விஜய்சேதுபதி பற்றி தரக்குறைவான பதிவுகள் – தடுக்கக் கோரி சைபர் க்ரைமில் மனு
நடிகர் விஜயசேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறும் அவமரியாதையும்செய்யும் வண்ணம் வலைதளங்களில் வலம் வரும் பதிவுகளை நிறுத்தவும் அகற்றவும் நடவடிக்கை எடுக்கக்கோரி சைபர் க்ரைம் காவல் ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனு விவரம்….
வணக்கத்திற்குரிய ஆணையர் அவர்களுக்கு,ஜே.குமரன் ஆகிய நான், நடிகர் விஜய்சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கத்தில் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறேன்.
நடிகர் விஜய்சேதுபதி அவர்கள், ஓராண்டுக்கு முன் 17.03.2019 அன்று சன் தொலைக்காட்சியில் நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் மறைந்த கதாசிரியரும் நகைச்சுவை நடிகருமான திரு.கிரேசிமோகன் அவர்கள் மேடையில் சொன்ன நகைச்சுவைத் துணுக்கை இந்த நிகழ்ச்சியில் மறுபதிவு செய்தார்.
இப்படி எதார்த்தமாக சொன்ன நகைச்சுவைத் துணுக்கு ஒன்றை, சொன்ன பொருள் தன்மையில் இருந்து மாற்றி,இந்துக்களுக்கு எதிராக விஜய்சேதுபதி சொன்ன கருத்தாகத் திரித்து அந்த காணொலியை எடிட் செய்து குறிப்பிட்ட சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.
இந்த வதந்தியைத் தொடர்ந்து விஜய்சேதுபதியை எதிர்த்தும் ஆதரித்தும் வலைதளத்தில் ஒரு பெரும் சர்ச்சையே நிகழ்கிறது.
இந்த சர்ச்சையில் தர்மத்தைப் பாதுகாக்கும் காவலர்களைப் போல் வாதிடுபவர்கள், தார்மீக தர்ம முறைகளை மீறி, விஜய்சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றி தரக்குறைவாகவும் தரம் தாழ்ந்தும் பதிவிடுகிறார்கள்.
இது விஜய்சேதுபதி அவர்களின் நற்பெயரைக் குலைப்பதோடு தேவை இல்லாத வலைதள வாக்குவாதங்கள் சமுதாய நல்லிணக்கத்தையும் அமைதியையும் சீர்குலைக்கும் ஒரு தூண்டுகோலாக உருவாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
அறிவுசார் சமூகத்தில் வாழும் நாம் ,தனிமனித கருத்துகள் வேறுபட்டிருந்தாலும் ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும் தனிமனித மரியாதையைப் பாதிக்கும் விதமாக இருக்கக்கூடாது. கருத்துச்சுதந்திரம் என்பது காழ்ப்புணர்ச்சியாகவும் காயப்படுத்தும் விதமாகவும் இருக்கக்கூடாது.
அதனால், உடனடியாக விஜய்சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றிய தரக்குறைவான, அறுவெறுக்கத்தக்க உள்ள பதிவுகளை அகற்றவும் இத்தகைய பதிவுகள் வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்படிப்பட்ட அவதூறுகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்த சர்ச்சைக்குரிய அந்தக் காணொலியும் நீக்கப்பட வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.











