சினிமா செய்திகள்

நயன்தாரா படம் தள்ளிப் போகிறது எதனால்?

உன்னைப் போல் ஒருவன், பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி, நயன்தாராவை வைத்து எடுத்துள்ள படம் கொலையுதிர் காலம்.

இப்படத்தில் பிரதாப் போத்தன், பூமிகா, ரோகிணி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எட்செட்டெரா எண்டெர்டய்ன்மெண்ட் நிறுவனத்தின் வி.மதியழகன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் ஜூன் 14ஆம் தேதியன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது.

கடைசிநேரத்தில் பாலாஜி குமார் என்பவர், கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது கொலையுதிர் காலம் திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்த நீதிபதி, இவ்விவகாரத்தில் ஜூன் 21ஆம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படி தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனால் நாளை வெளியாக வேண்டிய படம் தள்ளிப்போகும் என்று சொல்லப்படுகிறது.

அதற்கு இவ்வழக்கைக் காரணமாகச் சொல்கிறார்கள். உண்மையில் பட வியாபாரத்தில் பல சிக்கல்கள் நேர்ந்ததே படம் தள்ளிப்போகக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இப்படத்தைத் தமிழகம் முழுக்க மினிமன் கியாரண்டி முறையில் வாங்க யாரும் முன்வரவில்லை.இதனால் டிஸ்டிரிபியூசன் எனும் விநியோக முறையில் கொடுக்க தயாரிப்பாளர் முன்வந்திருக்கிறார்.

ஆனால் அதற்கும் பலர் தயாராக இல்லை என்கிறார்கள். இரு பகுதிக்கு இருபது இலட்சம் கொடுத்து படத்தை வாங்கி வெளியிடுகிறார்கள், அங்கு பத்து இலட்சம் மட்டுமே வசூலாகிறது என்றால் மீதி பத்து இலட்சத்தை தயாரிப்பாளர் திருப்பித் தந்துவிடவேண்டும் என்பதுதான் விநியோக முறை.

இம்முறையில் விநியோகஸ்தர்களுக்கு நட்டம் வராது என்றாலும், மீதி பணத்தைத் திருப்பி வாங்குவதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது என்பதால் விநியோக முறையில் பணம் கொடுக்கவும் பலர் தயங்கியதாலே பட வெளியீடு தள்ளிப்போகிறது என்கிறார்கள்.

Related Posts