Uncategorized செய்திக் குறிப்புகள்

அடங்கமறு குழுவுடன் இன்னொரு படம் – ஜெயம்ரவி விருப்பம்

ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் உருவான படம் அடங்கமறு.

டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்தப் படம் பல போட்டிகளையும் தாண்டி வசூலில் முன்னணியில் இருக்கிறது என்கிறார்கள்.

இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் நாயகி ராஷி கண்ணா, நடிகர்கள் மேத்யூ வர்கீஸ், மைம் கோபி, முண்டாசுப்பட்டி ராமதாஸ், கலை இயக்குனர் இளையராஜா, தயாரிப்பாளர் ஆனந்த் ஜாய், ஆடை வடிவமைப்பாளர் கவிதா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் படத்தின் வசனகர்த்தா விஜி பேசியதாவது….

ஜெயம் ரவியின் அண்ணன் மோகன்ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது ரவி இந்த அளவு மகிழ்ச்சியாக இருந்து நானும், அப்பாவும் பார்த்ததில்லை என்றார். அவர் தேர்ந்தெடுத்து நடித்த படம் என்பதும் இந்த மகிழ்ச்சிக்குக் காரணம். அடங்க மறுவுடன் வெளியான மற்ற படங்களும் வெற்றி பெறணும் என எந்தப் பொறாமையும் இல்லாமல் இருந்த இந்தக் குழுவினரின் மனசு தான் இந்தப் பெரிய வெற்றிக்குக் காரணம் என்றார்.

நான் எந்தப் படத்துக்கும் இதுவரை தியேட்டர் விசிட் போனதில்லை. இந்தப் படத்துக்கு இயக்குநரும், ஹீரோவும் அழைத்ததால் நானும் விசிட் போயிருந்தேன். மதுரையில் மிகப்பெரிய கூட்டத்தில் போலீஸிடம் அடி வாங்கினேன். ஒரு படத்தின் உண்மையான வெற்றி எங்கு தெரியும் என்றால் தியேட்டரில் தான் தெரியும். அதை நான் என் கண்ணாலேயே பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.

முதல் படத்திலேயே என்னை வெற்றிப்படத் தயாரிப்பாளராக மாற்றிய ஒட்டுமொத்தக் குழுவுக்கும் நன்றி. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இது அடுத்தடுத்து சிறந்த படங்களைக் கொடுக்க எங்களுக்குக் கூடுதல் பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறது. அடுத்த படத்தின் கதை இந்தப் படத்தை விட 10 மடங்கு மிகப்பெரிய படமாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்.

இந்தப் படம் ஒரு குழு முயற்சி. இந்தக் கதை மீது என்னை விட அதிக நம்பிக்கை வைத்தது சுஜாதா மேடம் தான். ஜெயம் ரவி எனக்கு இப்போதும் ஒரு நல்ல குருவாக இருக்கிறார். என்னை வழிநடத்துகிறார். என்னை எப்போதும்  ஊக்கப்படுத்துவார். அடுத்து ஒரு பெரிய படத்தைத் திட்டமிட்டு வருகிறோம், அதைச் சரியான நேரத்தில் அறிவிப்போம். என்னை விட அதிகம் உழைத்தது உதவி இயக்குநர்களாக இருந்த என் நண்பர்கள் தான். தியேட்டர் விசிட் போனபோது நிறையப் பெண்கள் மிகவும் படத்தோடு ஒன்றிப் பேசினார்கள், இது தான் படத்தின் உண்மையான வெற்றி என்றார் இயக்குநர் கார்த்திக் தங்கவேல்.

தனி ஒருவன் வெற்றி பெற்றபோது பத்திரிகையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டானது. அடங்க மறு படத்தின் விமர்சனங்களைப் படித்த போது அது இன்னும் பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. கதை என்ன இருந்தாலும் அதைக் கொடுக்கும் விதம் மிக முக்கியம், இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கான அனைத்துப் பாராட்டுகளும் கார்த்திக்கைத் தான் சாரும். இந்தப் படத்தின் வெற்றி மூலம் கார்த்திக் மற்றும் சுஜாதா அவர்களைச் சிவப்பு கம்பளம் விரித்து தமிழ் சினிமாவில் வரவேற்கிறோம். நான் கதையை நம்பியதை விட கார்த்திக்கை நம்பினேன். எல்லோரிடமும் பேசி மயக்கி வேலை வாங்கி விடுவார்.  இந்த மொத்தக் குழுவுடன் மீண்டும் இன்னொரு படத்தில்  இணைய வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார் நாயகன் ஜெயம் ரவி.

Related Posts