செய்திக் குறிப்புகள்

கமல் சிம்பு தனுஷ் விஷால் மீது அவதூறு – நடிகர் சங்கம் விளக்கம்

தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஜூலை 5 ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில்….

இன்று (05/07/2024) ஊடகங்களில் வெளியான தவறான ஒரு செய்தி கண்டு பேரதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன்.
நடிகர்கள் திரு.கமல்ஹாசன், திரு.தனுஷ், திரு.சிம்பு, திரு.விஷால் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு இனி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு அளிக்காது என்று ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஏராளமான ஊடக நண்பர்களின்‌‌ வேண்டுகோளுக்கு இணங்க, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் என்ற முறையில், இந்தத் தவறான செய்திக்கு விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக திரு.கமல், திரு.தனுஷ், திரு.சிம்பு மற்றும் திரு.விஷால் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எந்தப் புகாரும் நிலுவையில் இல்லாத நிலையில், இவ்விதம் அவதூறாகச் செய்தி பரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வலியுறுத்துகிறேன்.

மேலும், இது தொடர்பாக விசாரித்ததில்,முன்னணி நடிகர்கள் சிலர் மீதான புகார்கள் குறித்து ஆலோசித்தோமே தவிர எந்தவித நடவடிக்கை குறித்தும் முடிவெடுக்கவில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் உறுதி செய்திருப்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

தொடர்ந்து எங்கள் சங்க உறுப்பினர்கள் தொடர்பான துறை ரீதியான தவறான‌ தகவல்களைப் பரப்புவோருக்கு, பொறுப்புள்ள ஊடகங்கள் ஒத்துழைப்பு மறுக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

துறை சார்ந்த பல சிக்கல்களுக்கு இடையே, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் இடையே தொடரும் இணக்கமான நட்புறவுக்கு ஊறு விளைவிக்க முயலும் சில விஷமிகளின் இந்த முயற்சி ஒரு போதும் பலன் தராது என்பதையும் உறுதிபட அறிவுறுத்துகிறேன்.

இணைந்தே பயணிப்போம்.இனிதே பயணிப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts