செய்திக் குறிப்புகள்

ப்ரேக் பாஸ்ட் படத்தை தயாரித்தது ஏன்? – தயாரிப்பாளர் விளக்கம்

‘செல்லமே’,‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில்,கிரிஜா வரதராஜ் தயாரிப்பில்,நடிகர்கள் ராணவ்,ரோஸ்மின், சம்பத்குமார்,கஸ்தூரி,கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’.

இந்தமாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 17 அன்று நடைபெற்றது.

நிகழ்வில் படத்தொகுப்பாளர் பாஸ்கர் பேசியதாவது….

படத்தின் தலைப்பு ‘பிரேக்ஃபாஸ்ட்’ என வைக்கப்பட்டுள்ளது.ஆனால்,நாங்கள் மிகவும் ஸ்லோவாகதான் எடிட் பண்ணினோம்.ஏனென்றால் நிறைய வெர்ஷன் எடிட் செய்தோம்.அதில் இயக்குநருக்கு எப்பொழுது மனநிறைவு ஏற்பட்டதோ அப்பொழுதே இப்படம் வெளியில் வந்தது என தெரிவித்தார்.

நடிகை அமிதா….

காதலிப்பது எல்லோருக்கும் எளிது.ஆனால்,அந்த காதலில் நிலைத்து நிற்பது கடினம்.ஏன் என்றால் நம் எல்லோரிடமும் ஒரு வெற்றிடம் இருக்கிறது.அதை நிரப்ப நம் தாயின் அன்பை துணையிடம் தேடும்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.திருமணம் ஆன தம்பதி நிச்சயம் இந்தப்படத்தை பார்க்கவேண்டும்.சின்ன ஈகோ கூட எப்படி பெரிய பிரச்சினையாக மாறுகிறது என்பதை இந்தக்கதை சொல்லும் என்றார்.

நடிகர் க்ருத்கிக் மோகன்….

ஜிவி பிரகாஷ் இசையில் திரைப்படம் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது.
எனக்கு வாழ்நாள் நினைவாய் இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கும்,என்னுடன் நடித்த தோழமை நடிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் இத்திரைப்படத்தை அனைவரும் திரையரங்கு சென்று பார்க்கவேண்டும் என்றார்.

விநியோகஸ்தர் குகன்…….

இந்தப்படத்தில் உழைத்துள்ள அனைவருக்கும் குறிப்பாக கவிப்பேரரசு வைரமுத்து,இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்,தயாரிப்பாளர்கள்,இயக்குநர் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் வணக்கங்கள்.இந்தப்படத்தின் தலைப்பு என்பது எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுதல்.இதனை இயக்குநர் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் படமாக்கி உள்ளார். ‘ஜனநாயகன்’ திரைப்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இதனை எப்படியும் ஈடுசெய்யமுடியாது.இவற்றை எல்லாம்தாண்டி அந்தப்படம் திரையரங்கில் வெளியிடப்பட உள்ளதற்கு அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என்றார்.

இயக்குநர் வசந்தபாலன்……

20 வருடங்களுக்கு முன்பு சிறுவனாக பார்த்த ஒரு பையன் இப்பொழுது 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறந்த இசையமைப்பாளராக ஆளுமையாக வளர்ந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது வாழ்வின் வெற்றியில் நான் ஜிவி பிரகாஷை சந்தித்த நாள் மிகவும் வியப்பான நாள்.அதனை எண்ணி மகிழ்கிறேன்.இப்பொழுது அவருக்கு இருக்கின்ற இந்த புரிதல் என்னை மிகவும் வியக்க வைக்கிறது.மிகப் பிரபலமான இசையமைப்பாளராக உள்ள ஜிவி பிரகாஷ் ஒரு புதுமுகநடிகரின் திரைப்படத்தில் வேலை செய்வது மிகவும் பெருமையாக உள்ளது.
இயக்குநர் காந்தி கிருஷ்ணன் என்பவர் ஒரு மிகச்சிறந்த தலைவர்.அவரின் இந்தத் திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள என்றார்.

நடிகை ரோஸ்மின் பேசியதாவது……

என்மீது மிகவும் நம்பிக்கை வைத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.இந்தத் திரைப்படம் எனக்கு மிகப்பெரிய திருப்புனையாக அமைந்திருக்கிறது.ஜிவி பிரகாஷ் இசையில் நான் நடித்துள்ளது எனக்கு பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன்.எங்களது தயாரிப்பாளர்கள் எங்களை ஒரு குடும்பமாக வழிநடத்தினார்கள்.பாடலாசிரியர் வைரமுத்து முன்பு நான் நின்று பேசுவதே எனது பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகின்றேன்.உங்கள் அனைவருக்கும் எனது நன்றி!என்னுடன் உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி என தெரிவித்தார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்…..

எனக்கு முதல்முதலாக வாய்ப்பளித்த இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி.நீங்களும்,இயக்குநர் ஷங்கர் அவர்களும் எனக்கு அளித்த இந்த வாய்ப்பின் மூலம் நான் கற்றுக்கொண்ட பாடத்தில்தான் நானும் புதுமுக நடிகர்கள் நடிக்கின்ற படங்களில் இணைந்து வேலை செய்ய ஒப்புக்கொள்கிறேன்.
எனது துவக்க காலங்களில் எனக்கு பட வாய்ப்பு அளித்த அனைத்து இயக்குநர்களுடனும் நான் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்.அந்தவகையில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுடன் நான் தொடர்ந்து இயங்க வேண்டும் என நினைத்தேன்.அதனாலே இந்தப்படத்தில் நான் இணைந்து பணியாற்ற முன்வந்தேன்.இந்தப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துகள்.அவர்கள் வெற்றிபெற எனது சிறப்பான வாழ்த்துகள் என்றார்.

கதாநாயகன் ராணவ்……

ஒரு முதல்படத்தில் இதுபோன்று சிறந்த ஆளுமைகளான இயக்குநர் காந்தி கிருஷ்ணா,கவிப்பேரரசு வைரமுத்து, திரைப்பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், டிஸ்ட்ரிபியூட்டர் குகன் ஆகியோரின் படங்களில் நான் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன்.என்னைப் போன்று எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவனுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது ஒரு மிகப்பெரிய பாக்கியமாகவும் ஆசீர்வாதமாகவும் பார்க்கின்றேன்.இதை எனக்கு அளித்த காந்திகிருஷ்ணன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி.ஊடக நண்பர்களுக்கு நன்றி.உங்களால்தான் இந்தப்படம் பொதுமக்களை சென்று சேர்த்து இருக்கிறது.படம் வெளியான பின்பும் திரையரங்குகளுக்கு சென்று இதே ஆதரவை நீங்கள் தரவேண்டும் என்றார்.

கவிப்பேரரசு வைரமுத்து….

நான் நடிகர் நடிகைகளை நேரில் பார்த்ததில்லை. அப்படி பார்ப்பது என்பது வெற்றிவிழாக்களில் மட்டும் இருந்தது.ஆனால்,இப்பொழுது அப்படி இல்லை. இதுபோன்று பாடல் வெளியீட்டு விழாவில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இது ஒரு கொண்டாட்டம்.நம்மை நாம் அறிமுகம் செய்து கொள்வதற்கும்,நலம் விசாரிப்பதற்கும் இந்தமேடை பயன்படுவதாகதான் நினைக்கிறேன்.இந்தமேடையைக் கூட்டிய நண்பர் காந்திகிருஷ்ணாவிற்கு எனது நன்றி. நான் இப்பொழுது குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் பேச நினைக்கின்றேன். அதில்,நண்பர் காந்திகிருஷ்ணாவை எனக்கு முப்பது ஆண்டுகளாக தெரியும்.நான் 46 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன்.அதில் முப்பது ஆண்டுகளாக காந்தி கிருஷ்ணாவை அறிவேன் என்றால்,இந்த முப்பது ஆண்டுகளாக ஒருவர் இயக்குநராக இருந்து கொண்டிருக்கிறார் என்றால் அதுதான் காந்தி கிருஷ்ணாவின் பலம்,ஆற்றல்.மேலும்,இந்த கலை உலகம் என்பது மாறிக்கொண்டே இருக்கிற ஒரு பிம்பம். இது ஓடிக்கொண்டே இருக்கிற ஒரு நுரை.இது வானவில்லை தனக்குள் வைத்து முடிந்து வைத்திருக்கின்றது.இதில் நிரந்தரமாக கால் நூற்றாண்டுக்கு மேல் ஒருவர் பயணிக்கிறார் என்றால் அவர்தான் அறிவுத்திறன் வாய்ந்தவன்.பண்பாட்டுத் திறன் வாய்ந்தவன்,கலை உலகைப் புரிந்துகொண்டவன் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.இந்த மூன்று பெருமைக்கும் உரியவர் எனது அருமை நண்பன் காந்தி கிருஷ்ணா என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
காந்தி கிருஷ்ணா முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் பிரேக் பாஸ்ட் என்று ஒரு படத்தை உங்களுக்கு வழங்க வந்திருக்கிறார் என்றால் அவரின் கால நீட்சியை நான் போற்றுகிறேன்.
காலம் மாறுகின்ற பொழுது தானும் மாறிக் கொள்ளாத வரை காலம் கருணை இல்லாமல் விட்டுவிட்டு போகிறது. ஆனால் எனது நண்பர் காந்தி கிருஷ்ணா தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்.அவரோடு இந்த முப்பது ஆண்டுகளாக நான் இருக்கிறேன் என்பதால் என்னையும் அவர் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது மகிழ்ச்சி.
காந்தி கிருஷ்ணாவை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கும் நிலையில் இந்தப்படத்தில் அவர் கையாண்டிருக்கும் கருப்பொருள் பழையலாகாத கருப்பொருள்,இது நேற்று வெளிவந்திருக்க வேண்டிய படம்,இந்தப்படத்தில் அவர் கையாண்டிருக்கும் செய்தி ஆண் பெண் உறவு குறித்து. ஒரு ஆண் பெண்ணை புரிந்துகொள்வதும்,ஒரு பெண் ஆணை புரிந்துகொள்வதும், ஆண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் பெண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் இருக்கவே செய்யும்.நீங்கள் புரிந்துகொண்ட ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணோடு ஒப்பிட்டு புரிந்து கொள்வதாக.ஒரு ஆணை புரிந்துகொண்ட ஒரு பெண் அதே அளவுகோலை வைத்து,இன்னொரு ஆணை புரிந்து கொள்ள முடியாது.கணவனை வைத்து தந்தையையோ, தந்தையை வைத்து தனையனையோ,தமையனையோ ஒரு பெண் புரிந்துகொள்ள முடியாது.ஒவ்வொரு பெண்ணும் ஒரு உலகம்.ஒவ்வொரு ஆணும் ஒரு உலகம். அவர்களை புரிந்துகொள்ள முடியாது.பெண் ஆணை புரிந்துகொள்ளும் வரைக்கும் ஆண் பெண்ணை புரிந்து கொள்ளும் வரைக்கும்,கலை இருக்கும்.
இந்தக் கலைகளும் இலக்கியங்களும் இருக்கும் வரைக்கும் ஆண் பெண் புரிதல் என்று ஒரு மிகப்பெரிய சங்கிலி அறுந்துவிடாமல் ஓடிக்கொண்டே இருக்கும் என நான் நம்புகிறேன்.அதைத்தான் எனது நண்பர் இந்த படத்தில் செய்திருக்கிறார்.நடித்தல் என்பது நடுத்தல் அல்ல இருத்தல்,அப்படி இந்தப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். ஆனால்,இந்தப்படத்தின் தலைப்பு எனக்குப் பிடிக்கவில்லை.தமிழில் பெயர் வைத்திருக்கலாம். இதனை குறையாக சொல்லவில்லை எனது ஆதங்கமாக கூறுகிறேன்.மொழி என்பது ஒரு குறியீடு.அதனால், தமிழில் எடுக்கும் படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என நான் அன்போடு வேண்டுகோள் வைக்கிறேன்.
திருமணம் செய்து கொண்டது தப்பா சரியா என்பதே இந்தப்படத்தின் கருப்பொருள்.திருமணம் என்பது முற்றுகை இடப்பட்ட ஒரு கோட்டை.உள்ளே இருப்பவர்கள் வெளியே வர துடிக்கிறார்கள்.வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல துடிக்கிறார்கள்.இதுதான் இந்தத் திரைப்படத்திலும் நிகழ்ந்துள்ளது.காந்தி கிருஷ்ணா இதை அருமையாக படமாக்கி உள்ளார். கிருஷ்ணாவிடம் இன்னும் நிறைய சரக்கு இருக்கிறது. சமுதாய அக்கறை இருக்கிறது.பாத்திரங்களை வடித்தெடுக்கக்கூடிய நேர்த்தி இருக்கிறது. பாத்திரங்கள் எது மட்டும் பேசலாம் என்ற அளவீடு தெரிகிறது.எனவே காந்தி கிருஷ்ணா தொடர்ந்து படம் எடுக்கவேண்டும்.தொடர்ந்து வெற்றிபெற வேண்டும். இந்தப்படத்தின் நடித்தவர்கள் புகழ்பெற வேண்டும் என்றார்.

நடிகர் ரியோ…..

எல்லா திரைப்படங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி.
‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துகள்.குறிப்பாக ராணவ் அவர்களுக்கு வாழ்த்துகள்.நீங்கள் இன்னும் பல படங்களையும், பல வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன்.சினிமாவில் எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கிறது.அந்தக் கனவுக்கு என்ன செய்வது என்று தெரியாது.எனவே அதை நோக்கிய தேடலில் நமது பயணம் இருக்கும் அதில் சில வழிகளும் வேதனைகளும் இருக்கும்.
இந்தத் திரைப்பட குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்,நன்றியும்.இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள் எனக் கூறினார்.

நடிகர் பரத்……

இந்தமேடையில் உள்ள இரண்டு இயக்குநர்களுமே எனக்கு மிகவும் முக்கியமான நபர்கள்.வசந்தபாலன் சார் மற்றும் காந்தி கிருஷ்ணா சார் ஆகியோருக்கு எனது சிறப்பு நன்றிகள்.என்னோட வாழ்க்கையில் ‘செல்லமே’ திரைப்படம் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம்.அந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த காந்தி சார் அவர்களுக்கும்,தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்த வசந்தபாலன் சாருக்கும் நன்றி.
மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்தப் படத்தை மிகவும் நம்பிக்கையோடு தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி என்றார்.

நடிகர் மைம் கோபி…..

திரைப்படத்தின் கதாநாயகன் ராணவ் மிகவும் எளிமையான மனிதர்.மேலும்,அனைவரையும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் அணுகக் கூடிய நபர்.அவர் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கான இடம் நிச்சயமாக இந்த சினிமா துறையில் கிடைக்கும். ‘ப்ரேக்ஃபாஸ்ட்’ எப்பொழுதும் நமக்கு ஊட்டச்சத்தானது.எனவேதான் அவற்றை தவிர்க்கக்கூடாது என மருத்துவர்கள் சொல்வார்கள்.அதேபோன்று இந்தத் திரைப்படமும் தவிர்க்க முடியாத திரைப்படம்,தவிர்க்க கூடாத திரைப்படம் என தெரிவித்தார்.

இயக்குநர் காந்தி கிருஷ்ணா….

இந்தப்படத்தில் நடித்துள்ள அனைவரும் மிக சிறந்த முறையில் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்,தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை நீங்கள் தர வேண்டும் என்றார்.

தயாரிப்பாளர் வரதராஜன்….

இன்றைய காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை இயக்குநர் படமாக்கி உள்ளார்.அதற்காகவே நாங்கள் இந்தப்படத்தை தயாரித்தோம்.இப்போதுள்ள இந்த இளையதலைமுறைகள் முன்னேற எங்களால் முடிந்த உதவியாகவே இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளோம். மேலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றி.வரும் 24 ஆம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts