சினிமா செய்திகள்

அயோத்தி பட கதைதிருட்டு சிக்கல் – அம்பலப்படும் எஸ்ரா

அயோத்தி படக்கதை குறித்த சர்ச்சை நீள்கிறது. இது தொடர்பாக எழுத்தாளர் மாதவராஜின் அடுத்த பதிவு…..

அயோத்தி படம் நேற்று பார்த்து விட்டேன். தீராத பக்கங்களில் – 2011ல் எழுதியதுதான் மூலக்கதை. அப்படியே இருக்கிறது.

திரைக்கதையில் மாற்றம் செய்திருக்கிறார்கள். பெயர்களில் மாற்றங்கள் இருக்கின்றன. பீகாரில் இருந்து வந்தவர்களாக குறிப்பிட்டு இருந்தேன். அதை அயோத்தியாக மாற்றி இருக்கிறார்கள். ஒரு கிராம வங்கி ஊழியராக பாதிக்கப்பட்டவரைச் சொல்லி இருந்தேன். சடங்கு சம்பிரதாயங்களில் ஊறிய ஒரு சங்கியாக அந்த வட இந்திய மனிதரை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இரண்டு மகள்களும், ஒரு மகனும் என பதிவு செய்திருந்தேன். ஒரு மகளும், மகனும் என காட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிய தமிழ்நாட்டு மனிதர்களாக எங்கள் வங்கியின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சாமுவவேல் ஜோதிக்குமாரையும், சுரேஷ் பாபுவையும் குறிப்பிட்டு இருந்தேன். இதில் விபத்துக்குள்ளான கார் டிரைவரின் நண்பனான சசிக்குமாரும் இன்னொருவரும் உதவுவதாக சித்தரித்து இருக்கிறார்கள். ரம்ஜான் பண்டிகை மற்றும் மங்காத்தா பட ரிலீசை ஒட்டிய ரசிகர்களின் கொண்டாட்டங்களாய் வெளியுலகம் இருந்ததை குறிப்பிட்டு இருந்தேன். இதில் தீபாவளி கொண்டாட்டங்களாய் காட்டி இருக்கிறார்கள்.

இராமேஸ்வரம் வந்த வடநாட்டு குடும்பம் கார் விபத்தில் விபத்தில் சிக்குவது, அந்த குழந்தைகளின் அம்மா இறந்து போவது, நிலமும் மொழியும் வேறான மதுரையிலிருந்து அந்த குடும்பத்தை கடும் சிரமங்களுக்கு இடையே விமானத்தில் எப்படி அனுப்பி வைத்தனர் என்னும் மையக்கதை அப்படியே இருக்கிறது.

’தங்களைப் பிடித்து உலுக்கி, கட்டியழுது, அவர்களின் கைகளையும், உடலையும் தாங்கிப் பிடித்து, கூடவே இருந்து ஆதரவு தரக்கூடிய சொந்த மனிதர்களும், மண்ணுமே அவர்களுக்கு அப்போது தேவை’ என்னும் வரிகளை அப்படியே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

பதிவின் இறுதியில், உதவி செய்த சாமுவேல் ஜோதிக்குமாரையும், சுரேஷ் பாபுவையும், கையெடுத்துக் கும்பிட்டு, “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ? ” என அந்த வடநாட்டு மனிதர் பேசுவதாக எழுதியிருந்தேன். மனிதாபிமானத்தின் மகத்துவத்தை அப்படி உணர்த்தி இருந்தேன். படத்தில் “தம்பி, உங்க பேர் என்ன?’ என கேட்பார். உதவி செய்த சசிகுமார், “மாலிக்’ என சொல்வார்.

படத்தை இன்னும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் எடுத்து இருக்க முடியும் என்றாலும் – நல்ல சினிமா. நிச்சயம் பாராட்டலாம். வரவேற்கலாம்.

ஆனால் படத்திற்கு நான் எழுதிய பதிவே அச்சாணி என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.

*****

நேற்று எங்கள் சங்கத்தின் கூட்டம் ஒன்றிற்காக பயணத்தில் இருந்த போது தோழர் சாமுவேல் ஜோதிக்குமார் போன் செய்தார். “மாது, இன்னிக்கு தமிழ் இந்து பத்திரிகையில் அயோத்தி பட விமர்சனம் வந்திருக்கு பாருங்க.” என்றார். என்னவென்று கேட்டேன். “அது நம்ம கத. படிச்சா தெரியும்” என்றார். மொபைலில் தேடி படித்தேன். அது குறித்து அப்போது தோன்றியதை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துவிட்டு. சங்கக் கூட்டத்தில் உட்கார்ந்து விட்டேன். கொஞ்ச நேரத்தில் தொடர்ந்து மொபைல் அழைக்கத் தொடங்கியது. தோழர்களும், நண்பர்களும், திரைப்படத் துறையைச் சேர்ந்த இருவரும் போன் செய்து பேசினார்கள்.

அப்போதுதான் இந்தக் கதை தன்னுடைய கதை என எழுத்தாளர் எஸ்.ரா பதிவிட்டு இருந்ததும், அது குறித்து ஏற்கனவே எழுந்த சர்ச்சைகளும் எனக்கு தெரிய வந்தன. ஃபேஸ்புக்கில் என் பதிவிலும் தெரியப்படுத்தி இருந்தார்கள்.

அவைகளிலிருந்து, குறிப்பாக நரன் சங்கர் தாஸ் பதிவின் வழியாக எனக்கு உண்மையைப் புரிந்து கொள்ள முடிந்தது.

சங்கர் தாஸ் Sankar Dass அவர்களிடம் அயோத்தி பட இயக்குனர் மாரிமுத்து இரண்டு பக்க கதை ஒன்றை கொடுத்து இது எஸ்.ராவின் கதை, இதற்கு திரைக்கதை வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். அதில் பீகார் என்பதை அயோத்தி என நான் மாற்றினேன் என சங்கர்தாஸ் சொல்கிறார். செப்டம்பர், 2011ல் நான் எழுதிய பதிவில் பீகாரைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டு இருந்தேன். ஆக எஸ்.ராவின் கதை என கொடுக்கப்பட்டதில் பீகார் என்றுதான் ஆரம்பத்தில் இருந்திருக்கிறது. இதற்கு மேல் நடந்தவைகளைச் சொல்ல என்ன வேண்டி இருக்கிறது?

*****

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை அவருடைய கல்லூரி நாட்களிலிருந்தே பழக்கம். நான் மிகவும் மதிக்கிற, சாத்தூரில் இருக்கிற மருத்துவர் வெங்கடாசலம் வெங்கடாசலம் சண்முகம் அவர்களின் தம்பி அவர்.

எஸ்.ரா கையெழுத்துப் பிரதியில் எழுதிய ‘ கபாடபுரத் தெருக்களில்’ என்னும் சிறுகதையை டாக்டர் வல்லபாய் அறையில் படித்ததிலிருந்து அவரது இலக்கிய உலகத்தை அறிவேன். புத்தகங்களோடும் இலக்கியத்தோடும்தான் எஸ்.ராவின் வாழ்க்கையே ஒன்றிப் போயிருந்தது. தேர்ந்த வாசிப்பும், தொடர்ந்த பயணங்களும், ஈர்க்கும் மொழி நடையும் கொண்ட எழுத்தாளராய் அவர் வளர்ந்து, இன்று தமிழ் இலக்கிய உலகில் முக்கிய எழுத்தாளுமையாய் அறியப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் எனக்குண்டு.

நேற்று மதியத்திற்கு மேல் சுரேஷ்பாபு ( மதுரையில் உதவிய இன்னொரு தோழர்) எழுத்தாளர் எஸ்.ராவிடம் இரண்டு நாட்களாக வாட்ஸ் அப்பில் அனுப்பிய பதிவுகளை எனக்கு ஷேர் செய்திருந்தார். தனது கதை என எஸ்.ரா குறிப்பிட்டு இருந்ததை மறுத்து, உண்மைகளை எடுத்துரைத்துள்ளார். தோழர் மாதவராஜ் அப்போதே இது குறித்து எழுதி இருப்பதையும் அவரிடம் சுட்டிக் காட்டியுள்ளார். அவருக்கு பதில் அளிக்காமல் இருந்துள்ளார் எஸ்.ரா.

எனக்கு அதுதான் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தந்தது. எஸ்.ராவுக்கு இந்த பிரச்சினையில் மாதவராஜ் பெயரும் இருப்பதாக ஏற்கனவே தெரிந்திருக்கிறது. மிகவும் பிரியமாக, நெருக்கமாக ஒருவரையொருவர் அறிந்தவர்கள் நாங்கள். நான் ஏற்கனவே எழுதியதை அறியாதவராக இருந்தால் எஸ்.ரா இதுகுறித்து என்னிடம் பேசியிருக்க வேண்டும். “இப்படி கேள்விப்படுகிறேன், உண்மையா மாது?” என அவர் கேட்டிருக்க வேண்டும். அப்படி கேட்க முடியாத மனத்தடையில் உண்மைகள் உறங்காமலிருக்க வேண்டும் அல்லது பீடத்தில் வீற்றிருக்கும் மனோபாவம் பீடித்திருக்க வேண்டும்.

அன்புள்ள எஸ்.ரா!
அயோத்தி உங்கள் கதையல்ல.
ஊரும் உலகமும் சொல்லும்!
டாட்.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Related Posts