சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அறிவிப்பு – வரிசையில் நடந்துள்ள மாற்றம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘டான்’ திரைப்படம் அடுத்ததாக வெளிவர இருக்கிறது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் 2022 ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

தெலுங்கு இயக்குநர் ‘ஜதி ரத்னலு’ புகழ் அனுதீப் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமன் முதன் முதலாக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி சேர இருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு ‘எஸ்.கே 20’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் நடிகை ரிது வர்மா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கு தமிழ் ஆகிய இருமொழிகளிலும் உருவாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

டான் படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் அசோக் இயக்கும் சிங்கப்பாதை படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்றும் அது எஸ்கே 20 என்றும் அதற்கடுத்து இந்தத் தெலுங்குப் படத்தில் நடிப்பார் என்றும் அது எஸ் கே 21 ஆக இருக்கும் என்றும் முதலில் சொல்லப்பட்டது.

2021 நவம்பர் 17 ஆம் தேதி இசையமைப்பாளர் தமன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அதற்கு, உங்கள் அன்புக்கு நன்றி. பின்றோம் தட்றோம் தூக்கறோம் என்று சொல்லி கூடவே எஸ்கே21 என்கிற குறியீட்டையும் பதிவிட்டிருந்தார் தமன்.

இப்போது, தெலுங்குப்படத்தை எஸ் கே 20 என்று சிவகார்த்திகேயனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்பதால் அவர் படங்களின் வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Related Posts