சித்தமருத்துவர் வீரபாபு நாயகனாக நடிக்கும் முடக்கறுத்தான் பட நிகழ்ச்சித் தொகுப்பு
கொரோனா பாதிப்பிலிருந்து பல உயிர்களைக் காப்பாற்றிய சித்தமருத்துவர் கே.வீரபாபு திரைத்துறைக்கு வந்திருக்கிறார். அவர், ‘முடக்கறுத்தான் ‘ எனும் புதிய படத்தை இயக்கி நடிக்கிறார்.
தாவர வகையைச் சேர்ந்த முடக்கறுத்தான் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. அதன் பெருமையை அறிந்தவர் என்பதால் அதைத் தன் படத்தின் பெயராக்கியுள்ளார் கே.வீரபாபு.
இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய, சிற்பி இசையமைக்கிறார். பழனிபாரதி பாடல்களை எழுதுகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பியும் பழனி பாரதி இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.படத்தொகுப்பினை ஆகாஷும், சண்டைப் பயிற்சியை சூப்பர் சுபராயனும் மேற்கொள்கிறார்கள் . கதை நாயகியாக மஹானா நடிக்கிறார் .
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு செபடம்பர் 10 அன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் சிறப்பு அழைப்பாளராக சுரேஷ் காமாட்சி மற்றும் பலர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .
நிகழ்வில், நாயகனும் இயக்குநருமான வீரபாபு பேசியதாவது…..
சிறு வயதிலிருந்தே சினிமா மீது எனக்கு ஆர்வம் அதிகம். இந்தத் துறையிலும் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன் .தற்போது அது நிஜமாகி உள்ளது.குழந்தைகளின் வாழ்க்கையை முடக்கும் கயவர்கள் பற்றிய கதைதான் முடக்கறுத்தான். நிறைய குழந்தைகள் பல்வேறு சூழ்நிலை காரணமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கான முழுக்க முழுக்க ஒரு அமைப்பு, திட்டம் உருவாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. குழந்தைகளுக்கான பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளது.அது இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். இந்தப் படத்தை ஒரு பார்வையாளனாகப் பார்த்துச் சொல்கிறேன் இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது……,
இந்த கொரோனா காலத்தில் எங்கு திரும்பினாலும் உயிரிழப்பு பற்றிய செய்திகள் வந்த சமயத்தில் உயிர்களைக் காப்பற்றிய மருத்துவர் என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தேன். ஒருநாள் வீரபாபு சந்திப்பின்போது கதையைப் பற்றி அவர் சொன்னார். இந்தக் காலகட்டத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு முக்கியமான கதை .அருமையாக வந்துள்ளது. குறிப்பாக சித்ரா பாடிய பாடல் ஒன்று சிறப்பாக வந்துள்ளது. பொதுவாக நடிப்பது சுலபம், பாடல் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் நடிப்பது சிரமம். ஆனால் அதையும் சிறப்பாக வீரபாபு செய்துள்ளார்.கண்டிப்பாக அவர் ஜெயிப்பார்.
நடிகர் மயில்சாமி பேசியதாவது…..,
இந்தப் படத்தில் நான் ஒரு குடிகாரன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளேன். ஒரு குடிகாரனை எப்படித் திருத்துவது என்ற ஒரு நுணுக்கமான முறையைச் சொல்லியுள்ளார் வீரபாபு.
தயாரிப்பாளர் அழகன் தமிழ் மணி பேசியதாவது……,
நானும் வீரபாபுவும் 20 வருட நண்பர்கள். இந்த கொரோனா காலகட்டத்தில் பல மக்களின் உயிரைக் காப்பாற்றிய வீரபாபு இந்தப் படத்தை நீங்கள் தான் தயாரிக்க வேண்டும் என என்னிடம் கூறினார். அதனால் எனது வயல் மூவிஸ் நிறுவனம் சார்பில் படத்தைத் தயாரித்து இருக்கிறேன். இப்படத்தில் என்னையும் நடிக்க வைத்துள்ளார். தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் .
பாடலாசிரியர் பழனி பாரதி பேசியதாவது……,
இந்த கொரோனா காலகட்டத்தில் பல உயிர்களைக் காப்பாற்றியவர் வீரபாபு,மனித நேயம் மிக்கவர். குழந்தை கடத்தல் என்பது இன்று பயங்கரவாதமாக உள்ளது.குழந்தைகள் பிச்சை எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறார்கள். அதனைக் கண்டிக்கும் விதமாக சிறந்த கதையை வீரபாபு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வரும் நான்கு பாடல்களும் பேசப்படும் பாடல்களாக அமையும் என்பது உண்மை. இப்படத்தில் நான்கு பாடல்களில் இரண்டு பாடல்களைக் கேட்டால் கண்கள் கசியும்.
இசையமைப்பாளர் சிற்பி பேசியதாவது…..,
விநாயகர் சதுர்த்தி அன்று இந்தப் படத்தின் டீசர் வெளியாவது இறைவனின் ஆசீர்வாதம் என்று தான் சொல்ல வேண்டும்.12 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளேன் இந்த வாய்ப்பினைத் தந்த இயக்குநர் வீரபாபு அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வீரபாபு அவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் என் நட்பு வட்டாரத்தில் இருக்கும் மனித நேயம் உள்ளவர். வீரபாபு சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து இயக்கியுள்ளார். படத்தின் பாடல்கள் மிகவும் அருமையாக வந்துள்ளன கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
நடிகை மஹானா பேசியதாவது……,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிகை நண்பர்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்தில் நான் ஒரு குறும்புக்கார கதாபாத்திரத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளேன். இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளன. வீரபாபு சிங்கிள் டேக்கில் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். குழந்தைகளுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.











