Uncategorized செய்திக் குறிப்புகள்

பிரச்சார தொனி இல்லாமல் நல்ல கருத்து சொல்லும் படம் – பூமராங் பற்றி அதர்வா பெருமிதம்

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’.

அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மார்ச் 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்நிலையில் மார்ச் 1 ஆம் தேதி இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அதில்,இயக்குநர் ஆர்.கண்ணன், நாயகன் அதர்வா, நாயகி இந்துஜா,நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, படத்தொகுப்பாளர் ஆர்கே செல்வா,இசையமைப்பாளர் ரதன், எம்கேஆர்பி ப்ரொடக்‌ஷன்ஸ் எம்கே ராம் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது,

எல்லாமே இருந்தா தான் படம் எடுப்பேன் எனச் சொல்லாமல் இருப்பதை வைத்து படத்தை மிகச்சிறப்பாக எடுப்பவர் இயக்குநர் கண்ணன். மோதலில் தான் காதல் உருவாகும் என்பது போல, எனக்கும் கண்ணன் சாருக்கும் உரசலில் தான் நட்பு ஆரம்பித்தது. எனக்குக் கதை எழுதுவதில் ஒரு நம்பிக்கை வர முக்கிய காரணம் இவன் தந்திரன் படம் தான். ஒரு ஹீரோவாக இருந்தாலும் எந்தப் பிரதிபலனும் பாராமல் உதவக் கூடியவர் அதர்வா. பல காட்சிகளில் எனக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுக்கச் சொன்னார். அவரின் அர்ப்பணிப்பு மிக அபாரமானது. நதிநீர் பிரச்சினையை, நதிநீர் இணைப்பைப் பற்றியும் பேசும் மிக முக்கியமான படம் என்றார்.

இசையமைப்பாளர் ரதன் பேசும்போது,

நான் இந்த இடத்துக்கு வரக் காரணம் என் அம்மா தான். அவர் என் மீது வைத்த நம்பிக்கை தான் நான் இங்கு இருக்கிறேன். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு பாராட்ட என்னை அழைத்தார் கண்ணன் சார். அங்கு போன பிறகு நாம படம் பண்ணலாமா என சொன்னதோடு, அடுத்த நாளே என் பெயரை படத்தின் விளம்பரத்தில் சேர்த்தார். தமிழில் ஒரு நல்ல படத்தில் இங்கு வந்து சேர்ந்தது மகிழ்ச்சி. சமீபத்தில் மறைந்த என் தந்தைக்கு இந்தப் படத்தைச் சமர்ப்பிக்கிறேன். நல்ல ஒரு கருத்தைச் சொல்லும் ஒரு முக்கியமான படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் இசையமைப்பாளர் ரதன்.

நாயகி இந்துஜா பேசும்போது,

அதர்வா, ஆர்ஜே பாலாஜியுடன் தான் அதிகம் எனக்குக் காட்சிகள் இருந்தது. எனக்கு நடிக்க மிகவும் எளிதாக இருக்குமாறு முழு சுதந்திரம் கொடுத்தார் கண்ணன் சார். ஆர்ஜே பாலாஜியின் மார்க்கெட் இப்போது இன்னும் ஏறியிருக்கிறது, எல்லோரும் தியேட்டரில் போய் படத்தைப் பார்ப்பீங்க என நம்புகிறேன் என்றார் இந்துஜா.

இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது,

ஒரு படம் நினைத்த மாதிரி வரணும்னா அதற்கு நாயகனின் ஆதரவு நிச்சயம் தேவை. அதர்வா அந்த வகையில் படத்தின் மிகப்பெரிய தூணாக இருந்தார். அடுத்த படத்திலும் நாங்கள் இணைகிறோம். எப்ரல் மாதம் படப்பிடிப்புக்குச் செல்ல இருக்கிறோம்.

இந்தப் படம் இந்த அளவுக்கு வர முக்கிய காரணமாக இருந்த பங்கஜ் மேத்தா, அன்புச்செழியன், ராம் பிரசாத் ஆகியோருக்கு நன்றி. படத்தை நல்ல தேதியில் வெளியிட எனக்கு ஆதரவாக இருக்கும் ட்ரைடெண்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சாருக்கு நன்றி.

இவன் தந்திரன் படத்துக்குப் பிறகு இது எனக்கு முக்கியமான படம். அந்தப் படம் நன்றாக ஓடினாலும், ஒரு சில காரணங்களால் நாங்கள் எதிர்பார்த்த வரவு இல்லை. ஒரு நல்ல திரைப்படத்தை ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை. இந்தப் படத்தையும் ரசிகர்கள் வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன் என்றார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

நாயகன் அதர்வா பேசும்போது,

படம் எப்போது ஆரம்பித்து எப்போது முடித்தோம் என தெரியவே இல்லை. மிக வேகமாக முடித்து விட்டோம். பூமராங் என்றால் கர்மா. நாம் என்ன செய்தோமோ அது தான் நமக்குத் திரும்ப வரும். இந்தப் படத்தில் பிரச்சார தொனி எதுவும் இருக்காது, எங்கள் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக படத்தை எடுத்திருக்கிறோம். ரதன் ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் தமிழில் நிறையப் படங்கள் இசையமைக்க வேண்டும்.

இந்துஜா, மேகா ஆகாஷ் இரண்டு பேருக்குமே நல்ல பிரகாசமான எதிர்காலம் உண்டு. தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை. நல்ல கருத்தைத் தாங்கி இந்த பூமராங் வந்திருக்கிறது, அனைவரையும் சென்று சேரும் என நம்புகிறேன் என்றார் நடிகர் அதர்வா.

Related Posts