செய்திக் குறிப்புகள்

கிருத்திகா உதயநிதி மீது சிம்புவுக்கு சந்தேகம் – பேப்பர் ராக்கெட் விழாவில் வெளிப்படை

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் இணையத்தொடர் “பேப்பர் ராக்கெட்”.

2022 ஜூலை 29 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரித்துள்ளார். இத்தொடரின் முன்னோட்ட வெளியீடு படக்குழுவினர், பிரபலங்கள் கலந்து கொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

அந்நிகழ்வில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி பேசியதாவது..,

“பேப்பர் ராக்கெட் என் இதயத்திற்கு நெருக்கமான தொடர். இது எனக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்துள்ளது. படக்குழுவில் இணைந்த சினிமாவின் பெரிய நட்சத்திரங்களுடன், இந்த பேப்பர் ராக்கெட் ஒரு அற்புதமான இடத்தை வந்தடைந்துள்ளது. பெரும்பாலும், திரில்லர் வகை அடிப்படையிலான தொடர்கள் தான் ஓடிடி இயங்குதளங்களின் விருப்பமான தேர்வாக இருக்கும். ஜீ5 இந்தத் தொடரில் ஆர்வம் காட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதைச் செய்ததற்காக ஜீ5 குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. இதுவரை நான் பணியாற்றிய தயாரிப்பாளர்களில், சிறந்த தயாரிப்பாளர் பெண்டெலா சாகர் தான். நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பால் இந்தத் தொடரை உயர்த்தியுள்ளனர். தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் சிறந்த பங்களிப்புகளால் அதை அழகுபடுத்தியுள்ளனர். குறிப்பாக, பேப்பர் ராக்கெட்டில் ஒலி வடிவமைப்பு முக்கியப் பங்கு வகித்துள்ளது. தபஸ் நாயக்கின் அற்புதமான பணிக்காக அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். பேப்பர் ராக்கெட் பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.

உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது..,

ஜீ5-க்கு முதலில் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்தத் தொடர் கண்டிப்பாக பெரிய வெற்றியடையும், அதற்கு எனது வாழ்த்துகள். ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு நடக்கும் போது, கிருத்திகாவின் தனிப்பட்ட வாழ்கையில் பல சிக்கல்கள் இருந்தாலும், அதைத் தாண்டி இந்தத் தொடரை முடித்துள்ளார். கிருத்திகா இந்தக் கதையுடன் மிகவும் ஒன்றிணைந்துவிட்டார், அதனால் தியேட்டரில் வெளியாகும் படங்களுடன் எதிரித்துப் போராடும் மனநிலையில் இருக்கிறார்.ஓடிடி மற்றும் திரையரங்கு வெளியீடுகள் வேறுபட்டவை என்பதை அவர் அறிந்திருந்தாலும், தியேட்டர் பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்க்க விரும்புகிறார் என்றார்.

நடிகர் சிலம்பரசன் பேசியதாவது……

முதலில் இங்கு நன்றி கூற வேண்டும், அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது உதவிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அங்கிளுக்கும், உதயநிதி அண்ணாவுக்கும் நன்றி. உதயநிதியை அணுகுவது வெகு இயல்பாக ஈஸியாக இருக்கிறது. அவர் உதவியதோடு நிற்காமல் தொடர்ந்து விசாரிப்பது பெரிய விசயம். அதற்கு நன்றி. கிருத்திகா மேடமும் நானும் முன்பே ஒரு படம் செய்வதாக இருந்தோம். எனக்கு பெண் இயக்குநர் ஆண் இயக்குநர் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஆனால் இவர் ஹாபியாக செய்கிறாரோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவரது உழைப்பு பிரமிப்பு தருகிறது. இருப்பினும், அவருடைய அலாதியான ஆர்வத்தையும், தீவிர உழைப்பையும் கண்டு நான் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைகிறேன், அது இந்த வெளியீட்டில் தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தொடர் அற்புதமான தொடர், படக்குழுவில் உள்ள அனைவருக்கும் இந்தத் தொடர் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,

இந்தப் படத்தில் பெரிய அனுபவம் இருக்கிறது. இப்போதெல்லாம் படத்தில் இருக்கும் நல்ல காட்சிகளை டிரெய்லரில் போட்டு படம் பார்க்க முடியாமல் செய்து விடுகிறார்கள்.இயக்குநர் கிருத்திகா திறமையான நபர், அவருடைய திறமையை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தில் பெரிய அனுபவங்களை கிருத்திகா பார்வையாளர்களுக்குக் கொடுத்திருக்கிறார். தொடர் சிறப்பாக வந்துள்ளது. சிக்கலான திரைக்கதை அமைப்புடன் பார்வையாளர்களைக் குழப்புவதைத் தவிர்த்து, எளிமையான, நேர்த்தியான மற்றும் தெளிவான கதைகளைக் கொண்ட திரைப்படங்களையும் தொடர்களையும் அனைவரும் உருவாக்கத் தொடங்கினால் நன்றாக இருக்கும். இந்தத் தொடர் பிரமாதமாக இருக்கிறது, ஒட்டுமொத்தக் குழுவுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது..,

இயக்குநர் கிருத்திகா, படத்தை கதையாக வித்தியாசமாகவும், தெளிவாகவும் புரிந்துகொள்கிறார். இந்தப் படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது எனக்குப் பொறாமையாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இந்தத் தொடர் இருக்கும். ஒரு வெப் தொடர், நடிகர்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும். இந்தத் தொடரில் பல நடிகர்களின் திறமை விரைவில் வெளிவரும் என்று நான் நம்புகிறேன். ஜீ5 உடைய விலங்கு தொடர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தத் தொடரும் அப்படி வெற்றி அடைய படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள் என்றார்.

நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசியதாவது..,

கிருத்திகா ஒரு திறமையான இயக்குநர். இந்தப் படத்தில் அவர் செய்திருக்கும் விசயத்தை டிரெய்லர் மூலமாக என்னால் உணர முடிகிறது. கிருத்திகா மிகப்பெரிய இயக்குநராக எனது வாழ்த்துகள். இதில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றார்.

டிரெய்லர் வெளியீட்டின்போது தொடரில் இடம்பெறும் இரண்டுபாடல்கள் திரையிடப்பட்டன. அவற்றிற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts