சினிமா செய்திகள்

63 ஆவது படத்துக்காக விக்ரம் செய்த செயல் – தயாரிப்பாளர் மகிழ்ச்சி

நடிகர் விக்ரமின் 63 ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது.

அதில்….

தமிழ்சினிமாவின் பொற்காலம் முதல் நவீனகாலம்வரை வெற்றியின் முத்திரையை பதித்துவரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ்,தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “சீயான் 63” படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே இரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம், தற்போது படப்பிடிப்பு கட்டத்திற்குள் நுழைந்திருப்பது இரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.

சீயான் விக்ரமின் 63 ஆவது திரைப்படமாக உருவாகும் இந்தப்படத்தை இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்குகிறார்.முன்னதாக “இருமுகன்” திரைப்படத்தின் மூலம் வெற்றிகரமான கூட்டணியை வழங்கிய விக்ரம் – ஆனந்த் சங்கர் இணைவு,சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருப்பதால் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ள நிலையில்,இதற்காக விரிவான முன்தயாரிப்புப் பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதன்மூலம் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை இரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் படக்குழு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

“சீயான் 63” அனைவரும் இரசிக்கும் வகையிலான ஃபேமிலி திரில்லர் ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளது.விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன்,குடும்பப் பார்வையாளர்களையும் கவரும் வகையிலான உணர்வுப்பூர்வமான கதை,பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இணைந்த முழுமையான விருந்தாக இந்தப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர்,ஊர்வசி,சம்யுக்தா ஹெக்டே,ரியா ஷிபு,வி.டி.வி.கணேஷ்,சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை டி.ஜி.தியாகராஜன் வழங்க,செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பதும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.அவரது இசை,படத்தின் உணர்ச்சி மற்றும் திரில்லர் அம்சங்களை மேலும் உயர்த்தும் என இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொழில்நுட்பக் குழுவிலும் பல முன்னணிக் கலைஞர்கள் இணைந்துள்ளனர்.ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர் ISC,தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன்,வசன எழுத்தாளராக ஷான் கருப்புசாமி,சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா,நடன அமைப்பாளராக பிருந்தா,படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா,கலை இயக்குநராக சூர்யா ராஜீவன்,ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி,விளம்பர வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் ஸ்டில்ஸ் புகைப்படக் கலைஞராக தேனி முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

விக்ரமின் தனித்துவமான திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக உருவாகும் “சீயான் 63”, வலுவான கூட்டணி, தரமான தொழில்நுட்பக் குழு,பெரிய தயாரிப்பு மதிப்பு மற்றும் அனைவரையும் கவரும் ஃபேமிலி திரில்லர் ஆக்சன் கதை ஆகியவற்றால் தமிழ்சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

அறிவிப்பின் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய “சீயான் 63”, தற்போது படப்பிடிப்பு தொடக்கத்துடன் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துள்ள நிலையில்,விக்ரம் இரசிகர்களும் திரையுலக வட்டாரங்களும் இந்தப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் ஒரு முன்னுதாரணத்தை நடிகர் விக்ரம் ஏற்படுத்தியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

அது என்ன?

இந்தப்படத்தில் நடிப்பதற்காக சுமார் நாற்பது கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் விக்ரம்.தயாரிப்பு நிறுவனமோ,இப்போதைய வியாபார சூழலில் அவ்வளவு சம்பளம் கொடுத்தால்,மொத்தச் செலவு இவ்வளவு,வியாபாரம் இவ்வளவு என்று கணக்குப் போட்டு இரண்டுக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது என்று சொல்லியிருக்கிறது.

இதனால் படத்தின் வேலைகள் தடைபட்டனவாம்.

இதனால்,இப்போது பதினெட்டு கோடி சம்பளம் கொடுங்கள்,பின்னர் வியாபாரம் மற்றும் வசூல் அடிப்படையில் குறிப்பிட்ட விழுக்காடு தொகை எனக்குக் கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

இதை,தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாம்.அதோடு,எல்லா கதாநாயகர்களும் இப்படி இறங்கிவந்தால் எல்லோருக்கும் நல்லது திரைத்துறை செழிப்பாக இருக்கும் என்று விக்ரமை புகழ்ந்து கொண்டிருக்கிறார்களாம்.

Related Posts