மதுரை அன்புவின் புதிய முயற்சி – திரையுலகுக்கு நல்லதா? கெட்டதா?
எஸ்டிசி சினிமாஸ் பகித் உஸ்மான் என்பவருடன் பிரபல விநியோகஸதர், தயாரிப்பாளர் மற்றும் முக்கிமான நிதியாளர் என்கிற பெருமைகளைக் கொண்ட மதுரை அன்பு இணைந்திருக்கிறார்.
இருவரும் இணைந்து ஏஎஃப்ஓ எண்டர்டெயிண்ட்மெண்ட் என்கிற புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்நிறுவனம் மூலம் அனைத்து மொழித் திரைப்படங்களும் விநியோகம் செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
மதுரை அன்புவின் இந்தப் புதிய முயற்சிக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வருகிறது.
அவை என்னென்ன?
தமிழ்த்திரைப்படத் துறையில் விநியோகஸ்தர் என்கிற இனமே அழிந்து கொண்டிருக்கிறது என்று சொல்லப்படும் சூழலில் மதுரை அன்பு இத்துறையில் முழுமூச்சாக இறங்கியிருப்பது வரவேற்கத் தக்க விசயம் என்கிறார்கள்.
அவர் ஏற்கெனவே விநியோகஸ்தர்தான் என்றாலும் இப்போது இப்படி ஒரு நிறுவனம் தொடங்கியிருப்பதன் மூலம் முன்னைக்காட்டிலும் அதிகப்படங்கள் விநியோகம் செய்வார்கள், அதோடு சிறுபடங்களின் தமிழக உரிமை பெறும் திட்டமும் இருப்பதால் இது தமிழ்த்திரைப்படத்துறைக்கு மிகவும் நல்லது என்கிறார்கள்.
அதேசமயம், அவர் படங்களுக்குக் கடன் கொடுக்கும் நிதியாளராகவும் இருக்கிறார். அவரிடம் பணம் வாங்கி எடுக்கப்படும் படங்களின் விலை மற்றும் வெளியீட்டுத் தேதி ஆகியனவற்றை அவரே தீர்மானிப்பார்.
ஒரு படத்துக்கு ஒரு விநியோகப்பகுதியில் அதிக விலை கொடுக்க வேறொருவர் இருந்தாலும் இவரிடம் படம் போனால் இவர் விலை குறைவாகச் சொல்வார். அதை தயாரிப்பாளர் ஏற்றே ஆகவேண்டும் இல்லையெனில் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய அபாயமும் உள்ளதென்கிறார்கள்.
இவற்றில் எது சரியாக இருக்கப்போகிறது என்பது போகப்போகத்தான் தெரியும்.











