சினிமா செய்திகள்

எதிர்பாரா வெற்றி – ஆனந்தக்கண்ணீர் விட்ட டிராஜேந்தர்

தமிழ்த்திரைப்படத் துறையை ஆட்டுவிக்கும் முக்கிய அமைப்பு சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.

இச்சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் நேற்று (டிசம்பர் 22 ) கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது.

 

இந்தத்  தேர்தலில் தலைவர் பதவிக்கு, தொடர்ந்து மூன்று முறை தலைவராக இருந்த அருள்பதி தலைமையிலான அணிக்கும்,டி.ராஜேந்தர் தலைமையிலான அணிக்கும் போட்டி இருந்தது.

மொத்தம் 534 வாக்குகளில் 458 வாக்குகள் பதிவானதாகச் சொல்லப்பட்டது.

இவற்றில், டி.ராஜேந்தர்  235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அருள்பதிக்கும் அவருக்குமான வித்தியாசம் 12 வாக்குகள்.

மேலும் இத்தேர்தலில், செயலாளர் பதவிக்கு டி.மன்னன் (239 வாக்குகள்),பொருளாளர் பதவிக்கு பாபு ராவ் (258 வாக்குகள்),துணைத் தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு (232 வாக்குகள்)
துணைச் செயலாளர்  பதவிக்கு K.காளையப்பன் (226 வாக்குகள்)

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தம் 16 செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு அருள்பதி அணியில் பத்து பேரும் டி.ராஜேந்தர் அணியில் 6 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
அருள்பதி தலைமையிலான அணி பல்லாண்டுகளாக விநியோகஸ்தர்கள் சங்கத்தில் செயல்பட்டு வந்தவர்கள், டி.ராஜேந்தர் மற்றும் அவரது அணியில் தங்கர்பச்சான் உள்ளிட்ட பல புதியவர்கள் இருந்தனர்.
எனவே அருள்பதி அணியே வெற்றி பெறும் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் முடிவு மாறிவிட்டது. இதனால்,தேர்தல் முடிவுகள் வெளியானதும் ஆனந்தக்கண்ணீர் விட்டு அனைவருக்கும் நன்றி சொன்னார் டி.ராஜேந்தர்.

Related Posts