செய்திக் குறிப்புகள்

சூரி நடிக்கும் புதியபடம் மண்டாடி – விவரங்கள்

“செல்ஃபி” என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, எழுதி இயக்கும் புதியபடம் மண்டாடி. கடந்த படத்தைவிட பெரிய களம் மற்றும் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்தபபடத்தில் களம் இறங்கி இருக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கவுள்ளார். கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் தனது நடிப்புத்திறனை நிரூபித்து வரும் அவர், இப்படத்தினால் மேலும் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வார். இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார், இதனால் படம் தெற்கிந்தியாவில் பரந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கதாநாயகியாக மஹிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சத்யராஜ், ரவீந்திரா விஜய், அசுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் தங்களது திறமையான நடிப்பின் மூலம் உணர்வுப்பூர்வான இந்தக்கதைக்கு பலமளிக்க போகின்றனர்.

இப்படத்துக்கு இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,
ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.கதிர்,கலை இயக்கம்: டி.ஆர்.கே.கிரண்,படத்தொகுப்பு: பிரதீப் ஈ.ராகவ்,
சண்டைப்பயிற்சி: பீட்டர் ஹெயின்,உடை வடிவமைப்பு: தினேஷ் மனோகரன்,நடன அமைப்பாளர்: ஆசர்
கூடுதல் எழுத்து: ஆர்.மோகனவசந்தன், திரள் சங்கர்

ஆர் எஸ் இன்போடெயிண்ட்மெண்ட் எல்ரெட் குமாரின் 16 ஆவது தயாரிப்பாக உருவாகும் மண்டாடி திரைப்படத்தின் முதல்பார்வை ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் தாக்கம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் பணிகளுக்காக படக்குழு இராம்நாதபுரம் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் குழுமி இருக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.

காதல், விடாமுயற்சி, மீட்பு மற்றும் உறவுகளின் பின்னணியுடன் விளையாட்டு உலகத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான பயணமாக, இது உருவாகிறது.

மண்டாடி என்றால் என்ன?

காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரையே இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மண்டாடி என்று அழைக்கின்றனர்.

மீன்பிடிக்கப் போகும் போது படகையும் உடன் வரும் மீனவர்களையும் வழிநடத்துவதைப் போல,பாய்மரப் படகுப் போட்டியின் போதும் வழிநடத்தக்கூடியவர் மண்டாடி.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இந்தப் படத்தைப பற்றி கூறியதாவது….

எனது கனவைப் புரிந்து கொண்டு, என் கதையைக் கேட்பதற்கும், இந்த வாய்ப்பை அளித்ததற்கும் எல்ரெட் சார் மற்றும் வெற்றிமாறன் ஆகியோருக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். சூரி சாரின் காமெடியன் டூ கதாநாயகன் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அவருக்கென்று எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது. சூரி சாரின் விஷன் மற்றும் அவர் கதை தேர்ந்தெடுக்கும் விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

‘மண்டாடி’ திரைப்படம் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாக அமையும். மேலும் இந்தக் கதையில் வரும் கதாபாத்திரத்திற்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது — அதை சூரி சார் போன்றவர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.
வெற்றி மாறன் சார், படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசராக இருக்கின்றது எனக்கு ஒரு ஊக்கமும் வழிகாட்டுதலுமாக இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையும், எஸ்.ஆர்.கதிர் அவர்களின் ஒளிப்பதிவும் சேர்ந்து, உண்மையான உணர்வுகளைத் தரும் விளையாட்டு ஆக்‌ஷன் படமாக உருவாகிக் கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts