வெற்றிநாயகன் அருண்விஜய் கமர்ஷியல் அரசன் ஹரி இணையும் யானை
தமிழ்த் திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார் அருண் விஜய்.
தமிழ்த் திரையுலகின் கமர்ஷியல் அரசன் என்று சொல்லப்படும் இயக்குநர் ஹரி அருண்விஜய் ஆகியோர் கூட்டணியில் உருவான படம் “யானை”. இவர்கள் இருவரும் நிஜத்தில் மாமன் மச்சான் உறவுமுறை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில் மே 30, 2022 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வினில் இயக்குநர் ஹரி பேசியதாவது….
நானும், அருண்விஜய் இணைந்து பணியாற்ற வேண்டும் எனப் பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்தக் கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வாய்ப்பு அமையக் காரணம் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் அவர்கள்தான். இந்தப் படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை. கடந்த 3 வருடங்கள் எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்தது. படத்தைக் கொஞ்சம் வேற மாதிரி எடுக்க விரும்பினேன். பல மொழி இயக்குநர்களிடம் பல விசயங்களைக் கற்றுகொண்டேன், பின்னர் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன். சேவல் படத்திற்குப் பிறகு ஜிவியுடன் பணி புரிந்துள்ளேன். படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பெரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். படத்தில் நிறைய ரிஸ்க்கான காட்சிகள் இருந்தன. எல்லோரும் இணைந்து ஒத்துழைத்துப் பணியாற்ற வேண்டிய காட்சிகள் இருந்தன, அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். நான் தாமிரபரணி, ஐயா படம் எடுத்த போது பின்பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றி இப்படம் எடுத்துள்ளேன். சமுத்திரக்கனி சார் ஒரு உதவி இயக்குநர் போல் வேலை பார்த்தார். அது எனக்கு மிக உதவியாக இருந்தது. எனது ஆரம்பகால கட்டப் படங்கள் போல் இப்படம் இருக்கும். அனைவருக்கும் நன்றி.
நடிகர் அருண் விஜய் பேசியதாவது….
நானும், இயக்குநர் ஹரியும் ரொம்ப நாளாகப் பணியாற்ற விரும்பினோம். இவ்வளவு பெரிய பொருட்செலவில், பலமான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் படத்தை உருவாக்கப் பெரிய தயாரிப்பாளர் தேவைப்பட்டார். அப்போது நாங்கள் அணுகிய நபர் சக்தி சார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தை உருவாக்க பெரிய தைரியம் வேண்டும். சுற்றியுள்ளவரை பாதுகாக்கும் ஒரு கதாபாத்திரம் தான் எனது கதாபாத்திரம். இந்தப் படத்தில் நிறைய சவால்கள் இருந்தது. ரொம்ப நாள் கழித்து கிராமம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துள்ளேன். ஹரி சார் எனக்குப் பெரிய உதவியாக இருந்தார். படத்தின் ஆக்சன் பெரிய சவாலாக இருந்தது. எனக்கு அடிபட்டது, அதையும் மீறி படத்தை எடுத்து முடித்தோம். கண்டிப்பாகப் படம் பேசப்படும் என நம்புகிறோம். இது ஹரி சார் பேட்டர்னில் இருந்து மாறி எடுத்தபடம். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்தப் படம் அனைவரையும் எளிதாக ஈர்க்கும் படமாக இருக்கும். படத்தில் பல காட்சிகளை நான் உணர்ந்து அந்தப் பாத்திரமாக மாறி நடித்தேன். இந்தப் படம் காமெடி நிறைந்த, பொழுதுபோக்குத் திரைப்படம். ஹரி சார் கண்டிப்பான மாஸ்டர், அவருடைய அர்ப்பணிப்பு அபாரமானது. அவருடைய வேகம் எங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுத்தது. பல இடங்களில் இப்படத்தை எடுத்துள்ளோம். படத்தை அட்டகாசமாக எடுத்துள்ள ஒளிப்பதிவாளருக்கு நன்றி. ஜிவி உடன் இது எனக்கு முதல் படம். படத்தில் பங்குபெற்ற அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களும் பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர். எல்லோருக்கும் நன்றி.
நடிகை பிரியா பவானி சங்கர் பேசியதாவது….
இவ்வளவு பெரிய படத்தை சீக்கிரம் முடிக்கக் காரணம் இயக்குநர் ஹரி சார் தான். அவருடைய வேகம் எல்லோரையும் பிரமிக்க வைத்தது. அவருடைய உழைப்பைக் கணக்கிடவே முடியாது. அருண் சாருக்கு நன்றி. ஹரி சார் உடைய வேகத்திற்கு, ஒளிப்பதிவாளர் ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்றியுள்ளார். ராதிகா மேடம், ஐஸ்வர்யா மேடம் போன்ற மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது பெரிய மகிழ்ச்சி. சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய் போன்ற கலைஞர்களின் நடிப்பைப் பார்த்தது பெரிய அனுபவமாக இருந்தது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் பெரிய ரசிகை நான். இந்தப் படம் ஹரி சார் பாணி படமாக இருக்காது. மிக நல்ல உணர்வுபூர்வமானப் படம், படத்திற்கு ஆதரவு தாருங்கள்.
தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் கூறியதாவது…..
இயக்குநர் ஹரியுடன் பணியாற்றுவது எனது பல நாள் கனவு, இந்தப் படம் அதற்கு சரியான வாய்ப்பாக அமைந்தது. அவர் தயாரிப்பாளரின் இயக்குநர். இந்தப் படத்தை எந்தத் தடையுமில்லாமல் எடுக்க உதவிய படக்குழுவுக்கு நன்றி.
ஒளிப்பதிவாளர் கோபிநாத் பேசியதாவது……
ஹரி சார் உடன் இணைவது இது தான் முதல் முறை. பல நாள் கனவு இது, அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது இப்போது நிறைவேறி உள்ளது, அதற்கு உறுதுணையாக இருந்தது தயாரிப்பாளர். அவருக்கு நன்றி. படம் மிக நல்ல அனுபவமாக இருந்தது. இந்தப் படத்துக்கு ஆதரவு தாருங்கள். நன்றி.
நடிகர் ராஜேஷ் பேசியதாவது….
ஹரி உடைய படங்கள் எப்பொழுதும் செண்டிமெண்ட் நிறைந்து இருக்கும். படத்தில் அருண் விஜய், சமுத்திரக்கனி ஆகியோருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. எல்லா வயதினரும் இரசித்துப் பார்க்கும் படமாக இப்படம் இருக்கும்.
நடிகர் தலைவாசல் விஜய் பேசியதாவது….
இந்தப் படம் எனக்கு வேறு ஒரு பரிமாணமாக இருக்கும். அருண் விஜய்க்கு இந்தப் படம் மைல்கல்லாக இருக்கும். கொரோனாவுக்கு பிறகு மிகப்பெரிய படமாக யானை இருக்கும் என நான் நம்புகிறேன். படத்தில் பணிபுரிந்த அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
நடிகர் கேஜிஎஃப் புகழ் இராமச்சந்திர ராஜு பேசியதாவது….
இந்தப் படத்தில் ஹரி சார் உடன் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சி. அவர் நிறைய விசயங்களைச் சொல்லிக் கொடுத்தார். நிறையக் கற்றுக்கொண்டேன். அருண் விஜய் உடன் பணியாற்றியது மகிழ்ச்சி, அவர் பல சிக்கல்களைக் கடந்து இந்தப் படத்தில் நடித்தார். ஆக்சன் காட்சியில் அடிபட்ட போதும், மறுநாள் சூட்டிங் வந்தார். அவருக்கு இந்தப் படம் பெரிய வெற்றி கொடுக்கும். படக்குழுவுக்கு நன்றி.
நடிகர் சஞ்சய் பேசியதாவது….
கண்டிப்பாக இந்தப் படம் அருண் விஜய்க்கு பெரிய மைல்கல்லாக இருக்கும். நான் பார்த்து ஆச்சர்யப்பட்ட விஷயம், இந்தப் படத்தில் அருண் விஜய் சிங்கிள் ஷாட்டில், 3.30 நிமிட சண்டைக் காட்சி ஒன்றில் நடித்துள்ளார். அது மிகப்பெரிய அளவில் பேசப்படும், இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த அருண் விஜய் மற்றும் இயக்குநருக்கு நன்றி
நடிகை அம்மு அபிராமி பேசியதாவது….
இந்தப் படத்தில் நடிக்கும் போது உடன் நடித்த அனைவரும் பெரிய கலைஞர்கள். அவர்களுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஹரி சாருடனும், அருண் விஜய் சாருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
இறுதியாக படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
இத்திரைப்படம் ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.











