுவேன் என்றார்.அவரது நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்து நான் நடிக்கச் சம்மதித்தேன்.
படப்பிடிப்பில் எல்லாரும் குடும்பம்போல் பழகினார்கள். பாலாஜியின் உழைப்புக்காகவே இந்தப்படம் ஓடவேண்டும்.பெரிய பெரிய படங்களுக்குக் கூட இவ்வளவு லொகேஷன்களில் எடுத்திருக்க மாட்டார்கள். அந்தஅளவிற்குத் தேடித்தேடி எடுத்தார்கள்.நான் உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் ட்ரெய்லர் பார்க்கிறவரை எனக்கு இந்தப்படத்தின் மீது நம்பிக்கை இல்லை.இப்போது சொல்கிறேன்.இந்தப்படம் தோற்காது.அவர் அமெரிக்கா எல்லாம் செல்ல வேண்டியதில்லை என்றார்.
இயக்குநர் மித்ரன் பேசும்போது ,
இந்தப்படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.இவர்களின் கடினஉழைப்பு ட்ரெய்லரில் தெரிகிறது.சினிமாவுக்கு எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு சினிமா திருப்பிக்கொடுக்கும்.இதுமாதிரி திரைப்படங்களுக்கு ஊடகங்கள் ஆதரவு கொடுக்கவேண்டும் என்றார்.
நடிகர் புகழ் பேசும்போது,
இந்தப்படத்தின் நாயகன் சித்து எனக்கு ஒரு மாதமாகப் பழக்கம்.எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார்.என்னை டார்லிங் என்றுதான் கூப்பிடுவார்.இந்தப்படத்தின் கான்செப்ட் பார்க்கும்போது அழகாக இருக்கிறது.இந்த படத்தில் பங்கெடுத்துள்ளவர்கள் பலரும் எனது நண்பர்கள்.அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசும்போது,
நான் இதற்குமுன்பு இசை அமைத்த உடன்பால் ,ஜாக்கி என்ற இரண்டு படங்களுக்குப்பிறகு இசையமைக்கும் மூன்றாவது படம் இந்தப்படம் இது.
வேல ராமமூர்த்தி சார் போன்று நான் வியந்து பார்த்தவர்கள் என் படத்தில் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல பெருமையாகவும் இருக்கிறது.இந்தப்படத்தில் நான்கு பாடல்கள்.நான்குமே சூழலுடன்தான் இருக்கிறது. என்னைச் சந்திக்க இயக்குநர் பாலாஜி வரும்போது எப்போதும் பத்துபேருடன்தான் வருவார்.அந்தஅளவிற்கு அந்தபடக்குழு ஒற்றுமையோடு இணைந்திருந்தார்கள் என்றார்.
நடிகர் ரித்விகா பேசும்போது,
இவ்வளவுதூரம் இந்தப்படம் வருமா என்று இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.ஒரு 70% படத்தை எடுத்துவிட்டு வேண்டாம் என்று தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் அதேபடத்தை அதே லொகேஷன்களில் எடுத்து ரிலீஸ்வரை கொண்டு வந்து இருக்கிறதே ஒரு சாதனைதான்.ஆச்சரியமாக இருக்கிறது.அதற்கு இவர்களது விடாமுயற்சி தான் காரணம்.படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் தினசரி ஏதாவது பிரச்சினை வரும்.புரிந்துகொள்வதில் சிக்கல் வரும்.மழை பெய்யவேண்டும் என்று பார்த்தால் அன்று மழை வராது.மழை வேண்டாம் என்றால் மழை வரும்.
எப்படி இருந்தாலும் இயக்குநர் பாலாஜி ஓடி ஓடி உழைத்துக்கொண்டே இருந்தார்.
அவர் இந்த வேலைகளை எல்லாம் பார்ப்பதற்கு மேனேஜர் வைத்துக் கொள்ளவேண்டும்.ஒருவரே எல்லா வேலையும் பார்த்துக் கொண்டு சிரமப்படக்கூடாது.
கதைகளை மட்டுமே நம்பி இன்று ஹபீபி,நூறு சாமி போன்ற படங்கள் ஓடுகின்றன.அந்தவகையில் இந்தப்படமும் ஓடும் ஆதரவுகொடுங்கள் என்றார்.
நடிகர் மைம் கோபி பேசும்போது,
தம்பி சித்து இந்தஅளவிற்கு இங்கே வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.இதில் நடித்திருப்பவர்கள் பலரும் எனக்குத் தெரிந்தவர்கள்,நண்பர்கள், தம்பிகள்,தங்கைகள்.சினிமா ஒரு அழகானதுறை. சினிமாவில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.நம் நாட்டில் 140 கோடி பேர் இருக்கிறார்கள்.எத்தனை பேரை கேமரா பதிவு செய்கிறது?சினிமாவில் நடிக்கும் இந்த குறைந்த அளவு மக்களைத்தான் பதிவுசெய்கிறது.அப்படிப்பட்ட பெருமைக்குரியவர்கள் சினிமாவில் இருப்பவர்கள்.
சினிமா எல்லாரையும் மாற்றிவிடும்.ஏற்கும் பாத்திரத்தில் நல்லவனாக மட்டுமல்ல கெட்டவனாகவும் மாறி மாறி நடிக்கிறோம்.
எல்லா திறமைசாலிகளுக்கும் இடம் தருவது சினிமா தான்.நீங்கள் எப்போதும் சந்தோஷத்தை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.துக்கத்தைத் தள்ளி வையுங்கள்.மகிழ்ச்சியாக வாழலாம் என்றார்.
இயக்குநர் பாலாஜி பேசும்போது,
இயக்குநர் பாக்யராஜ் சார் காலமானது வருத்தமாக இருக்கிறது.சினிமாவுக்கு வந்து நான் முதலில் அவரிடம்தான் கதை சொன்னேன்.
இந்தப்படத்தில் தயாரிப்பாளர் ஷரண் இஷ்டப்பட்டு வந்தார்.அவர் இல்லாவிட்டால் இந்தப்படம் இந்தஅளவிற்கு வந்திருக்காது.அதேபோல் கோபால் அவர்கள்,என் தம்பி மனோஜ் ஆகியோர் பெரிதும் பக்கபலமாக நின்றார்கள்.அதுபோல இந்தப்படத்திற்கு நிறையபேர் எனக்குத் துணையாக நின்று இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் நன்றி.சித்து ஒரு சிறப்பான இடத்திற்கு இந்தப்படத்தின் மூலம் செல்வார்.நான் திருநெல்வேலிக்காரன்,சென்னையைச் சேர்ந்தவன் அல்ல.என் படத்தில்தமிழ்பேசும் நாயகியாக தர்ஷிகா வந்ததில் பெரிய மகிழ்ச்சி.அடுத்து ரித்விகா போன்று ஒவ்வொருவராக இந்தப்படத்திற்குள் வந்தபிறகு படம் வேறுமாதிரியாக மாறிவிட்டது.நான் சீன் பேப்பரைக் கொடுத்துவிட்டால் அவர்கள் தானாக எல்லாம் செய்து விடுவார்கள் என்கிற அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.எல்லாரையும் நான் மிகவும் சிரமப்படுத்தி இருக்கிறேன்.இந்தப்படத்தின் மீதும் என்மீதும் சிலருக்குச் சந்தேகம் இருந்தது.சந்தேகப்பட்டார்கள்.ஆனாலும் நான் இந்தப் படத்தை முடித்து விட்டேன்.மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன் என்றார்.
படத்தின் கதாநாயகன் சித்து பேசும்போது,
எனக்குக் குருநாதர் போல இருப்பவர் மைம்கோபி அண்ணன்.அவர் ஒரு நடிப்பு பயிற்சிப்பள்ளி வைத்திருக்கிறார்.அவரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.எனக்குப் பலரின் அறிமுகங்கள் கிடைத்தது அவரால்தான்.
இன்றைய காலகட்டத்தில் நாமே நம்மைப்பற்றி சொல்ல வேண்டும்.மற்றவர்களிடம் நம்மை நாமே முன்வைக்க வேண்டும்.அப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். ‘திருமணம்’ தொடரில் நடித்ததற்குப் பிறகு வந்துள்ள ஒரு பெரியவாய்ப்பாக இந்தப்படத்தைப் பார்க்கிறேன். இந்தபடத்தின் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன்.
இந்தப்படத்தில் நடித்தவர்கள் மூலமும் நிறைய கற்றுக் கொண்டேன்.உதாரணத்திற்கு இரவு மூன்று நான்கு மணிக்கு படப்பிடிப்பில் இருந்தால்கூட ஜெயக்குமார் சார் வந்து எங்களிடம் பேசி சிரிக்கவைப்பார்.எப்படி அவரால் முடிகிறது என்று நினைப்பேன்.இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று கற்றுக்கொண்டேன்.இந்தப்படத்தை அனைவரும் திரையரங்கம் வந்து பார்த்து ஆதரிக்க வேண்டுகிறேன்
இவ்வாறு அவர் பேசினார்.













