சினிமா செய்திகள்

தலித் பெண்ணுக்கு ஜானகி என்று பெயர் – மலையாளப் படத்துக்கு எதிர்ப்பு

பிரவீன் நாராயணன் இயக்கத்தில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலரின் நடிப்பில் ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா என்ற மலையாளப் படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தில் ஜானகி என்ற பெயரை நீக்க வேண்டும் என்று கூறி தணிக்கைத் துறை இந்தப் படத்தை வெளியிட அனுமதி மறுத்தது.

இதை எதிர்த்து அப்படத் தயாரிப்பு நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. கடந்த வாரம் இந்த மனு மீது விசாரணை நடைபெற்ற போது மத்திய சினிமா தணிக்கை வாரியத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

ஜானகி என்ற பெயரால் என்ன பிரச்னை இருக்கிறது? இந்தப் பெயரை ஒரு மதத்துடன் ஏன் தொடர்புப்படுத்துகிறீர்கள்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில் ஜூலை 30 அன்று இந்த மனு மீது மீண்டும் விசாரணை நடைபெற்றது.

அப்போது நீதிபதி நகரேஷ், படத்திற்கு என்ன பெயர் வைக்க வேண்டும்? கதை எப்படி இருக்க வேண்டும்? என்பதில் தலையிட மத்திய தணிக்கை வாரியத்திற்கு அதிகாரம் கிடையாது. கலைஞனின் கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதற்கு உரிமை கிடையாது. ஜானகி என்ற பெயரை எதற்காக நீக்க வேண்டும் என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். சினிமாவுக்கு பெயர் வைப்பது கலைஞனின் உரிமையாகும். இந்தியாவில் 80 சதவீதம் பேருக்கும் தெய்வத்தின் பெயர்தான் உள்ளது. இவ்வாறு நீதிபதி கூறினார்.

இந்த விசாரணை நீண்டுகொண்டே போகும் நிலையில், ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா படத்திற்கு அனுமதி மறுப்பதைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் உள்ள தணிக்கைத் துறை அலுவலகம் முன் மலையாள சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஜூன் 30 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் உன்னிகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதேசமயம், இந்தப் படத்தை எதிர்ப்போரும் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

இந்தப் படத்தில், தலித்துகளுக்கும் பிராமணர்களுக்கும் இடையேயான சர்ச்சைக்குரிய கதை காட்டப்பட்டுள்ளது.ஒரு தலித் பெண்ணுக்கு “ஜானகி” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஆட்சேபணைக்குரியது மற்றும் இது இந்து உணர்வுகளைப் புண்படுத்துகிறது.
தணிக்கை வாரியம் இந்த ஆட்சேபனைக்குரிய பகுதியை நீக்க வேண்டும் என்று குரலெழுப்பி வருகின்றனர்.

என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts