சினிமா செய்திகள்

எஸ்.ஜே.சூர்யாவுக்குப் பதில் மாதவன் பகத்பாசிலுக்குப் பதில் நிவின்பாலி – பென்ஸ் மாற்றங்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஜி ஸ்குவாட் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அந்நிறுவனம் சார்பாக, விஜய்குமார் நடிப்பில் உருவான ‘ஃபைட் க்ளப்’ படத்தைத் தயாரித்து வழங்கினார்.

அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அப்படத்துக்கு பென்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள்.இந்தப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அவர் தயாரிக்கிறார்.

அப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜே எழுதியிருக்கிறார்.அப்படத்தை ‘ரெமோ’, ‘சுல்தான்’ ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

பென்ஸ் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 14,2024 அன்று வெளியானது.

அதன்பின்,இப்படத்தில் நாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்று சொல்லப்பட்டது.அதோடு,இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.

அதன்பின், இந்தப்படக் கதை தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தால் இப்படம் கைவிடப்பட்டுவிட்டதாகவும் பேச்சு வந்தது.

அந்தப் பேச்சு வந்த நேரத்திலேயே அது பொய்,இப்படத்தின் படப்பிடிப்பு 2024 நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கும் என்று சொன்னார்கள்.

ஆனால், அப்படி நடக்கவில்லை.

இராகவா லாரன்ஸ் காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்புக்குப் போய்விட்டார்.

இப்போது மீண்டும் பென்ஸ் படத்துக்கு உயிர் வந்திருக்கிறது.

மே 12 ஆம் தேதி முதல் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள். மே 12 இல் தொடங்கி மே இறுதிவரை சுமார் பதினெட்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.

அதோடு,இப்படத்தின் நடிகர் பட்டியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யாவுக்குப் பதிலாக மாதவன் நடிக்கவிருக்கிறார் என்றும் பகத் பாசிலுக்குப் பதிலாக நிவின்பாலி நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

எஸ்.ஜே.சூர்யா,பகத் பாசில் ஆகியோரிடம் கேட்டிருந்த தேதிகளில் இந்தப் படப்பிடிப்பு நடக்கவில்லை.இங்குள்ள குழப்பங்களைச் சரி செய்து படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று நினைக்கும் போது அவர்கள் தேதிகளில் நிறைய குழப்பங்கள்.அதனால் அவர்களுக்குப் பதிலாக மாதவன் மற்றும் நிவின்பாலியை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.

தமிழ் தவிர பிறமொழிகளிலும் பெரிய வியாபாரம் செய்ய வேண்டுமென்கிற நோக்கத்தோடு நடிகர்கள் பட்டியல் உருவாகிறது.அதன் காரணமாகவே மலையாள நடிகர் பகத் பாசில் இல்லையென்றால் அங்கிருந்தே நிவின்பாலியை அழைத்து வருவோம் எனத் திட்டமிட்டுச் செய்திருக்கிறார்கள்.

திட்டமிட்டபடி மே 12 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கிவிட்டால் மேற்கொண்டு மாற்றங்கள் இல்லாமல் படம் தொடரும்.

Related Posts