விமர்சனம்

மயூரன் – திரைப்பட விமர்சனம்

கிராமப் புறங்களிலிருந்து பல கனவுகளோடு படித்துப்பட்டம் வாங்க வேண்டும் என்று நகரத்துக்கு வந்து கல்லூரியில் சேருகிறார்கள் பல மாணவர்கள். அவர்களின் வாழ்க்கையை தங்கள் சுயநலத்துக்காக வேட்டையாடும் கொடிய மனிதர்களை அடையாளம் காட்டுகிற படம் மயூரன்.

அஞ்சன், பாலாஜி ராதாகிருஷ்ணன், அமுதவாணன் ஆகியோர் மாணவர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களில் நாயகன் அஞ்சனுக்குப் படத்தில் சேகுவேரா என்று பெயர். பாலாஜி ராதாகிருஷ்ணனுக்கு முத்துக்குமார் என்று பெயர்.

சேகுவேரா என்கிற பெயருக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் நடித்திருக்கிறார் அஞ்சன். கிராமப்புற மாணவர்களைச் சரியாகப் பிரதியெடுத்திருக்கிறார் பாலாஜி ராதாகிருஷ்ணன்.

நாயகி அஸ்மிதாவுக்கு ஒரு பாடல் சில காட்சிகளில் வரும் வாய்ப்பு மட்டுமே. அதற்குப் பொருத்தமாக இருக்கிறார்.

ஜான் என்கிற வேடத்தில் நடித்திருக்கும் ஆனந்த் சாமியும் பெரியவராக நடித்திருக்கும் வேலராமமூர்த்தியும் தங்கள் நடிப்பால் பாத்திரத்துக்குப் பலம் சேர்க்கிறாகள்.

தோழராக நடித்திருக்கும் கலை கவனிக்க வைக்கிறார்.

பரமேஷ்வரின் ஒளிப்பதிவு படத்தின் தன்மைக்குப் பொருத்தமாக இருக்கிறது.

சிதம்பரம் போன்ற நடுத்தரமான நகரங்களில் கூட நுழைந்திருக்கும் கொடிய பழக்கத்தையும் அதைச் சந்தைப்படுத்த அவர்கள் கடைபிடிக்கும் வழிகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நந்தன் சுப்பராயன்.

முதல்பாதியில் மெதுவாகப் போகும் படம் இரண்டாம் பாதியில் வேகம் பிடிக்கிறது. இறுதிக்காட்சியில் பாலாவின் சிஷ்யன் என்பதைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

சட்டப்படி தவறென்றாலும் இவர்களை இப்படித்தான் செய்யணும் என்று நினைக்க வைத்ததில் வெற்றி பெறுகிறார் இயக்குநர்.

Related Posts