சினிமா செய்திகள்

மிஷ்கினின் சைக்கோ கதையும் அகமொழிவிழிகள் கதையும் ஒன்றா? – இயக்குநர் விளக்கம்

சசீந்திரா கே.சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அகமொழி விழிகள்.இப்படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர் இவர்களுடன்,தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா,ராஜீவ் கண்ணன் , சி.கே.ஆர், ஹரிதா,ராஷீ,தீபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரித்துள்ளார்.

மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 26 அன்று நடைபெற்றது.

அந்நிகழ்வில் இயக்குநர் சசீந்திரா கே.சங்கர் பேசியதாவது …

இங்கு எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. திரைப்படத்தை, மனிதனை, அரசியலை தூக்கிப் பிடிக்கும் மீடியா நண்பர்களுக்கு நன்றி. என் தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. என் கனவை புரிந்து நான் சொன்ன கதையை நம்பி இந்தப்படத்தை எடுக்க ஒரு தயாரிப்பாளர் முதலீடு செய்ய வேண்டுமல்லவா? அது முக்கியம். ஒரு தயாரிப்பாளர் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை. சினிமா தான் நம் இணைப்புக்கு தூண்டுகோலாக இருக்கிறது.நான் மலையாளி. ஆனால், என் பாட்டி தமிழ் தான்.என் வேர் தமிழ் தான்.மலையாளம் கன்னடம் தெலுங்கு எல்லாம் தமிழில் இருந்து வந்த மொழிகள் தான்.வந்தாரை வாழ வைக்கும் தமிழ் மொழி.இந்தப்படத்தை உங்கள் கையில் கொடுத்து விட்டோம் வாழ வையுங்கள்.என்னை இயக்குநராக்கியது தமிழ் தான்.நான் இங்கு தான் பல ஆண்டுகளாக வேலை பார்த்தேன். இந்த மொழி வாழ வைக்கும் என நம்பிக்கையில் தான் இருக்கிறேன். அகமொழி விழிகள் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும்.

இசைக்கச்சேரிகளில் பாடல் பாடும் ஒரு இளைஞன், தன் காதலிக்கு ஒரு பிரச்சனை ஏற்பட, அதற்கெதிராக களமிறங்குகிறான்.பார்வை இல்லாத அவன் எதிரிகளை எப்படிப் பழி தீர்க்கிறான் என்பதை,முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில், பரபர திருப்பங்களுடன் சொல்லி, இரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும் அட்டகாசமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது

இவ்வாறு அவர் பேசினார்.

இயக்குநர் சொன்ன இந்தக்கதை, மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதிராவ்,நித்யாமேனன் உள்ளிட்ட பலர் நடித்த சைக்கோ படத்தின் கதையை அப்படியே ஒத்திருக்கிறது.

இதுபற்றி இயக்குநர் சசீந்திரா கே.சங்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது….

ஒரு திரையில் பதிவு செய்யப்படுகின்ற கதைகள். நாம எல்லாரும் பார்க்கின்ற, வாழ்கின்ற, இந்த வாழ்க்கையின் நிஜங்களைத் தான் கற்பனையாக மனசுக்குள் தெளிவாகின்றது.அப்படிப் பார்த்தால் எத்தனையோ கோடி ஜனங்கள் இந்த பூவுலகத்தில் வாழ்கின்றனர்.அந்த வாழ்க்கை எல்லாமே வித்தியாசமா தான் இருக்கு. என்னுடைய அனுபவங்கள் அது எனக்கு ஒரு பாடமாக இருக்கலாம். ஆனா அடுத்த ஆளோட அனுபவங்கள் அது எனக்கு  வித்தியாசமாக தோன்றும். 
“அகமொழி விழிகள்,”திரைப்படத்தின் கதை முற்றிலும் மாறுபட்டது. ஏனென்றால் அது என்னோட வாழ்க்கையில் நான் பார்த்து நின்ற நிஜங்களோட ஒரு திரைக்கதை தான். நீங்க சொன்ன பிரபல டைரக்டரோட படம் நான் பார்த்திருக்கிறேன். அந்தப் படத்தோட கதையும். நம்ம படத்தோட கதையும் மாறுபட்ட அனுபவமாக படத்தைப் பார்க்கின்ற மக்களுக்குத் தோன்றும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts