ரெட்ரோ படத்தால் அருள்நிதி படக்குழு பதட்டம் – விவரம்

அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமொன்றை பம்பர் பட இயக்குநர் எம்.செல்வக்குமார் இயக்குகிறார். சித்தார்த் நடிப்பில் என்.ராஜசேகர் இயக்கத்தில் வெளியான மிஸ்யூ படத்தைத் தயாரித்த நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் ஷிமோகாவில் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.தொடக்கத்திலேயே சில சிக்கல்கள் ஏற்பட்டதால் ஒளிப்பதிவாளர் மாற்றம் உள்ளிட்ட சில மாற்றங்களைச் செய்து படப்பிடிப்பு தொடங்கினார்கள்.
மார்ச் மத்தியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விட்டுவிட்டு நடந்து கொண்டிருக்கிறது.
இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குநர் அமீர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்படக்குழு இப்போது மிகவும் திடுக்கிட்டுப் போயுள்ளது என்று சொல்கிறார்கள்.ஏன்?
மே முதல் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா,பூஜா ஹெக்டே,ஜோஜுஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் ரெட்ரோ.
இந்தப்படத்தின் மையக் கதையும் அருள்நிதி படத்தின் மையக் கதையும் ஒன்றாக இருக்கிறதாம்.இதனால்தான் அருள்நிதி படக்குழு அதிர்ச்சி அடைந்திருக்கிறது.
மொத்தத் திரைக்கதையையும் எழுதி முடித்து பாதிக்கு மேல் படப்பிடிப்பையும் முடித்த பிறகு,அதேபோன்ற கதையம்சத்துடன் ரெட்ரோ வெளியாகியிருக்கிறது.
இதனால், இப்போதைக்கு சில மாற்றங்களைச் செய்து வேலைகளைத் தொடரத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதோடு,
மையக்கதை மட்டும்தான் ஒரேமாதிரி மற்றபடி திரைக்கதையின் போக்கு காட்சிகள் மற்றும் காரணங்கள் ஆகிய அனைத்தும் ரெட்ரோவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்று அவர்களுக்குள்ளான பேச்சுகளில் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.
வெளிநாட்டுப் படங்களைப் பார்த்து அவற்றைப் போலவே திரைக்கதை அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதால்தான் அவ்வப்போது இப்படி நடக்கிறது.
எது எப்படியிருந்தாலும் இரண்டு படங்களும் ஒரேமாதிரி மையக்கதையை மட்டுமல்ல திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் போரடிக்காமல் சுவாரசியமாகப் பார்க்கிற மாதிரி படம் எடுத்துவிட்டால் இதெல்லாம் ஒரு சிக்கலே இல்லை நாங்கள் மகிழ்ச்சியாகப் படம் பார்ப்போம் என்பது பார்வையாளர்களின் எண்ணம்.
அதனால் நம் படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்கிற நம்பிக்கையில் பணிகளைத் தொடர்கிறதாம் அருள்நிதி படக்குழு.