செய்திக் குறிப்புகள்

விரைவில் எல்ஐகே நூறுகோடி க்ளப்பில் சேரும் – விக்னேஷ்சிவன் உறுதி

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி,வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,கிருத்தி ஷெட்டி,எஸ்.ஜே.சூர்யா,யோகிபாபு,கௌரிகிஷன்,ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.இவர்களுடன் சீமான் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கிறார்.ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.படத்தொகுப்புப் பணிகளை பிரதீப் ஈ.ராகவ் மேற்கொள்ள கலைஇயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்புப் பணிகளை டி.முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.

இந்தப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நயன்தாரா தயாரித்திருக்கிறார்.இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித்குமார்‌ தயாரித்து,வழங்கியுள்ளார்.

திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியைk கொண்டாடும் வகையில்,ஏப்ரல் 15 அன்று பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து தங்களின் நன்றியைத் தெரிவித்தனர் படக்குழுவினர்.

இந்நிகழ்வினில்,இயக்குநர் ஜெகன் பேசியதாவது..,

இப்படத்தில் நானும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் விக்னேஷ்சிவன் உழைப்பை நேரில் பார்த்தேன்,பிரமிப்பாக இருந்தது. நம்ம எல்லோரும் இந்தப்படத்தைப் பார்த்திருக்கிறோம்.தியேட்டரில் மக்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான் இந்தப்படத்தின் உண்மையான வெற்றி என்ன என்பதை உணரமுடிகிறது.அது ஒரு உண்மையான அர்ப்பணிப்பின் பலன்.அந்த அர்ப்பணிப்பின் அர்த்தம் தியேட்டரில்தான் முழுமையாகத் தெரிகிறது.அதற்காக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
முக்கியமாக அன்புத்தம்பி பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு நான் ஒரு பெரிய வாழ்த்து சொல்லவேண்டும்.அவருக்கு மக்களிடம் இருக்கும் அன்பு மிகவும் பெரிது.அதேபோல் அவருக்கு இரசிகர்களிடம் அளவில்லாத அன்பு இருக்கிறது.ஒரு நடிகராக நான்காவது படத்திலேயே இவ்வளவு வரவேற்பு கிடைப்பது மிகப்பெரிய சாதனை.அவர் ஏற்கனவே எண்ணற்ற மனங்களை வென்றிருக்கிறார்.உலகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது.ஆனால் இரசிகர்களின் அன்பைச் சம்பாதிப்பது மிகவும் கடினம்.அந்த அரியவரத்தை கடவுள் அவருக்கு அளித்திருக்கிறார்.அதற்காக எனக்கு மிகுந்த சந்தோசம்.நான் இந்தப்படத்தை பல தியேட்டர்களில் பார்த்தேன்.முதல்நாளிலிருந்து மீண்டும் மீண்டும் பார்த்தேன்.எல்லா இடங்களிலும் மக்கள் அவரை தங்களுடைய வீட்டுக்குழந்தை போலவே பார்க்கிறார்கள்.
இந்தப்படத்தில் சீமான் அண்ணன் நடித்ததற்கு நான் ஒரு காரணமாக இருந்தேன்.ஆரம்பத்தில் அவர் நடிப்பாரா? என எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது.விக்னேஷ்சிவனும் ஒத்துவருமா? என்று கேட்டார்.இருவரும் பழகிய பிறகு பிரிக்கமுடியாத நண்பர்களாகிவிட்டார்கள்.படம் பார்த்த பிறகு,“இரண்டு பேரும் வெற்றி பெற்றுவிட்டார்கள்” என்று சொல்லும் அளவுக்கு படம் சிறப்பாக அமைந்துள்ளது.விக்னேஷ்சிவன் அவர்கள் மற்றும் சீமான் அண்ணன் இருவரும் மிகுந்த அன்பானவர்கள்.அந்த இரண்டு நல்லமனங்களை இணைக்க நான் ஒரு காரணமாக இருந்தது எனக்குப் பெருமையாக உள்ளது.
இந்தப்படத்தில் நடித்த நடிகைகள் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர்.அவர்களின் நேர்மை,ஈடுபாடு,உழைப்பு ஆகியவை பாராட்டத்தக்கவை.இந்த வெற்றியில் அவர்களுக்கும் முக்கியமான பங்கு உள்ளது.நேற்று தியேட்டரில் பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பு. அனைத்துக் காட்சிகளும் நிரம்பியிருந்தன.மக்கள் அளித்த வரவேற்பு,அவர்கள் காட்டிய உற்சாகம்—இவை அனைத்தும் இந்தப்படத்தின் வெற்றியை வெளிப்படுத்துகின்றன.ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெரிய இரகசியம் இருக்கும்;அது கடினமான உழைப்பு. அதை நான் விக்னேஷ்சிவன் மற்றும் பிரதீப் ஆகியோரிடம் பார்த்திருக்கிறேன்.
இந்தப்படத்தில் வேலைசெய்ய வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்றார்.

நடிகை கௌரி பேசியதாவது..,

பத்திரிகை நண்பர்களுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி.நீங்கள் எல்லாரும் இன்று வந்திருக்கிறீர்கள் — அது மிகுந்த மகிழ்ச்சி.இது எங்களுடைய நன்றி தெரிவிக்கும் சந்திப்பு.படம் வெளியாகி இப்போது ஒருவாரம் ஆகிறது.தொடர்ந்து நல்லவரவேற்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு சவாலான படத்துக்கும் இருக்கிற மாதிரி,இந்தப்படத்துக்கும் சில சிரமங்கள்,சிக்கல்கள் இருந்தன.ஆனால் அவையெல்லாம் தாண்டி,படம் அதன் தரத்திற்காகப் பாராட்டப்படுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தப்படம் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று.நான் இதுவரை செய்ததிலிருந்து வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் — “கல்கி” — இதில் செய்திருக்கிறேன்.அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் புரிந்துகொண்டு,தனிப்பட்ட முறையில் மெசேஜ்கள் அனுப்பி பாராட்டுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது.குறிப்பாக,அந்த நட்பு பற்றிய உணர்வை பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நம்ம தலைமுறையில் கொஞ்சம் கவனிக்கப்படாமல் போகும் ஒரு உறவு — நட்பு. அதில் இருந்து உருவாகும் அன்பு. “வாஸ்” மற்றும் “கல்கி” இடையிலான அந்த அழகானநட்பு இந்தப்படத்தின் முக்கியமான அம்சம்.சமூகவலைதளங்களில்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் எல்லாம் பார்த்தால்,இயல்பான,உண்மையான நல்ல எதிர்வினைகள் அதிகமாக வருகிறது.சில இடங்களில் சிறிய எதிர்மறை கருத்துகள் இருந்தாலும்,அது ஏன் என்று தெரியவில்லை.மக்கள் தியேட்டருக்கு வந்து,நேரடியாக படம் பார்த்து அனுபவிக்கவேண்டும்.
இந்தப்படம் இயல்பானது,உண்மையானது.அதனால் அதை அதே உணர்வோடு இரசிக்கவேண்டும்.தேவையில்லாத எதிர்மறை கதை உருவாக்காமல்,படத்தை அனுபவிக்கவேண்டும்.இந்த கோடைகால வெளியீடாக,குடும்பத்தோடு,நண்பர்களோடு தியேட்டரில் இரசிக்கக்கூடிய ஒரு முழுமையான படைப்பு இது.
இயக்குநர் விக்னேஷ்சிவன் அவர்களின் கனவும்,பார்வையும் இந்தப்படம்.ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அவர்களின் அழகான காட்சியமைப்பும் இதில் பெரியபலம்.அனைத்து நடிகர்களும் மிகுந்த உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்கள்.பிரதீப் — அவருடைய முந்தைய வெற்றிகளைத் தொடர்ந்து,இதுவும் ஒரு பெரியவெற்றியாக அமையும் திறன் கொண்ட படம்.கிருத்தி — தமிழ்த்திரையுலகுக்கு ஒரு சிறந்தவரவு.ஒரு காலத்திற்குப் பிறகும் நினைவில் நிற்கக்கூடிய நடிகையாக அவர் இருப்பார் என்று நம்புகிறேன்.மொத்தத்தில்,இது ஒரு முழுமையான அனுபவத்தைத் தரும் படம்.இதேபோல் இந்தவாரமும் நல்லவரவேற்பு தொடரும் என்று நம்புகிறோம்.விரைவில் ஒரு பெரிய வெற்றிவிழாவில் மீண்டும் சந்திப்போம் என்று எதிர்பார்க்கிறோம்.
இயக்குநர் விக்னேஷ்சிவன் அவர்கள் இதற்காக மிகுந்த உழைப்பும்,திறமையும் செலுத்தியிருக்கிறார்.அதனால்,ஒரு சினிமா இரசிகராக, இந்தப்படத்திற்கு நீங்கள் ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் ஆசீர்வாதமும்,நேர்மையான ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம்.நன்றி என்றார்.

நடிகை தீபிகா வெங்கடாச்சலம் பேசியதாவது….

இந்தப்படம் வெற்றி பெறவேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்தேன்.அந்த எண்ணம் நனவாகி,இன்று இங்கே நின்று பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இதற்காக மிகவும் நன்றி.நான் இந்தப்படத்தில் இருந்ததைக் காட்டிலும்,ஒரு பார்வையாளராக இந்தப்படத்தை அதிகமாக இரசித்தேன்.நான் ஒரு பார்வையாளராகவும்,படக்குழுவில் ஒருபங்காகவும்,பலநிலைகளில் இருந்திருக்கிறேன்.அதனால் இப்போது ஒரு நுண்ணியகோடு எனக்குத் தெளிவாகத் தெரிகிறது — ஒருபடம் உருவாக எவ்வளவு பேர் உழைக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தேன்.
நம் அனைவருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் இருக்கிறது.ஆனால் கருத்தைப் பகிர்வதற்கும், அதை திணிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.இந்த மூன்றுநாட்களில் நான் இதை ஆழமாக உணர்ந்தேன்.
முதலில் நன்றி சொல்லவேண்டியது பார்வதி அவர்களுக்கு.அவர்கள்தான் என்னை இந்த வாய்ப்புக்காக அழைத்தார்கள்.என்னை நம்பி இந்தக்கதாபாத்திரத்தைக் கொடுத்தார்கள்.படப்பிடிப்பில் நான் காயம், வலி எதையும் கவனிக்காமல் முழுமையாக ஈடுபடவேண்டும் என்று நினைத்தேன்.அந்தநேரத்தில் அவர்கள் கொடுத்த ஆதரவு மிக முக்கியமானது.
இந்தத் திரைப்படம் எனக்கு ஒரு புதியஅனுபவம்.ஆரம்பத்தில் இது ஒரு ஐடியா மாதிரிதான் எனக்குத் தெரியும்.ஆனால் படம் பார்த்தபோது நான் ஒரு உண்மையான பார்வையாளராக அதைப்பார்த்தேன்.கௌரி,உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.உங்கள் கதாபாத்திரம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.
பிரதீப் ரங்கநாதன் சார் — நீங்கள் எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கிறீர்கள்.எதுவும் இல்லாத இடத்திலிருந்து நீங்கள் வந்த பயணம் பலருக்கும் ஒரு உதாரணம்.அதனால்தான் மக்கள் உங்களை தங்களுடைய வீட்டுப்பையன் போல பார்க்கிறார்கள்.விக்னேஷ் சார் சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பல பெண்கள் இருக்கிறார்கள்.அந்தமாதிரி நிறையபேருக்கு, நீங்கள் எனக்குக் கொடுத்த இந்த சிறியவாய்ப்பு ஒரு நம்பிக்கையாக இருக்கும்.அது நாளை பெரியவாய்ப்பாக மாறும் என்று நான் நம்புகிறேன்.
இந்தப்படத்தில் “தமிழ் செல்வி” என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் முக்கியமானது.ஆரம்பத்தில் அது ஒரு சிறியகதாபாத்திரம் என்று நினைத்தேன்.ஆனால் படம் பார்த்தபிறகு அது இந்தக்கதையின் இதயம்தான் என்று உணர்ந்தேன்.இந்தப்படத்தின் மையக்கருத்து மிகவும் அழகானது.அது இன்னும் அதிகமான மக்களிடம்,குறிப்பாக ஒவ்வொரு பெண்ணிடமும் சென்று சேரவேண்டும் என்பதே என் விருப்பம்.இந்த வாய்ப்புக்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்றார்.

நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது….

எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.விக்னேஷ்சிவன் சாரிலிருந்து ஆரம்பிக்கிறேன்.அவருக்கு என்மேல இருக்கும் அன்பு ரொம்ப பெரியது.அது எவ்வளவு என்றால்,திடீர்னு போன் பண்ணி “எங்கே இருக்கீங்க? நாளைக்கே மலேசியா வரமுடியுமா?” என்று கேட்பார்.ஒருசீனுக்காக கோடிகளில் செலவு செய்யத் தயாராக இருப்பார்.“நீங்கள் வந்தால் அந்த சீன் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்பதற்காகவே இப்படிச் சொல்வார்.அவர் ஒரு இனிமையான அழுத்தம் கொடுப்பார் — ஆனா அந்த அழுத்தம் முழுக்க படத்துக்காகவும், ஆடியன்ஸ்க்காகவும் தான்.இவ்வளவு சிரமங்களையும்,வலிகளையும் கடந்து வந்தாலும்,எங்களுக்கு அது தெரியாமல் பார்த்துக்கொள்வார்.அவருடைய ஒரே நோக்கம் — ஆடியன்ஸை எண்டர்டெயின் பண்ணணும்,ஒரு தரமான படைப்பு கொடுக்கணும். ஒவ்வொரு விசயத்திலும் பர்ஃபெக்சன் வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருக்கிறது — விஷுவல், சவுண்ட், காஸ்ட்யூம், நடிப்பு எல்லாமே உயர்ந்த தரத்தில் இருக்கவேண்டும்.அதனால்தான் தியேட்டரில் மக்கள் இப்படத்தை இவ்வளவு கொண்டாடுகிறார்கள்.
உலகம் முழுக்க இருந்து மெசேஜ்கள் வருகிறது — மலேசியா, சிங்கப்பூர்,டொரண்டோ…நீண்டநாட்களாக தொடர்பில் இல்லாத நண்பர்கள்கூட மீண்டும் தொடர்பு கொள்கிறார்கள்.அது இந்தப்படத்தின் வெற்றியைச் சொல்லுகிறது.
பிரதீப் ரங்கநாதன் சார் — அவருக்கு கடவுளின் ஆசீர்வாதம் ரொம்ப அதிகம்.ஒரு சாதாரண ஆரம்பத்திலிருந்து இன்று பெரியஹீரோவாக உயர்ந்திருக்கிறார்.அவருடைய பயணம் உண்மையிலேயே பிரமிப்பானது.நான் எப்போதும் மனசில் பட்டதைதான் சொல்வேன். அதுபோலவே, அவர் நடித்ததைப் பார்த்தபோது — “நீங்கள் பெரிய அளவுக்குப் போவீர்கள்” என்று நம்பிக்கை வந்தது.நான் ஏழுவருடம் முன்பு சொன்னது,அது இன்று உண்மையாகி இருக்கிறது.
பிரதீப் சார் — இந்தப்படத்தில் உங்கள் லுக்,விஷுவல் அனைத்தும் மிகஅழகாக இருக்கிறது.உங்கள் கேரியரில் சிறந்த தோற்றங்களில் ஒன்றாக இது இருக்கும்.
மக்கள் உண்மையிலேயே இதைப் பெரியஅளவில் கொண்டாடுகிறார்கள்.
இந்தப்படத்தில் அனிருத் இசை மிகப்பெரிய பலம்.காதல் கதையென்றால் அது லவ்வும் பெயினும் சேர்ந்தது.அதற்கு ஒருபக்கம் தீமா மியூசிக்,இன்னொரு பக்கம் “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் — இந்த இரண்டும் தரும் உணர்வு ரொம்ப பரவசமானது.
க்ளைமாக்ஸ்க்கு முன் வரும் அந்தப்பாடல்,அந்த உணர்ச்சி,அந்தக் காட்சிகள் — எல்லாமே ரொம்ப அழகாக வேலை செய்திருக்கிறது.
இந்தமாதிரி காதல்கதைக்கு அழகான முகங்கள் தேவை.அதைப் பூர்த்தி செய்தவர்கள் கிருத்திஷெட்டி மற்றும் கௌரி.குறிப்பாக கிருத்தி ஷெட்டி — நல்லநடிப்பு,நல்லநடனம்,தமிழில் பேசும் முயற்சி — ரொம்ப சந்தோசம்.உங்களுக்கு நல்ல வெற்றி தொடர்ந்து கிடைக்கணும் என்று வாழ்த்துகிறேன்.கௌரி — ஏற்கனவே பெரிய பெயர் எடுத்தவர்.இந்தப்படத்திலும் நல்லபெயர் எடுத்திருக்கிறார்.குறிப்பாக ஃப்ரெண்ட்ஷிப் மற்றும் லவ் இடையிலான அந்த நுணுக்கமான கோட்டைக் காட்டிய சீன் ரொம்ப அருமை.சீமான் சார் கலக்கிவிட்டார், ஒரு சிலகாட்சிகளில் அவர் வரும்போது தியேட்டர் அதிர்கிறது.
விக்னேஷ்சிவன் சார் இந்தப்படத்தில் பல விசயங்களை நெஞ்சைக் கிழிக்காமல்,மெதுவாக,அழகாகச் சொல்லியிருக்கிறார்.அதுதான் இந்தப்படத்தின் பலம்.
எந்த தியேட்டருக்குப் போனாலும் கிடைக்கும் அந்த ரெஸ்பான்ஸ் — அதுதான் இந்த வெற்றிக்குச் சாட்சி.இந்தப்படத்தின் மையக்கருத்து என்னவென்றால் — நவீன விசயங்களை நாம் பயன்படுத்தவேண்டும்,
ஆனா அது நம்மை ஆளக்கூடாது.முடிவில் சொல்லவேண்டியது ஒன்றுதான் —நாம் செய்யும் கலை,மக்களை இவ்வளவு சந்தோசப்படுத்தும்போது,அதைவிடப் பெரியமகிழ்ச்சி வேற எதுவும் இல்லை.இந்தஅளவுக்கு அன்பு கொடுத்த இரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி என்றார்.

நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,

இங்கே வந்திருக்கிற எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம்.தமிழ்ஊடகங்களுக்கும்,தமிழ்இரசிகர்களுக்கும் எனது பெரியநன்றி.எனக்கு தமிழ்மொழி ரொம்ப பிடிக்கும்.சின்னவயதிலிருந்தே அதைக் கற்கவேண்டும் என்று ஆசை இருந்தது.எங்கள் அம்மா கோயம்புத்தூரில் படித்தவர்,வீட்டில் தமிழில் பேசுவார்கள்.ஆனால் எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை.அது அவர்களுக்குள்ள ஒரு இரகசியமொழி மாதிரி இருந்தது.இப்போ தமிழ்ப்படங்களில் நடிப்பதன் மூலம் அந்த அழகான மொழியைக் கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்தப்படத்தின் டிரைலர்,டீசர் வந்தபோது,நான் ஒரு ரோபோட் மாதிரி கேரக்டர் பண்ணுகிறேன் என்று நிறையபேர் சொன்னார்கள்.அது எனக்கு ரொம்ப சந்தோசம் தந்தது.ஏன்னா,அந்தக் கேரக்டரின் அடிப்படை யோசனை அதுதான்.இன்றைய தலைமுறையில் நாமெல்லாம் அதிகமாக மொபைல் உலகத்துக்குள் சென்று,நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து தள்ளிப்போயிருக்கிறோம்.அந்த உணர்ச்சி விலகலைதான் அந்தக் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது.அது திரையில் அழகாக வெளிப்பட்டதுக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நிறையபேர் அதநுடன் தொடர்புகொண்டு பேசுவது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.
இந்தப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் — எல்லா சம்பவங்களும் ஒரேஇடத்தில் இணையும் அந்த தருணம்.குறிப்பாக,அந்தக் கேரக்டர் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி மிகவும் சிறப்பு.எந்தகாரணமும் இல்லாமல், நம்மை நாமாகவே ஏற்றுக்கொண்டு நேசிக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் கிடைப்பது ரொம்ப அரிது.அந்த உணர்ச்சியை இந்தபடம் அழகாகச் சொல்லுகிறது.இந்தமாதிரி ஒரு நல்லகருத்துள்ள படத்தில் நான் ஒருபகுதியாக இருப்பது எனக்குப் பெருமை.
சமூகவலைதளங்களில் மக்கள் இந்தப்படத்தோடு இணைந்தவிதம் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது.இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு நம்பிக்கையுடன் கொடுத்த இயக்குநர் விக்னேஷ்சிவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.படம் வெளியான முதல்நாளிலேயே நான் 5-6 தியேட்டர்களுக்கு சென்று பார்த்தேன்.ஒவ்வொரு தியேட்டரிலும் மக்கள் மகிழ்ச்சியாக படம் இரசித்தது எனக்கு மிகுந்த திருப்தி கொடுத்தது.
பிரதீப் ரங்கநாதன் — அவருடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு சிறந்த அனுபவம்.அவர் மிகவும் மென்மையான,அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார்.ஒவ்வொருமுறையும் படம் பார்க்கும்போது அவருடைய நடிப்பில் புதியஅம்சங்களை கண்டுபிடிக்கிறேன்.கௌரி — ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும்,இப்போது கிடைத்துள்ள நல்லவரவேற்பு அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
இந்தப்படத்தில் ஒவ்வொருவரும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள்.ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப்படத்துக்காக வேலை செய்திருக்கிறார்கள்.நான் இந்தப்படத்தில் எனது தோற்றத்தை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.இதுவரை நான் இப்படிப் பிரதிபலிக்கப்பட்டதில்லை என்று உணர்கிறேன்.அதற்கான முழுபாராட்டு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருக்கே.இந்தப்படத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து இரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி என்றார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது….,

பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு வணக்கம்.இந்தப்படத்தின் பயணம் சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நீண்ட ஒன்று. 2022 பிப்ரவரி மாதத்திலேயே இந்தக்கதையின் ஒன்லைன் என்னிடம் கூறப்பட்டது.அப்போது இந்தப்படம் உருவாகப்போகிறது என்று இரசிகர்களுக்கும் தெரிந்திருந்தது.
அதற்குப்பிறகு பல தாமதங்கள் ஏற்பட்டது.பலமுறை வெளியீட்டுத் தேதிகள் மாற்றப்பட்டது—கோடை,டிசம்பர்,பிப்ரவரி என்று தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தோம்.
பொதுவாக இப்படியான தாமதங்கள் ஒருபடத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கும்.நம்பிக்கையும் கொஞ்சம் குறையும்.அது படக்குழுவினரையும் பாதிக்கும்.எனக்கும் அதே சந்தேகம் இருந்தது — “இவ்வளவு தாமதமான படம் எப்படி வரவேற்பைப் பெறும்?” என்று.ஆனால் படம் வெளியான விதம் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம்.மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்தது.மக்கள் கொடுத்த அன்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது.இந்த எல்லா தடைகளையும் தாண்டி,இப்படத்திற்குக் கிடைத்த இந்த அன்புக்கு மக்களிடம் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.என் படக்குழுவினருக்கும்,இயக்குநருக்கும்,தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.
முக்கியமாக,இந்த தருணத்தில் மூன்று முக்கிய தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்—
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் சார்,எடிட்டர் பிரதீப் ராகவன்,இசையமைப்பாளர் அனிருத் சார்.இந்த மூவர் இல்லாமல் இந்தப்படம் உருவாக முடியாது என்று நான் உண்மையாக நம்புகிறேன்.அவர்கள் கொடுத்த காட்சியமைப்பு,இசை,எடிட்டிங் — இவை எல்லாமே இந்தப்படத்தை ஒரு தொழில்நுட்பரீதியாக வலுவான படமாக மாற்றியுள்ளது.படம் பார்த்த உடனே நான் இவர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன்.பொதுவாக தொழில்நுட்பக் கலைஞர்கள் பின்னணியில் இருப்பதால் அவர்களின் பங்களிப்பு வெளியில் அதிகமாக தெரியாமல் போகும்.இந்தநேரத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக,முதல்நாளிலிருந்து இன்றுவரை எங்களுக்கு ஆதரவு அளித்துவரும் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி என்றார்.

இயக்குநர் விக்னேஷ்சிவன் பேசியதாவது….

இந்தப்படம் ரிலீஸ் ஆனதே எனக்கு ஒரு ப்ளாக்பஸ்டர்.அது வெளியானதுதான் எனக்கு பெரியவெற்றி.ஏன்னா,எப்போதுமே பெரியகனவு காண்றது சுலபமில்லை.அதுக்காக கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளியே வரணும்.எனக்கு வாழ்க்கை கம்ஃபர்ட்டாக இருந்திருக்கலாம். ஆனா அந்த கம்ஃபர்ட் ஜோனை உடைத்து,என்னை நான் சாலஞ்ச் பண்ணிக்கிட்டதுதான் இந்தப்படம்.
இந்தப்படத்தில் ஒரு ஃப்ரேம் கூட ஈஸியா எடுக்கமுடியாது.ஒவ்வொரு விசயத்திலும் கவனம் — காஸ்ட்யூம்,செட்,விஎஃப்எக்ஸ்,மேக்கப், டயலாக் — எல்லாமே சரியாக இருக்கணும்.அப்போதுதான் இது நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.படம் வெளியான பிறகு நிறைய நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது.அதேசமயம் சிலர் “ஸ்லோவா இருக்கு”ன்னு சொன்னாங்க.ஆனா ஹை-கான்செப்ட் படம் என்றாலே,ஆரம்பத்தில் கொஞ்சம் விளக்கம் தேவைப்படும்.அதுபோலதான் — விமானம் பறக்குமுன் சொல்லப்படும் விதிமுறைகள் மாதிரி.அதை நான் ஒரு constructive criticism-ஆ எடுத்துக்கிறேன்.அது எனக்கும் சில விசயங்களைப் புரியவைத்தது.
இந்தப்படம் ஒரு காதல் கதைதான்.ஆனா வழக்கமான மெலோட்ராமா இல்லாமல்,ஒரு புதியஅனுபவம் கொடுக்கணும் என்ற முயற்சி தான் இது.அந்தமுயற்சி தியேட்டரில் கைதட்டலாக மாறும்போது கிடைக்கும் சந்தோசம் சொல்லமுடியாதது.ஒரு எழுத்தாளராக, இயக்குநராக நம்மமுயற்சி சிலருக்காவது வேலை செய்கிறது என்ற உணர்வு நம்பிக்கையை அதிகரிக்கிறது.அதற்காக ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய நன்றி.
இந்தப்படம் நடக்கக் காரணம் பிரதீப்தான்.ஆரம்பத்திலிருந்தே பட்ஜெட் சிக்கல்கள் இருந்தது.ஆனாலும் இந்தப்படம் உருவானது அவரால்தான்.இன்றைக்கு நிறையபடங்கள் டிராப் ஆகுது,லீக் ஆகுது,டைரக்டர்ஸ் நிலைமை ரொம்ப கஷ்டமா இருக்கு.அந்த வலியை ஒரு டைரக்டர்தான் உணரமுடியும்.அந்தஇடத்தில்,சமீபத்தில் லீக் பிரச்சனையை சந்தித்த எச்.வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபம்.அது ஒரு டைரக்டருக்கு மிகப்பெரிய வலி.
இந்தப்படத்தையும் நான் என்னால் முடிந்தவரை எந்த சமரசமும் இல்லாமல் எடுத்தேன்.ஒருதடவைதான் எடுக்கமுடியும் — அதனால் முழுமையாக எடுத்தேன்.பிரதீப் — ஒரு ஹீரோவாக மட்டும் இல்ல,ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞன்.நேரம்,ஒழுக்கம்,அர்ப்பணிப்பு— எல்லாமே வேற லெவல்.
நீச்சல்குளக் காட்சியில் அவர் செய்த உழைப்பு மறக்கமுடியாதது.மூச்சைப் பிடித்து நீண்டநேரம் நடிப்பது ரொம்ப கஷ்டம்.ஆனா அவர் முழுஅர்ப்பணிப்புடன் செய்தார்.அந்தமாதிரி பல நினைவுகள் இந்தப்படத்தில் எனக்குல் கிடைத்திருக்கிறது.அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.இந்தப்படத்துக்கு கிடைத்த ஓபனிங் — அது முழுக்க பிரதீப் மீது மக்கள் வைத்த நம்பிக்கை.
இந்தப்படம் நீண்டகாலம் ஓடும் என்று நான் நம்புகிறேன்.சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும்,தியேட்டரில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பாக இரசிப்பீர்கள்.என்னோட வார்த்தையை நம்பலாம்.இந்தப்படம் சீக்கிரம் 100 கோடி கிளப்பில் சேரும் — நான் நம்பிக்கையோடு சொல்கிறேன்.
கிருத்தி — இன்னும் சின்னகுழந்தை மாதிரிதான். அவங்க அம்மாவும் அதேமாதிரி.செட்டில் பல நேரங்களில் அவர்களை ஒரு குழந்தையைக் கவனிப்பது போலவே நாங்கள் பார்த்துக்கொண்டோம்.சில சமயங்களில் சிறிய தவறுகள் நடந்தாலும்,வேலை செய்யும்போது அவருடைய அர்ப்பணிப்பு மிக உயர்ந்தது.சிறப்பாக அந்த ஸ்விம்மிங் பூல் காட்சியில்,வேறுஇடங்களில் படப்பிடிப்பு முடித்து வந்த பிறகும்,இரவெல்லாம் உழைத்து ஒருநாளும் சோர்வு காட்டாமல் நடித்தார்.மிகவும் இனிமையானவர்,அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் பிடித்த அனுபவம்.
ரவிவர்மன் அவருடைய ஒவ்வொரு ஃப்ரேமும் மிகவும் அழகாக இருக்கும்.மலேசியாவில் சாதாரண சாலையில் எடுத்த காட்சிகளுக்கே ஒரு மாயம் சேர்த்தது ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் சார் அவர்களின் திறமை.அவர் எளிமையாகவே அசாதாரண காட்சிகளை உருவாக்கும் தனித்திறமை கொண்டவர்.
இந்தப்படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் மிகுந்த உழைப்பைக் கொடுத்துள்ளனர்.கௌரி — அவருடன் வேலை செய்வது மிகவும் சுவாரஸ்யமான அனுபவம்.எதிர்காலத்தைக் கற்பனை செய்து,அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான உடை வடிவமைப்புகளை ஏற்றுக்கொண்டு நடித்தார்.
இந்தப்படம் உருவாக முதன்மைக்காரணம் தயாரிப்பாளர் லலித் சார்.அவர் முன்வந்து “இந்தப்படம் தொடங்கலாம்” என்று சொல்லவில்லை என்றால்,இந்தப்படம் நடந்திருக்காது.அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி.இந்தப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி கூறவேண்டும்.
எடிட்டர் பிரதீப் ராகவன் — இந்தப்படம் பல சிக்கல்களுடன் இருந்தது.எனக்கு பல சந்தேகங்கள் இருந்தன.அந்தநேரங்களில் அவர் உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியையும் ஆராய்ந்து, பல பதிப்புகளை உருவாக்கி,சரியான வடிவத்தைக் கண்டுபிடிக்க உதவினார்.ஒரு படத்துக்கு அவர் பத்துபடங்களுக்குச் சமமான உழைப்பைக் கொடுத்தார்.முத்துராஜ் சார் அவர்களின் தயாரிப்பு வடிவமைப்பு,உடை வடிவமைப்பு, கணினிக்காட்சி விளைவுகள் — இவை எல்லாமே இந்தப்படத்திற்கு பெரியபலம்.மாங்கோ போஸ்ட் நிறுவனம் இந்தப்படத்தில் கணினிக்காட்சி பணிகளில் மிகுந்த உதவி செய்தது.ஆரம்பத்தில் சிறிய வேலை என்று தொடங்கியதும்,பிறகு முழுமனதுடன் இந்தப்படத்திற்குள் இறங்கி,எங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்கள்.அதற்காக அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறுவேன்.
எஸ்.ஜே.சூர்யா சார் — 2018 முதல் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரையே நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.அவர் மிகவும் பிசியானவர் என்றாலும்,எங்களுக்குத் தேவையான நேரத்தை ஒதுக்கி இந்தப்படத்திற்கு முழுமையாக ஆதரவு அளித்தார்.
சீமான் அண்ணன் — மிகவும் நல்ல மனம் கொண்டவர்.அரசியலில் பெரியவர் என்றாலும்,செட்டில் மிகவும் எளிமையாக,நட்பாகப் பழகினார்.அவருடன் வேலை செய்த ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருந்தது.
இந்தப்படத்தில் உதவிஇயக்குநர்கள்,ஒளிப்பதிவு குழு,பலர் — எல்லாருடைய உழைப்பாலும்தான் இந்தப்படம் உருவானது.அந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம்.இன்னும் ஒருமுறை தியேட்டரில் சென்று பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப்படத்தின் மூலம் நான் கற்பனை செய்த ஒரு உலகத்தை திரையில் கொண்டுவர முடிந்தது.அந்தக் கற்பனையை இரசிகர்கள் இரசித்து கைதட்டும்போது,அதைவிடப் பெரிய சந்தோசம் எனக்கு இல்லை.எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தாலும்,இன்று மக்கள் இந்தப்படத்தைக் கொண்டாடுகிறார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய வெற்றி.அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts